ஈச்மென் மொசாத் :03
சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன்.
அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர்.
அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள்.
பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் “குளோஸ் ஈச்மென்”.
சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன?
என்றதற்கு சில்வியாவின் பதில் “அவர் பெயர் ரிக்கார்டோ கிளமெண்ட்”.
ஹெர்மன் மூளையில் ஒரு கணம் மின்னல் வெட்டியது.
அப்பன் பெயர் “ரிக்கார்டோ கிளமெண்ட்” மகன் பெயர் “குளோஸ் ஈச்மென்”.
எங்கோ இடித்தது அவருக்கு, குடும்பபெயர் இப்படி இருக்காதே, ஒருவேளை தத்துபிள்ளையோ? என்றெல்லாம் யோசித்து சொன்னார்.
“சரி வீட்டுக்கு அழைத்து வா, விசாரிப்போம்”.
இதுதான் ஈச்மென் செய்த பெரும் தவறு, மகன்களின் அடையாளத்தை மாற்ற தவறிவிட்டார்.
இங்குதான் அவர் தலைவிதி பல்லைகாட்டியது அல்லது செய்த மொத்தபாவத்தில் பாதி மகனாகவும் மீதி சில்வியாகவும் பிறந்திருந்தது.
பள்ளிக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த சில்வியா பின்னால் வழக்கம்போல மவுனராகம் கார்த்திக்காய் “ஏய்..என்னோடு கா..பி ஷாப்..ட வா..ரியா” என பின்னால் வந்த குளோசிடம் புன்னகை சிந்தினாள் சில்வியா.
அவ்வளவுதான் இருவருக்கும் முன்னால் காப்பி இருந்தது, அது யாருக்கு வேண்டும்?
உன்னை பற்றி சொல் என்றாள். காதலிக்கும் பெண் கேட்டால் டிராக்டர் ஓட்டுபவன் பென்ஸ்கார் என்பான், விமான நிலைய ஊழியர் பைலட் என்பான் அல்லவா? குளோசும் அள்ளிவிட்டான்
நாங்கள் ஜெர்மானியர், எனக்கு 2 வயதாக இருக்கும்பொழுது ஹிட்லர் எனக்கு நெற்றியில் ஸ்வாஸ்திக் அடையாளமிட்டு ஆசீர்வதித்தார்.
எங்கப்பா ஜெரிமனியை ஆட்டுவித்தார், நாங்கள் எல்லாம் பிரபு குடும்பம். ஏதோ யுத்த தோல்வியால் இப்படி ஆகிவிட்டோம் என அள்ளி வீசினான்.
உண்மையில் அவனுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது, கண்ணின் கடைவிழி காதலியர் காட்டிவிட்டால் பொங்கி வரும் ஆனந்தத்தில் அப்படி சொல்லிகொண்டிருந்தான்.
ஆனால் அந்த காதல்பேய் பிடித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை என்பது அவனுக்கும் தெரியாது, சில்வியாவிற்கும் தெரியாது.
பொறுமையாக கேட்ட சில்வியா ஒரு ரதி புன்னகையோடு சொன்னாள், நாளை என் வீட்டுக்கு வா, என் தந்தை உன்னை பார்க்கவேண்டுமாம்.
குளோஸ் அதோடு கனவில் விழுந்தான்.
“சில்வியா.சில்வியா..ஐ லவ் யூ சொல்வியா” என உலகம் சுற்றி அவளோடு டூயட்பாடினான்.
விடிந்தது .. பக்கா அலங்காரம் செய்து கொண்டு சில்வியா வீட்டை அடைந்தான்.
ஏற்கனவே காப்பிகோப்பையின் அளவு, விலை, குளோசின் உளரல் என சகலத்தையும் ஒப்பித்திருந்தாள் சில்வியா.
குளோசை வரவேற்ற ஹெர்மன் விசாரித்தார், தனக்கு மூன்று தம்பிகள் அவர்கள் எக்ஸ் ஈச்மென், ஒய் ஈச்மென், இசட் ஈச்மென் என ஒப்பித்தான் குளோஸ்.
ஹெர்மனின் சந்தேகம் வலுத்தது.
சரி நீ போ, நான் உன் தந்தை வீட்டுக்கு வந்து அவரிடம் பேசுகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டு, ஈச்மென் சம்பந்தபட்ட சகல பத்திரிகை செய்திகளையும் மறுபடியும் படித்தார்.
மறுநாள் ஈச்மென் வீட்டிற்கு சென்றார்.
சம்பந்தம் பேச வந்திருக்கிறார் என குளோஸ் மகிழ்வோடு கதவை திறந்தான்.
50 வயது ஈச்மெனும் லோதரை வரவேற்றார்,
வந்திருப்பது தன் தூக்கு கயிறு என அப்போதைக்கு ஈச்மெனுக்கு தெரியவில்லை
தான் ஒரு யூதன் என்பதை காட்டிகொள்ளாத ஹெர்மன் சகஜமாக பேசிவிட்டு, திடீரென கேட்டார்,
“உங்கள் பையன் சொன்னார், மிஸ்டர் ரிக்கார்டோ நீங்கள் நாஜிபடை வீரரா? சம்பந்தம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டோம், குடும்பரகசியம் இனி நமக்குள்தானே, சொல்லுங்கள் ரிக்கார்டோ”.
ஈச்மெனின் முகத்தில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது (பிண்ணணி இசை போட தேவா இல்லை).
ஆனால் சட்டென மறைத்து சொன்னார்.
“அன்று ஹிட்லருக்கு பின்னால் செல்லவில்லை என்றால் உயிர்போகும், ஜெர்மனியில் வசிக்க முடியாது, அவர் பின்னால் சென்றவர் எல்லாம் நாசிக்கள் அவ்வளவுதான் என்ன செய்ய விதி. நான் யுத்தம் தொடங்கியவுடன் அதிலிருந்தெல்லாம் விலகிவிட்டேன்.
இன்று அமைதியாக இங்கு வசிக்கின்றேன், சர்வம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம். கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் என்னோடும் அர்ஜெண்டினாவோடும் இருப்பதாக. அது இருக்கட்டும் இப்பொழுது நானும் நீரும் அர்ஜெண்டிக்காரர்கள் அவ்வளவுதான்” என்றார் உருக்கமாக.
அன்று அர்ஜெண்டினா முழுக்க பல நாசிக்கள் இருந்தார்கள் இது ஒரு பிரச்சினையே அல்ல என்பது ஈச்மெனுக்கு தெரியும். அதனால்தான் தைரியமாக சொன்னார்.
இருவரும் 30 நிமிடம் பேசினார்கள், ஈச்மெனின் உருவ அமைப்பை நன்கு ஆராய்ந்த லோதர் சொன்னார்.
நான் சர்ச்சிக்கு செல்லவேண்டும், இவர்கள் பழகட்டும் 3 வருடம் கழித்து திருமணம் வைக்கலாம் எனக்கு சம்மதம் என சொல்லிவிட்டு குளோசின் கையை குலுக்கிவிட்டு சென்றார்.
கைகுலுக்கி சென்றவர் சர்ச்சிக்கா சென்றார் இல்லவே இல்லை, எல்லா நாட்டு தூதரகங்களிலும் குறைந்தது 3 உளவு அதிகாரிகளாவது இருப்பர்.
இது தான் உலக நடைமுறை. அவர் இஸ்ரேலுக்கு நெருக்கமான நாட்டின் தூதரகத்தில் போட்டு கொடுத்துவிட்டார்.
” இந்த முகவரியில் ஒருவர் இருக்கின்றார், அவர் மேல் சந்தேகமாக இருக்கின்றது இஸ்ரேலுக்கு சொல்லிவிடுங்கள்”,
சொல்லிவிட்டு மனதிற்குள் சொல்லிகொண்டார், “நான் தனியாள் அல்ல, 60 லட்சம் யூதரின் ஆன்மா”
தகவல் கிடைத்ததும் மொசாத் அவசர கூட்டம் கூட்டபட்டு விவாதிக்கபட்டது,”அவன் எனக்கு வேணும் உயிரோட வேணும்” என்றார் பிரதமர் பென்குரியன்.
சுட்டுகொல்வது மொசாத்திற்கு டீ குடிப்பது போல, ஆனால் உயிரோடு கடத்தவேண்டும், என்பதால் யோசித்தார்கள்.
அப்படியானால் ஒரு அதிரடியான “கேப்டன்” வேண்டும் என தேடினார்கள்.
ஷின்பெட் (இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்புதுறை) ஹீரோ ஒருவர் கண்டுபிடிக்கபட்டார்.
அவரது ஸ்பெஷாலிட்டி தேடபடுவது யாராக இருந்தாலும் லெபனான், சிரியா, எகிப்து என எங்கிருந்தாலும் பிடித்து, வாயினை பொத்தி, நாட்டாமை பொன்னம்பலம் போல தூக்கி வந்துவிடுவார்.
கேப்டன் விஜயகாந்த் சில சினிமாக்களில் டெல்லியிலும், காஷ்மீரிலும் எவ்வளவு சாகசங்கள் செய்வார் அப்படி நிஜமாக செய்த சாகசவீரன்.
இவ்வளவிற்கும் மொசாத் வேறு. ஷின்பெட் வேறு. ஹாய் கூட சொல்லியிருக்க மாட்டார்கள்.
பேருந்தில் ஒரே இருக்கையில் இருந்தால் கூட ஒருவர் மொசாத், ஒருவர் ஷின்பெட்டாக இருக்கலாம்.
ஆனால் இருவருக்கும் தெரியாது.
அவர் ரபி எய்டன், அசகசாய சூரன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் போல பொறுப்பும், கில்லி விஜய் போல வேகமும் சாதுரியமும் கொண்டவர்.
அவரிடம் பொறுப்பும், ஈச்மெனின் குறிப்பு அடங்கிய கோப்பும் கொடுக்கபட்டது.
அழும் சுவர் சென்று செபித்துவிட்டு 12 பேர் அடங்கிய குழுவினர் பயிற்சி முடித்து கிளம்பினர்.
எப்படி கிளம்பினர்?, கிரிக்கெட் அணிபோல மொத்தமாக இறங்கினால் ஏர்போர்ட்டிலே மாட்டிகொள்வர்.
உலகம் முழுக்க பிரிந்தனர்.
பின்னர் லண்டன், பாரீஸ் , பிராங்கபர்ட், லாஸ் ஏஞ்சல்ஸ்,கெய்ரோ என பல நாடுகளிலிருந்து ஒவ்வொருவராய் வந்து அர்ஜெண்டினாவில் இறங்கி களத்தில் இறங்கினர்.
அவர்கள் வருவது ஆண்டவனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்.
ஆனால் லோதர் வந்து நீங்கள் ஜெர்மானியரா என கேட்டதில் ஈச்மெனின் ராணுவ மனது விழித்துகொண்டது. வீட்டை மாற்றியிருந்தார்.
லோதர் குறிப்பிட்ட வீட்டு முகவரிக்கு சென்று கூரியர் பாய் வேடத்தில் கதவை தட்டினால் ஏற்கனவே அந்த வீட்டை காலிசெய்து வேறு அடையாளம் தெரியாத இடத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார் ஈச்மென்.
என்ன இருந்தாலும் ஹிட்லரின் வளர்ப்பு அல்லவா? ரஷ்யர்களிடமே தப்பியர் அவர்.
கையை பிசைந்து நின்றது ரபி எய்டனின் குழு.
ஆனாலும் லோதரிடமோ அல்லது சில்வியாவிடமோ செல்லவே இல்லை.
ஏன் அர்ஜெண்டினாவின் இஸ்ரேலிய உளவாளிகளுக்கே வந்தது தெரியாது.
வீட்டை மாற்றினால் என்ன? கம்பெனி இருக்கிறதல்லவா?
ரகசியமாக பென்ஸ் கார் கம்பெனி பணியாளர் லிஸ்டில் ஊடுருவி ரிக்கார்டோ கிளமென்ட்டின் தகவல்களை தேடினார்கள் கண்டுபிடித்து பின் தொடர்ந்தார்கள்.
8 மாதம் இது நடைபெற்றது, தாங்கள் பார்க்கும் நபரின் உருவத்தையும் கோப்பில் காணப்படும் அடையாளங்களை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?
இது சந்தேகம் தான், இவர்தான் ஈச்மென் என உறுதிபடுத்தபடவில்லை.
அவரிடம் என்று நீர்தான் ஈச்மென் என்பவரோ என கேட்டுவிடவும் முடியாது
சந்தேகத்தின் பேரில் கொல்லலாம், கடத்தினால் விவகாரம் பெரிதாகும்,
இவர் போலி ஈச்மென் என்றால் ஒரிஜினர் ஈச்மென் தற்கொலை செய்தாலும் செய்வார், சிக்கவே மாட்டார்
அதனால் இவரை கண்காணிக்கும் திருப்பணியினை மட்டும் அப்பொழுது சரியாக செய்தார்கள்.
ஈச்மெனும் ஒழுங்காக வேலைக்கு சென்றார், பேருந்தில் திரும்பினார், சமத்து அகதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார், அவர்தான் ஈச்மெனா என்பதில் மொசாத்திற்கே குழப்பம்.
இந்நிலையில் ஒருநாள் பெரிய கேக் வாங்கினார் ஈச்மென், அதோடு பூங்கொத்தும் வாங்கினார், வீட்டிற்கு சென்றார்.
கொஞ்சநேரத்தில் குடும்பத்தார் அலங்கார உடையுடன் விருந்து சாப்பாட்டுகு கிளம்பினர்.
இதை கவனித்த ரபி எய்டன் குழு அவசரமாக பைலை புரட்டியது.
அது அன்று ஈச்மெனின் திருமண நாள் என பைல் சொல்லிற்று.
இதைபோல அன்னாரின் பிறந்த நாளை அவர் கொண்டாடியதையும் உறுதிபடுத்தியிருந்தார்கள்.
வேட்டையாடும் புலி மொசாத், இரையை கண்டுவிட்டது ஆனாலும் உலாவ விட்டது
காரணம் கிட்டதட்ட 100 சிக்கல்கள் இருந்தன. கொஞ்சம் பிசகினாலும் சாரி ஹிஹிஹி என சமாளிக்கும் முருங்கக்காய் சாம்பாரில் உப்பு பிரச்சினை அல்ல.
மொசாத்தையே மூட வைக்கும் அல்லது இஸ்ரேலையே சிக்கலாக்கும் மகா பிரச்சினைகள் அவை.
நாசிகளுக்கு ஆதரவளித்த நாட்டில் ஜெர்மானியனை கொலை செய்தாலே தப்பமுடியாது.
இதில் உயிரோடு கடத்த வேறு வேண்டும், இப்போதைக்கு திருமண நாள் மட்டும் உறுதி செய்யபட்டிருக்கின்றது . இன்னும் சில காரியங்களை உறுதிபடுத்துவோம்.
சொல்லிவிட்டு கடத்தினால் எப்படி இஸ்ரேலுக்கு அர்ஜெண்டினா கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொண்டு செல்லலாம். அதில் எழும் சிக்கல் என்ன என்பதை பட்டியலிட்டார்கள்.
ஈச்மெனை கண்காணித்தபடியே ஹிட்லர் அங்கு எங்காவது இருப்பானா? இவர் கார் மெக்கானிக் என்றால் அவன் டயருக்கு பஞ்சர் போட்டுகொண்டிருக்கமாட்டானா என தேடவும் மொசாத் தவறவில்லை.
குறிப்பு:
முதல்படம் : மொசாத்தின் சின்னம், சகல கிறிஸ்தவருக்கும் தெரிந்தது கடவுள் மோசஸிடம் சொன்னபடி அவர் செய்த 7 விளக்குதண்டுகள் தான், (பார்த்தவுடன் கத்தோலிக்கர் பிதா,சுதன்,தூய ஆவி அடையாளமிடுவார்கள், சில சபையினர் “அல்லேலூயா” என்பார்கள், இன்னும் சிலர் காளகேயனாக அந்நிய பாஷை பேசுவார்கள், ஆனால் இவற்றை எல்லாம் யூதர்கள் கண்டுகொள்வதே இல்லை 🙂என்பது தான் “தமாஷ்” )
இரண்டாம் படம் : “கேப்டன்” ரபி எய்டன்
மூன்றாம் படம் : சில்வியா , இந்த வெள்ளை தக்காளியினை எப்படி குஷ்பூ போல என சொல்லமுடியும்? இந்த அழகிற்கெல்லாம் அந்த குளோஸ் மயங்கியிருக்கமுடியாது, விதி விளையாடியிருக்கலாம்