ஓவிய ராஜா ரவிவர்மன்

Image may contain: 1 person, standing

ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என தமிழரின் கலை அதை நோக்கியே இருந்தது

சோழ சாம்ராஜ்யம் கொடிகட்ட பறந்த காலங்களில் பசி ஒழிந்து செல்வம் நிறைந்து, பாதுகாப்பும் நிறைந்த காலங்களில் தஞ்சை கலைகளின் தலைநகரமாயிற்று. அப்பொழுது கரை நாடக இசை, சிற்பம், பாடல், ஓவியம் , கட்டட கலை என அது மிக உச்சத்தில் இருந்தது

அப்பொழுதுதான் தஞ்சாவூர் ஓவியங்களும் புகழ்பெற தொடங்கின, தஞ்சாவூர் ஓவிய பாணி தனிபுகழ் பெற்றது. வண்ண வண்ணமாய் ஓவியங்கள் வந்தன‌

பிற்காலத்தில் நாயக்கரும் மராட்டியரும் தஞ்சை பக்கம் வந்தபோதும் அது சிறந்தது. அதில் தங்க துகள் மாணிக்க கற்கள் பதித்து அது இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது

இந்தியாவின் மன்னர்கள் எல்லாம் தஞ்சாவூர் ஓவியகலை தெரிந்தவனினிடம் தங்கள் அரண்மனை ஓவியனை பயிற்றுவித்து தங்களை வரைந்து அதை தங்கத்தால அலங்கரித்து மகிழ்ந்தார்கள்

இன்றும் இந்தியாவின் பெரும் பழம் மன்னர்கள், பழம்பெரும் கடவுள்களின் படங்கள் எல்லாம் தஞசாவூர் ஓவிய பாணியிலே அமைந்திருக்கும், அந்த அளவு அது தனித்து நின்றது

அப்படிபட்ட தஞ்சை ஓவியத்தை கற்க திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வந்தான் ரவிவர்மா, ஆனால் கற்றுகொடுப்பார் யாருமில்லை. ஒருவழியாக மதுரையில் ஒரு ஓவியனை பிடித்து ஓரளவு கற்றார்

தஞ்சாவூர் ஓவியம் வண்ணத்தி சிறந்தது, ஆனால் தத்ரூப ஓவியம் என்பதில் வராது. தத்ரூபம் என்றால் சேலையின் மடிப்பினை கூட அப்படியே வரைவது

தஞ்சாவூர் ஓவியங்களை இன்னும் மேம்படுத்த ரவிவர்மா எண்ணியபொழுதுதான் ஐரோப்பிய ஓவிய‌ தொடர்பு கிடைத்தது

நிச்சயம் ஐரோப்பிய ஓவிய கலைக்கு மைக்கேல் ஏஞ்சலோ தலைகீழ் திருப்பம் கொடுத்திருந்தான். தத்ரூப ஓவியங்களை எப்படி வரைவது என்பதை அவன் சொல்ல்லிகொடுத்திருந்தான் போப் ஆண்டவரே அவனை ஆலய ஓவியங்களை வரைய சொன்னார்

முகத்தில் உணர்ச்சிகள் கொட்டும் ஓவியபாணி அவன் தொடங்கி வைத்தது, இன்று கத்தோலிக்க‌ கிறிஸ்தவ ஆலயங்களில் வணங்கபடும் மிக உருக்கமான ஓவியம் மற்றும் சிலை மாடல்கள் எல்லாம் அவனால் உருவானவை.

அப்பாணி பின் மன்னர் அரண்மனைக்கும் சென்றது, அவன் வழிவந்த ஓவியர்கள் அரசன், ராணியினை எல்லாம் பெரும் உயரமாக வரைந்து வைத்தார்கள் அதுவும் அரண்மனையினை அலங்கரித்தது

அக்கால ஐரோப்பிய மன்னர்கள் எல்லாம் இன்று அப்படித்த்தான் ஓவியமாக தொங்குகின்றார்கள்

இந்த பாணியும் அதற்குரிய வண்ணங்களும் கிடைத்தபின் ரவிவர்மா ஓவியம் புகழ்பெற தொடங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக புகழடைந்தான், சென்னை ஓவிய போட்டியில் அவன் ஓவியங்கள் பரிசை தட்ட தொடங்கியதும் வெளிநாட்டு போட்டிகளுக்கும் அனுப்பபட்டது

சிகாகோவில் அவன் ஓவியம் பெரும் வரவேற்பினை பெற்றது

தத்ரூப ஓவியங்களை வரைவதில் அவன் பெரும் புகழ்பெற்றான், மன்னர்களை வரைந்தது போக யார் யாருக்கோ வரைந்தான், குறிப்பாக வெள்ளையர்களுக்கு, அந்த ஓவியம் இன்றும் சென்னை விக்டோரியா ஹாலில் உண்டு

அவனுக்கு தனி அரண்மனையும் ஆட்களும் நியமிக்கபட்டனர், வெள்ளையர் அவனை சர் பட்டம் கொடுத்து ராஜா ரவிவர்மா என கொண்டாடினர்

எப்படி அவன் கொண்டாடபட்டான் என்றால் அக்காலத்திலே அவனுக்காக தனி தபால் நிலையம் திறக்கபட்டது, அந்த அளவு உலகெல்லாம் இருந்து கடிதமும் பாராட்டும் வந்துகொண்டே இருந்தன‌. அவன் வாழ்ந்த ஆட்டுங்கால் பகுதியில் அவன் ஒரு ராஜா போலவே நடத்தபட்டான்

ஓவிய ராஜா ஆனார் ரவிவர்மா

மன்னர்களை வரைய தொடங்கிய அவர் பின்பு புராண, இதிகாச படங்களை வரைந்தார். அதில் அந்த தயமந்தி படம், சாகுந்தலா படமும் பெரும் புகழ் கொடுத்தன‌

இந்த வெற்றியில்தான் இந்து கடவுள்களை மிக சிரத்தையாக வரைந்தான் ரவிவர்மா

அதுவரை இந்து கடவுள்கள் புராணங்களில் இருந்தன, ராமனுக்கு நீல‌கரிய நிறம், கண்ணன் கரிய நிறம், லட்சுமி வெண் தாம்ரையில் செல்வத்தோடு இருப்பாள், சரஸ்வதி கையில் வீணை இருக்கும் என ஏட்டிலேதான் இருந்தன‌

சில சிற்பங்களில் அது தெரிந்தது, ஆனால் வண்ண ஓவியமாக இல்லை

அதுவரை குழந்தை கண்ணன், ராமன், சரஸ்வதி போன்ற கடவுள்களுக்கு தத்ரூப படங்கள் இல்லை.

ரவிவர்மனே இந்து தெய்வங்களை மிக மிக தத்ருபமாக வரைந்த முதல் ஓவியன். அது லட்சுமி, சரஸ்வதி, ராமன், வெண்ணை திருடும் கண்ணன், விஸ்வரூப கண்ணன் என எதுவாகட்டும் அவனே மூலம்

அந்த ஓவியங்கள் பார்ப்போர் மனதை உருக்கின, இந்துக்களின் தெய்வங்கள் எல்லா வீடுகளிலும் வர தொடங்கின‌

இன்று காலண்டர் முதல் பூஜை அறை வரை நாம் காணும் மிக உருக்கமான இந்து ஓவியங்கள் எல்லாம் அவனே கொடுத்தது, இன்றும் அவைதான் பிரதியெடுக்கபடுகின்றன‌

மைக்கேல் ஆஞ்சலொ கிறிஸ்தவ மதத்திற்கு ஒவியம் மூலம் ஆற்றிய பெரும் பணியில் சற்றும் குறையாதது இந்து மதத்திற்கு தன் ஓவியம் மூலம் ரவிவர்மா ஆற்றியிருப்பது

இன்று அவனின் பிறந்த நாள். இந்துக்களின் தெய்வத்திற்கு உருகொடுக்க வந்த தெய்வீக ஓவியனின் பிறந்தநாள்

நீங்கள் இந்துவாக இருந்தால் உங்கள் வீட்டில் வணங்கபடும் எந்த தெய்வம் என்றாலும் அந்த தெய்வீக உருவம் அவன் கொடுத்தது, கடைகள் இன்னபிற இடங்களில் எல்லாம் இருக்கும் அட்டகாச ஓவியம் அவன் வரைந்து கொடுத்தது

அவ்வகையில் தன் கலையால் பெரும் சேவை செய்தவன் அந்த மாபெரும் கலைஞன்

கவிராஜா கம்பன் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் ஓவிய ராஜா ரவிவர்மன்.

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் அவன் வரைந்த ஏதாவது ஒரு ஓவியத்தை பார்க்காமல் ஒரு நாளை கடக்க முடியாது என்ற அளவில் இங்கு நிலைத்துவிட்ட அந்த பெரும் கலைனுக்கு அஞ்சலிகள்

( ரவிவர்மா காலத்தில் தலைவி குஷ்பு இல்லை என்பதால் அவனுக்கு மாபெரும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. அவ்வகையில் அவன் பெரும் துரதிருஷ்டசாலி

இல்லாவிட்டால் மொனலிசா ஓவியமும் இல்லை, அந்த டாவின்சியும் வரலாற்றில் இல்லை)