குமர குருபரர் நீதிநெறி : 01

ஆன்மீக இலக்கியங்களோடு நீதி இலக்கியங்களையும் தினம் ஒரு பாடலாக காணலாம், அவ்வகையில் ஸ்ரீகுமர குருபர சுவாமிகளின் நீதிநூல் தனி சிறப்பு வாய்ந்தது

தமிழக பண்டை இலக்கியங்கள் ஞான களஞ்சியங்கள், குறள் மட்டுமல்ல நாலடியார்,மூதுரை, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம், நான்மணிகடிகை, விவேக சூடாமணி, நீதிவெண்பா என பெரிய வரிசை கொண்டது

ஆனால் குறளை மட்டும் கொண்டாடிய திராவிட திணிப்பில் இதர நீதி தத்துவ நூல்களெல்லாம் மறைக்கபட்டன காரணம் அவையெல்லாம் விநாயகனையும் சரஸ்வதியினையும் வாழ்த்தி தொடங்கபட்டவை இந்து தெய்வங்கள் பெயர் சொல்லி பாடபடுபவை என்பதால் பெரும்பான்மையான நீதி நூல்கள் மறைக்கபட்டன‌

நாம் அவ்வப்பொழுது ஒவ்வொன்றாக காணலாம், முதலில் ஸ்ரீகுமர குருபர சுவாமிகளிடம் இருந்து தொடங்கலாம்

அவர் நீதிநெறி விளக்கத்தின் கடவுள் வாழ்த்து இதோ

“நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று”

இந்த பாடலை புரியும் படி வரி பிரித்தால் இப்படி வரும்

“நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று”

பாடலின் பொருள் இதுதான்

ஆரவாரம் மிகுந்த துள்ளும் இளமை என்பது நீர்குமிழி போன்றது நிலையில்லாதது

குளத்தின் அலைகள் போல வந்து வந்து போவது செல்வம், அது நிலையானது அல்ல செல்வம் கூடும் குறையும் சில நேரம் வற்றியும் விடும் அதுவும் நிலை இல்லாதது

இந்த உடல் நீரில் எழுதிய எழுத்து போல் தடம் இன்றி மறைய கூடியது, உடலும் நிலையில்லாதது

இப்படி இளமையும், செல்வமும் உடலும் நிலையில்லாதது என தெரிந்தும் நம் மக்கள் சிதம்பரத்தில் நிற்கும் எம்பெருமான் பாதம் பணிந்து வாழ்த்தாமல் இருப்பது ஏனோ?, நிலையற்ற வாழ்வினை உணர்ந்து நிலையான சிவனை தேடாதது ஏனோ? என சிவனை பணிந்து முதல் பாடலை தொடங்குகின்றார் குமர குருபரர்