சகோதரி நிவேதிதா நினைவு தினம்
அந்த பெண்மணி அயர்லாந்துக்காரர் 1867ல் பிறந்தவர் , பெயர் மார்கரெட் , தகப்பன் பெரும் கிறிஸ்தவபோதகர். பைபிளின் அனைத்து ஆகமங்களும் கூடவே அல்லேலூயாவும் ஊட்டி ஊற்றி வளர்க்கபட்டவர் அவர்
அக்கால போதகர்கள் கல்விபணியும் செய்வார்கள், அப்படி மார்கரட்டும் ஆசிரியரானார், ஆனால் உள்மனது ஆன்மீகத்தை தேடிகொண்டே இருந்தது. கிறிஸ்தவம் அவரின் கேள்விகளுக்கு நிறைவான பதிலை கொடுக்க முடியவில்லை
கிறிஸ்து நமக்காக ரத்தம் சிந்தினார் என்றால் என்றோ செத்துபோன ஒருவர் எனக்கெப்படி பாடுபட முடியும் என பதில்கேட்டும் அளவிற்கு அவரின் மனம் ஆன்மீகத்தை தேடியது
புத்தமதத்தில் தனக்கான பதிலை தேடினார் கிடைக்கவில்லை , அப்பொழுது ஒரு இந்திய இளம்துறவி அங்கு பேசவந்தார், ஏற்கனவே அமெரிக்காவில் பேசி உலகபிரபலம் ஆகியிருந்தார். அவர் பிரிட்டனில் பேசும்பொழுது அவரின் பேச்சு இவரை கவர்ந்தது
அந்த துறவிபெயர் விவேகானந்தர்
ஆன்மீகம் தொடர்பான எந்த சிக்கலான கேள்விக்கும் பதில் அவரிடம் இருந்தது, எதுவும் அவருக்கு எளிதான கேள்வியே அந்த ஞானத்தில் அவர் முன் மண்டியிட்டு அவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று, தன் பெயரை வங்க மொழியில் நிவேதிதா (அதாவது கடவுளுக்கு உகந்தவர்) என மாற்றி கொண்டார் அந்த மார்கரட்
அதோடு கல்கத்தா வந்து பெண்களுக்கான பள்ளி நிறுவி இந்திய தொண்டாற்றினார். இந்திய ஞானமரபு அவரின் ஆன்மீக தேடலுக்கான பதிலை கொடுத்தது.
சகோதரி நிவேதிதா கல்கத்தா வந்த கதை இதுதான்
சகோதரி நிவேதிதா இந்திய சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு கொஞ்சமல்ல, பெண் குழந்தைகள் படிப்பு முதல் பல கலைகளை கற்றுகொடுத்தார்
அன்னை சாரதாதேவியின் அன்புக்கு உகந்தவராக விளங்கினார். உலகெல்லாம் இருந்து நிவேதிதாவிற்கு நன்கொடைகள் குவிந்தன, அவற்றை எல்லாம் கல்கத்தா மக்களுக்கே கொடுத்தார்
கல்கத்தாவில் பிளேக் எனும் கொள்ளைநோய் பரவியபொழுது நிவேதிதா ஆற்றிய சேவைகள்தான் பின்பு அன்னை தெரசாவிற்கு வழிகாட்டியாக இருந்தது
பிளேக்கில் தன் கைபொருள் எல்லாம் தீர்ந்த நிலையிலும், விவேகானந்தர் மறைந்த நிலையிலும் மனம் தடுமாறாமல் அமெரிக்காவில் “ராமகிருஷ்ணா இளைஞர் மன்றம்” தொடங்கி நிவாரண நிதிகளை பெற்றுகொண்டவர் அவர்.
கல்கத்தாவில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்த ஜெகதீஷ் சந்திரபோஸை ஐரோப்பியருக்கு அறிமுகபடுத்தி அவர் பெரும் விஞ்ஞானியாக நிவேதிதாவும் பெரும் காரணமாயிருந்தார்
எல்லாவற்றையும் விட மிக முக்கிய சாதனை ஒன்று உண்டு
கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றிருந்தார் பாரதி, அவரின் சுதந்திர உணர்வினை பற்றி அறிந்த நிவேதிதா பாரதியாரிடம் கேட்டார், பாரதி உணர்ச்சிபொங்க சுதந்திர உரிமை பேசினார், அமைதியாக கேட்டார் நிவேதிதா
உங்கள் மனைவி எங்கே?
(ஐரோப்பிய பாரம்பரியபடி கணவன் மனைவியும் எங்கும் சேர்ந்து செல்வதே மரபு, இந்திய மரபில் அதெல்லாம் இல்லை)
அதுவரை அப்படி நினைக்காத பாரதி நெல்லை ஸ்லாங்கில் ஆங்கிலத்தில் சொல்லியிருக்கலாம் “சவத்து மூதி வீட்டுல கிடக்கும், இங்க எதுக்கு அவ?”
பாரதியாரை கோபமாக பார்த்தார் நிவேதிதா, எவ்வளவு பெரும் அறிவாளி நீங்கள், ஆனால் பெண்ணுகுரிய இடத்தினை கொடுக்க தயக்குகின்றீர்கள்
பெண்களை அடிமைபடுத்தும் உங்களுக்கு ஆங்கிலேயனிடம் சுதந்திரம் பெற என்ன தகுதி உண்டு? பெண் என்பவள் பெரும் சக்தி. அவர்களை சரிக்கு சமமாக நடத்தாமல் இந்தியா விடுதலைபெறாது”
அப்பொழுதுதான் பாரதியாருக்கு மண்டையில் உரைத்தது, அதன் பின்பே பெண் விடுதலை கவிதைகள் பாடல்களை எல்லாம் எழுதினார். செல்லம்மாளுடன் ஜோடியாக வீதியில் கம்பீரமாக நடந்ததெல்லாம் அதன் பின்புதான்
பாரதியாருக்கு பெரும் திருப்புமுனை கொடுத்தவர் அந்த நிவேதிதா
பாரதியார் அவரை தன் பராசக்தி தாய்க்கு நிகராக கொண்டாடினார்
அவர் பிறப்பால் ஐரோப்பியர், கிறிஸ்தவர். ஆனால் ஆன்மீகத்தை தேடி இந்தியா வந்து இந்தியர் ஆனார். இந்திய பாரம்பரியமும் இங்குள்ள ஆன்மீகமும் அவருக்கு அப்படி பிடித்திருந்தன அவற்றிலே நிறைவு கண்டார்
பெண் கல்வி, நோய் நீக்கும் மருத்துவம் இன்னும் பல விஷயங்களில் அன்னை தெரசாவின் முன்னோடி அவரே
இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டு பெண்ணாக மாறி, இந்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மாதரசி மறையும்பொழுது அவரின் வயது 41.
அவர் மதம் பரப்ப வரவில்லை. மதத்தின் நோக்கமான மனதை நிரப்பும் நிம்மதியினை தேடிவந்தார். இந்துமதம் அவர் கேட்ட நிம்மதியினை கொடுத்தது. இந்தியராக அவரால் தயக்கமின்றி வாழமுடிந்தது
இந்நாட்டு மகளிர் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது சாட்சாத் அந்த நிவேதிதா என்பதை மறுக்க முடியாது
அது பாரதி, பெரியார் என் தென்னகத்திலும் எதிரொலித்தது.
அந்த மாதரசிக்கு இன்று நினைவுநாள். இந்தியாவின் பெருமைகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இங்கு நமக்காக உழைத்த அந்த உத்தமிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.