சார்லஸ் சாப்ளின் கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்
அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள்
ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி வலியினை , ஏழையின் கதறலை தன் ஒற்றை காட்சியில் நடித்தவன்
சார்லஸ் சாப்ளின், கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்
அவன் பிறக்கும்பொழுது அக்குடும்பம் நன்றாக இருந்திருக்கின்றது, அவனுக்கு 4 வயது ஆனபொழுது தடுமாறிற்று
அவனுக்கு விவரம் தெரிந்தபொழுது அவன் கண்டது மனநோயாளி தாய், குடிகார தந்தை, அவர்களிடையே தவித்த சகோதரி
ஒரு சிறுவனாய் அவன் என்னபாடு பட்டிருப்பான்? அவனுக்கு வீடுமில்லை, அரவணைப்புமில்லை. குடிகார தந்தையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் பல வீடுகள் மாற அவனோ தெருக்களிலும் பூங்காக்களில் உறங்கினான்
அவன் வறுமை தவிர ஏழ்மை தவிர ஏதும் படிக்கவில்லை. அவனின் மனம் உண்மையில் சந்தோஷத்திற்கு ஏங்கியது, தன் வீட்டில் கிடைக்காத மகிழ்ச்சியினை அவன் தெருக்களில் தேடினான், அவனின் கோணங்கி நடனத்திற்கு காசு கிடைத்தது
தெருவில்தான் ஆடினான், இடையில் கவனமாக விழும் காசுகளை பொறுக்கிவிட்டு மறுபடியும் ஆடினான்
அதில்தான் மனநோயாளியான தாய்க்கு சோறு ஊட்டினான், அவனின் பரிதாபம் கண்ட சிலர் அன்னையினை மனநோய் சிகிச்சை மையத்திற்கும் அவனை அனாதை இல்லத்திற்கும் அனுப்பினர்
அங்கிருந்து அடிக்கடி காணாமல் போன அவன் நாடக கொட்டைகளில் ஆடினான், ஏழைகளோடு தெருவில் உறங்கினான், அடித்தள மக்களின் வலி அவனுக்கு அங்குதான் புரிந்தது
ஓரளவு காமெடி நடிகன் என அறியபட்ட காலத்தில் அமெரிக்கா சென்றான், அமெரிக்கா அவனை மிகபெரும் நடிகனாக்கியது, அவனின் படங்கள் ஓட தொடங்கின சொந்தமாக ஸ்டூடியோ கட்டுமளவு வளர்ந்தார்
அது என்னமோ தெரியவில்லை தாயின் பாசம் கிடைக்காமல் போனது போலவே மனைவியின் பாசமும் அவனுக்கு கிடைக்கவில்லை, அவள் பிரிந்து சென்றாள்
பொதுவாக பெரும் அறிவாளிகளும் சராசரி பெண்களும் சேர்ந்து வாழமுடியாது என்பது விஞ்ஞானிகள், மேதைகள் வாழ்வில் நடந்த உண்மைகள்
மிகசிறிய வயதிலே சோகத்தை தூக்கிபோட்டு வளர்ந்த சாப்பிளினுக்கு அந்த சோகமும் பெரிதாக தெரியவில்லை தாங்கினார்
எந்த லண்டனின் பிச்சைகாரனாக அலைந்தாரோ அதே லண்டனில் மிகபிரபல நடிகராக வந்து இறங்கினார், உலகம் கொண்டாடியது
ஆனால் அவரின் அன்னைக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை, அம்மா நான் மிகபெரும் நடிகனாகிவிட்டேன் என அவர் சொல்லும்பொழுது அந்த தாயால் புரிந்துகொள்ளமுடியவில்லை
கண்ணீர் விட்டு அழுதார் சாப்ளின், அவரின் விதி அப்படி இருந்திருக்கின்றது
அதன்பின் சாப்ளின் விஸ்வரூபமெடுத்தார், தொழிலாளரின் வலிகளை அவர் அளவு சொன்னது யாருமில்லை,ஹாலிவுட் சினிமாக்கள் மிட்ட மிராசுகள் கதைகளை காட்டிகொண்டிருந்த நேரத்தில் தெருவில் அலையும் தொழிலாளி கதையினை சொன்னது சாப்ளின்
எதற்கும் அவர் அஞ்சவில்லை, அவருக்கு பொதுவுடமை மீது ஒரு அபிமானம் இருந்தது
ஹிட்லரை அன்றைய தேதியில் மிக தைரியமாக விமர்சித்து நடித்தவர் சாப்ளின். அவர் போலவே வேடமிட்டு அவர் நடித்த தி டிக்டேட்டர் படம் ஹிட்லரை படு மட்டமாக கலாய்த்திருந்தது
அன்றைய நாளில் அந்த தைரியம் எவனுக்குமில்லை. உலகமெல்லாம் போர் சூழல் என்றாலும் சாப்ளினின் படங்கள் வந்துகொண்டே இருந்தன
ஹிட்லருக்கு பின் முதலாளித்துவத்தை சாடி படமெடுத்தார், பேசும் படங்கள் வந்தாலும் பேசா வேடங்களில் பின்னி எடுத்தார்
அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான படங்கள் என்பதால் அவர் அமெரிக்கா வர தடை விதித்தது அமெரிக்கா, மனிதர் அஞ்சவில்லை அவர் போக்கில் தன் படங்களை எடுத்தார்
இந்த சாயல் தமிழக எம்.ஆர் ராதாவிடமும் இருந்தது
சாப்ளினின் பெருந்தன்மையும், இம்மானிடத்தையும் ஏழை தொழிலாரை அவர் நேசித்த விதமும் . மக்களை சிரிக்க வைத்தே சிந்தனையில் அழவைத்த விதமும் உலகெல்லாம் அவருக்கு பெருமதிப்பு ஈட்டிகொடுத்தன
அமெரிக்கா அவருக்கு சிறப்பு ஆஸ்கர் கொடுத்து அழைத்தது
நான் புரட்சியாளன் இல்லை, வெறும் கலைஞன். கலையில் கருத்து சொன்னேன். இனி ஏசுவே அழைத்தாலும் அமெரிக்கா போகமாட்டேன் என சொல்லிவிட்டு சுவிட்சர்லாந்திலே தங்கிவிட்டார்
சாப்ளினின் பாதிப்பு உலகெல்லாம் எல்லா திரையுலகிலும் இருந்தது
இங்கும் நாகேஷின் எதிர்நீச்சல் முதல் சர்வர் சுந்தரம் வரை சாப்ளினின் பாதிப்பில் படங்கள் வந்தன. சந்திரபாபு முதல் கமலஹாசன் வரை அவரைபோல் முயற்சித்தனர்
ஆனால் ஒரு நடிகனும் சாப்ளினுக்கு பின் ஏன் அந்த இடத்தை எட்டமுடியவில்லை என்றால் சிறுவயதில் இருந்தே சாப்ளின் பெற்ற வலியும், உருண்ட புழுதியும் அப்படி
எத்தனையோ சோகங்களை தன்னுள் கொண்ட அந்த சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்து கண்ணீரை தன்னோடு வைத்துகொண்டவர்
“நான் அழுவதாக இருந்தால் மழையில்தான் அழுவேன், என் கண்ணீர் யாருக்கும் தெரிய கூடாது” என சொன்னவர் சாப்ளின், அவர் வாழ்வில் அப்படித்தான் அழுதார்.
அவர் மட்டும் சினிமாவில் அனுசரித்து போயிருந்தால் அவருக்கு இருந்த வரவேற்புக்கு பெரும் ஹாலிவுட் நிறுவணங்களை உருவாக்கி இருக்கலாம், சினிமா உலகை ஆட்டியிருக்கலாம்
ஆனால் கலைஞனுக்கு மக்கள் நலனும், சமூக பொறுப்பும் மகா முக்கியம் என நின்றிருந்தவர் அவர்
“கலைஞன் என்பவன் மக்களின் பணத்தில் நடிப்பவன், மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் துயரத்தையும் தன் கலையில் எடுத்து சொல்லா எந்த கலைஞனும் பெரும் பாவம் செய்கின்றான்..” என்ற அந்த பெரும் கலைஞனின் வார்த்தைகள் சாகா வரம் பெற்றவை.
இன்று அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள், அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி