சிங்கப்பூர் : 01
சிங்கப்பூர் : 01
இன்று சிங்கப்பூர் தனிநாடாக ஆன நாள் என அந்நாடு கொண்டாடிகொண்டிருக்கின்றது, நாமும் வாழ்த்துவோம்
அது மலேயநாட்டின் தென்கரை தீவு, புரியும்படி சொன்னால் ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு அடுத்து இருந்தால் எப்படி இருக்கும்?, அதே தான். அதனைவிட கொஞ்சம் பெரிய தீவு அவ்வளவுதான்.
சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அற்புதமான துறைமுகம் இயற்கையாய் அமைந்திருந்தது. அதன் அருமையையை உணர்ந்த பிரிட்டிசார் துரிதமாய் வளர்க்கஆரம்பித்தனர்.
இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை வசதியாக முன்னேற்றுவதில் பிரிட்டிசாரை அடிக்கமுடியாது, அவர்களின் தொலைநோக்கு பார்வை அப்படி, இந்தியாவின் பம்பாய் தீவினை அப்படித்தான் உருவாக்கினார்கள், இன்று இந்தியாவின் நம்பர் 1 பணம் கொழிக்கும் இடம் அது.
மலேயாவில் மழை உண்டு,மலையும் உண்டு. அரிசி விளையாது. தேயிலை விளைவிக்க பனிவேண்டும், அது கிடையாது. பின்னர் என்னதான் செய்ய? ரப்பர் அவர்களுக்கு கைகொடுத்தது.
ரப்பர் எஸ்டேட் என்றால் அதிகாலையில் சென்று பாலெடுக்கவேண்டும், அந்நாளைய மலேயமக்கள் இயற்கைவாழ்வு வாழ்ந்தவர்கள், சூரியன் வந்து சுட்டால்தான் பணிக்கு வருவார்கள், இன்னொன்று மக்கள்தொகையும் குறைவு.
தமிழக மக்களோ ஏக சிக்கலில் இருந்தார்கள், நாயக்க மன்னர் வீழ்ச்சி, ஜாதிகொடுமை, வறட்சி என எங்காவது ஓடவேண்டிய நிலை (இன்றும் அப்படித்தான் என்பது வேறுகதை)அப்படி தமிழர் கூட்டம் ரப்பர் காடுவேலைக்கும் வந்து குடியேறிற்று.
அடுத்தவளமாக தாதுமணல் மலேயாவில் உண்டு, சுரங்கத்தில் வேலை செய்ய பணியாளர் வேண்டும். ஏற்கனவே ஆப்ரிக்க அடிமைகளை வெஸ்ட் இன்டீஸ்,அமெரிக்கா என கொண்டுபோய் விற்றாகிவிட்டது, இனி ஆப்ரிக்காவில் யானைதான் உண்டு.
வேறு ஆப்ரிக்க கண்டமும் இல்லை.
அவர்களை வேறு அமெரிக்காவில் மனிதர்களாக லிங்கன் அறிவித்துவிட்டார், இனி ஆப்ரிக்க அடிமை கிடைக்கமாட்டான்.
அந்த சூழ்நிலையில் சீன அரசு உள்நாட்டு குழப்பத்தில் இருந்தது, அபினிபோர் காலங்கள். உங்கள் சீன அரசனுக்கு அடிமையாய் இருப்பதை விட மலேய வந்து தாதுமணல் சுரங்கத்தை பிரிட்டிஷ் குடிமக்களாய் சுதந்திரமாய் தோண்டுங்கள் என அறிவித்தது பிரிட்டன்.
பெரும் கூட்டம் மலேயாவிற்குள் வந்தது, அதில் நான்காவது தலைமுறையில் சிங்கபூரில் பிறந்தவர்தான் லீ குவான் யூ.
மலேயாவின் ரப்பரும் தாதுமணலும் ஏற்றுமதி செய்யும் முக்கியதுறைமுகமாக சிங்கப்பூரினை மாற்றினார்கள் வெள்ளையர்கள். வேகமாக வளர ஆரம்பித்தது சிங்கப்பூர்,
இப்படியாக வளர்ந்துகொண்டிருந்த சிங்கப்பூரின் தலைவிதி இரண்டாம் உலகபோரில் மாறியது, அதாவது ஜப்பான் மொத்த மலேயாவையும் பிடித்து ஆட்டம் போட்டது, சிங்கப்பூர் துறைமுகம் எவ்வளவு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது என அப்பொழுதுதான் உலகிற்கு விளங்கிற்று.
ஹிட்லரின் விக்கெட்டை வீழ்த்தியபின்னரும் அடங்காத ஜப்பான், அணுகுண்டால் தோற்கடிக்கபட்டபின் கண்ணீரை துடைத்துகொண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிற்று.
மறுபடியும் சிங்கப்பூரை பிடித்த பிரிட்டன் அதனை தந்திரமாக தன்னாட்சி பகுதி என அறிவித்து வைத்துகொண்டது, அதாவது 1957ல் மலேசியாவிற்கு சுதந்திரம் வழங்கபட்டாலும், சிங்கப்பூர் பிரிட்டனின் காலணிநாடு.
அப்பொழுது சிங்கப்பூர் மக்களுக்களின் நலனுக்காக ஒரு கட்சி இருந்தது, அதன் தலைவராக அப்பொழுது லண்டனில் பாரிஸ்டர் படிப்பு முடித்திருந்த அவர் தேர்ந்தெடுக்கபட்டார், மிகவும் சுறுசுறுப்பனவர், கறாரானாவர் என்றெல்லாம் அறியபட்டிருந்தாலும் அவரை மிகவும் கவனிக்கவைத்தது அவரின் இனநல்லிணக்கமும், மலேயாவுடன் இணைந்திருக்க அவர்காட்டிய அக்கறையும்.
1960களில் பிரிட்டன் சாம்ராஜ்யம் அஸ்தமனமாகி விடியாத இரவினை நெருங்கியது, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் சுக்குநூறனானது. உலகவல்லரசு போட்டியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரிட்டனை காலில்போட்டு மிதித்தன,
அவ்வளவு ஏன்? சூயஸ் கால்வாய் பிரச்சினையில் அரபுகளின் தலைவர் கர்ணல்நாசரே பிரிட்டனை பார்த்து நமது ஊர் ஸ்டைலில் சொன்னார் “ஒழுங்கா சோலிய பாரு”
ஒன்றும் செய்யமுடியாமல் வாயில் துண்டுவைத்து அழுத பிரிட்டன், உலக அரசியலில் இருந்து ஒதுங்கதொடங்கி, சிங்கபூருக்கும் விடுதலை வழங்கிற்று.
மொத்த சிங்கபூரின் நம்பிக்கையாக லீ குவான் யூவினை மக்கள் நம்பதொடங்கினர். மலேயாவோடு இணைவோம் என்ற கோஷமே அவருக்கு வெற்றிகொடுத்தது.
அவர் உலகினை அறிந்தவர், மத துவேஷத்தால் இந்திய பிரிவினை எல்லாம் கண்டவர், பிரிவினை மக்களை முன்னேற்றாது என்பது அவரின் நம்பிக்கை. ஓடிசென்று தாய்நாடான மலேயாவோடு சிங்கப்பூரை இணைத்தார்.
ஆனால் நிலமை சுமூகமாக இருந்தாலும் சில சிக்கல்கள் எழுந்தன, மலேயா பின் மலேசியா என மாறி இருந்தது, இஸ்லாமிய பெருமக்கள் வாழும் நாடு, அது பிரச்சினை அல்ல. அவர்கள் மிக மிக மென்மையானவர்கள், வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள், புன்னகை முகத்திற்கும் களங்கமில்லா மனதிற்கும் சொந்தக்காரர்கள்.
மலேசிய மக்களை போல அமைதியானவர்களை பார்க்கமுடியாது, ஆனால் மத நெறியாளர்கள். வெறியாளர்கள் அல்லவே அல்ல.
ஒரு மதபண்டிகையில் சிங்கப்பூரில் கலவரம் வெடிக்க, அது பலவதந்திகளுடன் இன,மத கலவரமாக மாறிற்று.
மலேசிய மேல்மட்டம் கொஞ்சம் வருத்தமுற்றது, சிங்கப்பூரை மறுபடியும் தனிநாடாக விட்டுவிடலாம் என முடிவெடுத்தார்கள், அதனை அறிவித்தும் விட்டார்கள்.
உலக சரித்திரத்திலே ஒரேமுறையாக, ஒரு நாட்டிற்கு சுதந்திரம் கதற கதற திணிக்கப்ட்ட விசித்திரம் அன்றுதான் நடந்தது. இதுதான் மலேசிய மனநிலை,
பிடிக்கவில்லை சரி இனி பிரிந்துவாழலாம். வீண் பிடிவாதம்,போராட்டம்,மான பிரச்சினை, கவுரவம்,வந்தேறி பிரச்சினை,ஆண்டவம்சம் போன்ற கோஷங்கள் இருவருக்கும் நல்லதல்ல. மக்கள் அமைதியாக வாழவேண்டும்.
மலேசியா சிங்கப்பூரை வெளியே தள்ளிற்று (ஆனாலும் இனதுவேஷமில்லை, மலேசிய சீனர் மீது எந்த நெருக்கடியுமில்லை). நொடிந்துபோனார் லீ, கிட்டதட்ட காந்தி பாகிஸ்தான் பிரிவினையில் உடைந்தது போல. கவலையால் படுக்கையில் வீழ்ந்தார் லீ.
“நாங்கள் போகத்தான் வேண்டுமா?, கொஞ்சம் யோசிக்ககூடாதா?” என அவரின் கெஞ்சல்கள் எடுபடவில்லை,
அவர் என்ன? மொத்த சிங்கப்பூரும் அப்படித்தான் சொல்லிகொண்டிருந்தது, “எங்களை விரட்டாதீர்கள்…நாங்களும் உங்கள் சகோதரர்களே..”
மொத்த சிங்கப்பூரும் கதிகலங்கிய நேரம், அண்டைநாடு என எதுவுமில்லை, கொஞ்சம் தள்ளி இந்தோணேசியா. அதுவும் சிக்கலான நாடு. செயலற்ற நிலையில் நின்றது மக்கள் கூட்டம், கிட்டதட்ட நிராதரவான நிலை.
காரணம் மின்சாரமட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும் மலேசியாவை நம்பித்தான் இருந்தார்கள்.
படுக்கையில் இருந்து மீண்டார் லீ, சிங்கப்பூர் தனிநாடு என அறிவித்தார். உடனே சில அச்சுறுத்தல் வந்தது. இந்தோணேஷியா அல்லது சீனா அதனை விழுங்கும் அபாயம் இருந்தது.
அதற்காக ஐ.நாவில் உறுப்புநாடானார், கொஞ்சம் சுதாரித்தார்.
மக்களுக்கு சொன்னார், ஆனந்தம் படத்தில் மம்முட்டி சொல்லும் வசனம் அதுதான்
“யாரும் அழவேண்டாம், எல்லாரும் இருக்க ஒரு வீடு, பிழைக்க ஒருவேலை, உலகம் மதிக்குமளவு காசுபணம், இதுக்கு அப்புறம்தான் மனித உரிமை, மத உரிமை, பத்திரிகை உரிமை, மண்ணாங்கட்டி எல்லாம், அதுவரை உழைப்பு மட்டுமே நமது இலக்கு”
சொல்லிவிட்டு செயலில் இறங்கினார், போரினால் சீரழிந்த ஜெர்மனும், ஜப்பானும் வாழும்பொழுது நாம் ஏன் வாழமுடியாது, என உலகை எல்லாம் கணக்கிட்டார், ஒரு உண்மை புலபட்டது.
ஜப்பானோ, ஜெர்மனோ,இஸ்ரேலோ ஒரே இனமக்களின் நாடு, ஆனால் சிங்கப்பூர் பல இனமக்களின் நாடு. அற்புதமான முடிவெடுத்தார், அது இன சமத்துவமும், மத கட்டுபாடும் கண்டிப்பாக இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை.
அதனை அறிவித்துவிட்டு சொன்னார், “அந்த நாட்டைபார்த்தீர்களா பலஇனமக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சொர்க்கமாக வைத்திருக்கின்றார்கள், அதுவே இனி நமது கனவுநாடு”.
அது அமெரிக்காவோ கனடாவோ அல்ல, அது இலங்கை (இந்தியாவின் நட்புநாடான அதே இலங்கை).
அன்றைய இலங்கை அப்படித்தான் இருந்தது, அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று ஹாங்காங் அளவிற்லிகு வளர்ந்திருப்பர், புத்தமத வெறியும், இனவெறியும் நாட்டை நாசமாக்கிற்று.
இலங்கையில் மேற்கண்ட வெறிகள் அதிகமாகி நாசமாய் போக, அந்த புகையினை கூட உள்ளே விடாமல் விடாமல் அடக்கி வைத்த லீயின் சிங்கப்பூர் கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தது.
ஆனால் லீ கண்டது பெரும் கனவு, அதாவது புலிக்கு கழுகின் சிறகுகளை பொருந்தி பறக்கவைக்கும் கனவு.
அப்படித்தான் சிங்கப்பூர் எனும் புலி பாயவில்லை, பறக்க ஆரம்பித்தது.
தொடரும்..