சிங்கப்பூர் : 02

சிங்கப்பூர் : 02

Image may contain: one or more people, skyscraper, sky, cloud, shoes and outdoor

1965ல் இருந்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ

சுத்தம் அவர்களுக்கு பிரிட்டிசார் சொல்லிகொடுத்தது, அமைதியான வாழ்க்கை முறை அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

எப்படி அந்த நாட்டு மக்கள் அப்படி இருந்தார்கள் என்றால், வெகு எளிதான உண்மை. இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ சென்று, உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, உழைக்க வேண்டும் எஜமான் பிரிட்டிசார் சொன்னபடி உழைக்கவேண்டும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அக்கம் பக்கம் அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக இருக்கவேண்டும்.

உழைத்தால்தான் வாழ்முடியும் என நம்பும் மக்களின் சந்ததி அது. உழைப்பை தவிர ஏதும் தெரிவதில்லை.

அதனால்தான் இன்றுவரை அந்நாடுகளில் மிக சொற்பமான நிகழ்வுகளை தவிர ஒரு கலவரங்களையும் கேள்விபட்டிருக்க முடியாது.,

நமது கலாச்சாரத்தில் ஒன்றான ஊர்வலம்,பேரணி டீக்கடை அரசியல், விளையாட்டில் தோற்றால் கூட மறியல்,போராட்டம், பேருந்தை கொளுத்துதல் என ஜனநாயக சம்பிரதாயங்கள் எல்லாம் அங்கு இல்லை.

அமைதியான, ஆனால் உழைக்க தயாரான கூட்டம் அது, அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டால் அந்நாடு எப்படி ஆகும்.

சிங்கப்பூர் அப்படிபட்ட மக்களை கொண்ட நாடு, நல்லதலைவர் லீ அப்படித்தான் அமையபெற்றார்.

ஒரு வளமும் இல்லா நாடு, யாரும் நமக்காக கைகட்டமாட்டார்கள். ஒரே வழி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, அதை செய்ய அந்நாடுகளின் முழுநம்பிக்கையை பெறுவது? நல்ல அரசாங்கமும் பாதுகாப்பான சூழலும் இல்லாமல், யார் முதலீடு செய்ய வருவர்?

இன்று ஆப்கானுக்கும் அல்லது ஈராக்கில் தொழில்தொடங்க யாராவது தயாரா? அவர்களை விடுங்கள் இந்தியாவிலே குறிப்பாக தமிழகத்திலே தொழில் தொடங்க பலவாறு உலகம் யோசிக்கின்றது

நல்ல அமைதியும், தோற்றமுமே ஒரு நாட்டின் முதலீட்டுக்கு அடிப்படை, நல்ல பெயரும் பாதுகாப்பும் முக்கியம். ஒரு அந்நிய முதலீட்டாளர் சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்து (ஆம் அதில் பயணித்தால் தெரியும்) வந்து சுற்றிபார்ப்பதை விடுங்கள், ஏர்போர்ட்டில் இறங்கும் பொழுதே கூரை இடிந்து விழுவதையும் அதனை யாரும் பொருட்படுத்தாமல் ஒரு ஊழியர் சுவற்றில்100ம் முறை என கோடு போடுவதயும் கண்டால்?? அப்படியே ஓடிவிடமாட்டாரா?

அப்படியே தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களையும், போஸ்டர் பேனர்களையும் வெற்று ஆர்ப்பாட்ட சவுடால்களையும் கண்டால் ஓடிவிடமாட்டாரா

விமான நிலையமும் , நகர அமைதியும் அவ்வளவு முக்கியம்

லீ அதனைத்தான் முதலில் செய்தார். விமானத்தையும், விமான நிலையத்தையும், சிங்கப்பூர் துறைமுகத்தையும் ஒரு தரத்திற்கு உயர்த்தினார்.

கடந்த 50 ஆண்டுகளாக ஐரோப்பிய விமானதுறை தரத்திற்கு சவால்விடும் நிறுவணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். மிக சிறந்த நிலையங்களில் ஒன்று சாங்கி நிலையம்.

வரவேற்பிலே அசத்திவிடும் சாமார்த்தியம் கொண்டவை அவை.

குறைவான வரி, தொல்லைகள் இல்லாமல் தொழில் செய்யும் உரிமை, எல்லாவற்றிற்கும் மேல் உழைக்க மக்கள், முழு பாதுகாப்பிற்கு அரசு உத்திரவாதம், மத,இன,யூனியன் என எந்த தொந்தரவு இல்லை.

லீ உலக முதலீட்டாளருக்கு சொன்னது இதுதான், யாரும் வாருங்கள் தொழில் செய்யங்கள், எமது மக்களுக்கு வேலைகொடுங்கள். நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம், என மன்றாடி நின்றார்.

அடுத்த கட்டம், வெறும் உற்பத்திமட்டுமல்ல. உலகின் எல்லா நாட்டுபொருளும் கிடைக்கும் பெரும் சந்தையாக சிங்கப்பூரை மாற்றினார். அதனால்தான் இன்று உலகின் எல்லா முண்ணனி பொருள்களின் சந்தையாக சிங்கப்பூர் உயர நிற்கின்றது.

அது அவருக்கு கை கொடுத்தது, தொழில்கள் வளர்ந்தன. கொஞ்சம் நிமிர்ந்த லீ கிழக்கின் முக்கிய பங்குசந்தைகளில் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றினார்.

பணம் இருந்தாலும் ராணுவம்,அணுகுண்டு என உலகை பகைத்துகொள்ளவே இல்லை. ஒரு ராணுவத்தை திரட்டி எம்மை அவமதித்த மலேசியரை என்ன செய்கிறேன் பார் என கிளம்பவுமில்லை.

நம்மைபோல வரிபணத்தில் 80% அண்டைநாடுகளின் ராணுவ அச்சுறுத்தலுக்கு செலவழிக்கும் தேவையும் அவர்களுக்கு இல்லை. அமைதி, உழைப்பு,வளர்ச்சி

1970களில் அதன் வளர்ச்சி தெரிய ஆரம்பித்தது, உலகம் கவனிக்க ஆரம்பித்தது, “உலகம் சுற்றும் வாலிபனுக்காக” எம்.ஜி.ஆர் சென்று லதா,மஞ்சுளாவோடு ஆடிபாடும் பொழுது நாமெல்லாம் அழகான சிங்கப்பூர் என்றோம்.

1980களில் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் சிங்கப்பூர் முக்கிய இடம் பிடித்தது,

இப்படியாக நாமெல்லாம் திரைப்படத்தில் சிங்கப்பூரை கண்டு மகிழ, லீ என்ன செய்துகொண்டிருந்தார்.

ஆச்சரியம்தான் ஆனால் செய்தார், அப்பொழுதே நாடு கணிணியமாகி கொண்டிருந்தது. அதாவது உலகவோட்டத்திற்கு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சிங்கப்பூரை முண்ணனியில் வைத்துகொண்டே இருந்தார்.

பாரீஸ்டர் படித்தவர் என்பதால், ஒரு வக்கீல் எப்படி எல்லாம் மக்களை ஜமாய்க்கமுடியும் என்பதனை உணர்ந்தவர். சட்டதிட்டம் எப்படி மக்களை கோர்டுக்கு அலையவிடகூடாது என்பதை அற்புதமான சட்டங்களாக உருவாக்கினார்.

அதாவது மக்கள் வீடு வாங்குவது விற்பது எல்லாம் அரசின் ஒரு இலாகா. தனிநபர் சொத்து வாங்குவது விற்பது எல்லாம் அங்கீகரிட்டபட்ட சட்ட இலாகா அதிகாரி முன் மிக முறையாக நடைபெறுவதால் வீண் வழக்குகள் குறைவு

வாய்க்கால் தகறாறு, முடுக்கு தகறாறு, பாதை இல்லா சண்டைகள் எல்லாம் வாய்பே இல்லாத நாடு அது.

சாலைகளில் கார்கள் பெருக பெருக, சில கட்டுபாடுகளை கொண்டுவந்தார். காரின் விலையை, சாலைவரியை உயர்த்தி மறைமுகமாக அவர்களை பொது போக்குவரத்திற்கு கொண்டுவருவது.

அப்படியே காரில் சென்றுதான் தீருவேன் என அடம்பிடித்தால், பெரும் தொகை வசூலித்து இலகுரயில் போன்ற அமைப்புக்களை அற்புதமாக அமைப்பது.

இன்று பலநாடுகளில் மின்காந்த தானியங்கி ரயில்சேவைகள் இருந்தாலும், அவர்களின் தரம் மிக உயர்வானது.

மக்கள் உழைக்கவேண்டும், அதன் வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தரவேண்டும், எல்லா வசதிகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும், இதுதான் லீயின் தத்துவம்.

இன,மத ரீதியான அமைப்புக்களையும்,பேரணிகளையும் தடை செய்தார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அதனை ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் அங்கிகரீத்தார்.

அதாவது நல்ல அரசாங்கம் எதனை செய்யவேண்டுமோ அதனை செய்தார், எதனை செய்யகூடாதோ அதனை அனுமதிக்ககூட இல்லை.

அதனால்தான் கொழும்பு,திரிகோணமலை அளவிற்கு பிரமாதமில்லாத சிங்கப்பூர் துறைமுகம் கப்பல்களால் நிரம்பி வழிகிறது, அதன்மூலம் வருமானம் கொட்டி முழக்குகின்றது.

இது சிங்கள பவுத்த பூமி என மார்தட்டும் இலங்கை இன,மத கொள்கையால் சீரழிந்து கையேந்திகொண்டு அலைகின்றது. அதேபோல‌உலகிற்கே சோறுபோடும் வளமுள்ள மியான்மார், உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாயிற்று.

காரணம் நல்ல அரசு இல்லை. மக்களின் முன்னேற்றத்தை விட, வாழ்க்கையை விட மதவெறி முக்கியமென்றால் அப்படித்தான் ஆகும். 3 வற்றா நதிகள் பாயும் பாகிஸ்தானும் அப்படி ஆயிற்று.

அருமை பாரதத்தை அப்படி ஆக்குவதில் சிலருக்கு அலாதி பிரியம்.

ஆனால் மக்களை லீ வாழவைத்தார், வாழ மட்டும் அல்ல, உலகின் கொடுத்துவைத்த மக்கள் என பெயர் பெறவும் வைத்தார், இன்று எத்தனைநாட்டு மக்களுக்கு அவர்கள் வேலைகொடுக்கின்றனர். வேலையை விடுங்கள், இதுதான் சொர்க்கம் என சொத்துபத்தோடு வந்து செட்டில் ஆன ஐரோப்பியர் ஏராளம்.

இப்படியாக மக்களை நேசித்து, அவர்களின் அபிமானத்திற்குரிய தலைவருக்கு ஏகபட்ட வசைகளும் உண்டு. சர்வாதிகாரி, உரிமை மறுப்பவர், எதிர்கட்சிகளை மதிக்க தெரியாதவர் என எண்ணற்ற குற்றசாட்டு உண்டு.

அதற்கெல்லாம் லீ சொன்னபதில் ஒன்றே ஒன்றுதான், ” நாம் உலகின் போட்டியில் ஓடிகொண்டிருப்பவர்கள், நிதானமாக அமர்ந்து விவாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது, இன்னும் ஓடவேண்டும், வெற்றிபெற்றபின் அதைபற்றி பேசலாம்”

சந்தேகமே இல்லாமல் அவர் வெற்றிபெற்றார், தேசமே வெற்றிபெற்றது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாத சிங்கப்பூரை அவர் நிர்மானித்துவிட்டார்.

இனி கேள்வி கேட்கவேண்டிய நேரம்தான், ஆனால் எதனை கேட்கமுடியும்?, எது தவறேன்று சொல்லமுடியும்? எது நாட்டிற்கு தோல்வியில் முடிந்தது? எதனை அவர் தவறாக செய்தார்?

கச்சா எண்ணெயில் குளிக்கும் நாடுகளின் மக்களை விட ஒன்றும் இல்லா சிங்கப்பூர் மக்கள் வசதியாய் வாழ்கின்றனர்.

எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் குறையாத வசதியுடன் ஜம்மென்று ஒளிர்கிறது சிங்கபூர்.

இன்று சிங்கப்பூர் தன் தேசிய நாளை உற்சாகமாக கொண்டடுகின்றது, வெறும் மீணவ தீவான அந்த சிங்கப்பூர் வெள்ளையனின் அஸ்திவாரத்தாலும் லீ குவான் பின்னால் திரண்ட மக்களாலும் இன்று உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாய் இருக்கின்றது சிங்கப்பூர்.

பலஇன மக்கள் வாழும் நாட்டு அரசு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிங்கப்பூட் அரிச்சுவடி, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவரை படிக்கவேண்டியது அவசியதேவை.

சிங்கப்பூரை வளர்த்த லீக்கு அவருக்கு அங்கு சிலையோ, நினைவிடமோ, பல்லாயிரம் கோடியில் மணிமண்டபம் எல்லாம் இல்லை, காரணம் லீ அப்படி சொன்னார், இதெல்லாம் வேண்டாம், நான் என் கடமையினை செய்தேன் அவ்வளவுதான்

நல்ல தலைவிதி உள்ள நாட்டிற்கு நல்ல தலைவர் வந்தார், நல்ல மக்களும் ஒத்துழைத்தனர் நாடு வாழ்கின்றது

சிங்கப்பூர் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்கள்