சிரிக்க, சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட் …
உலகில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட்
மிகபெரும் வறுமையில் போராடி பின்னாளில் உலக மக்களை எல்லாம் தன்னை நோக்க வைத்து, பெரும் புகழும் பணமும் குவித்த பெரும் வித்தகன் அந்த சாப்ளின்
பேசா படாங்களில் நடித்து, தன் நடிப்பாலே உலகம் தன்னை பற்றி பேச வைத்த மாமேதை
ஹிட்லர் ஆயுதங்களால் ஐரோப்பிய நாடுகளை அலறவைத்த பொழுது கொஞ்சமும் அஞ்சாமல் தன் படங்களில் அவரை விமர்சித்தவர்.
பின்னர் ஹிட்லரின் கொடுமைகள் எல்லாம் வெளிவந்தபொழுது, இது முன்னமே தெரிந்திருந்தால் ஹிட்லரை கிண்டல் செய்திருக்க முடியாது, இவ்வளவு பெரும் கொடுமையினை என் மனம் தாங்காது என சொன்ன இளகிய மனதின் சொந்தக்காரர் சாப்ளின்
ஹிட்லருக்காக சாப்ளினை கொண்டாடிய அமெரிக்கா, பின் அவர் முதலாளித்துவத்தினை சாடி, மனிதனை இயந்திரத்தோடு ஒப்பிட்டு வேலை வாங்குவதை சாடி நடித்தபொழுது அவரை விரட்டியது.
எளிய மக்களின் கஷ்டத்தை சொன்னதால் அவர் அமெரிக்காவால் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தபட்டு ஓட அடிக்கபட்டார், ஆஸ்கர் விருது கூட பெரும் இழுத்தடிப்பிற்கு பின்பே அதுவும் கவுரவ விருதாக வழங்கபட்டது
ஹிட்லரோ, அமெரிக்க முதலாளித்துவமோ யார் என்றாலும் நியாயத்தை சொல்வதில் , எளிய மக்களின் துயரத்தை சொல்வதில் கொஞ்சமும் சமரசம் செய்யா துணிச்சல்காரர் சாப்ளின்
பின்பு பேசும் படங்கள் வந்தன, அவரும் ஓரிரு படங்களில் பேசி நடித்தார், ஆனால் பேசா படங்கள் கொடுத்த புகழே நின்றது
நடிகன், இயக்குநர், காட்சி அமைப்பாளர் என்பதை தாண்டி அவரின் மானிட நேயம் வரலாற்றில் நின்றது
எத்தனையோ சோகங்களை தன்னுள் கொண்ட அந்த சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்து கண்ணீரை தன்னோடு வைத்துகொண்டவர்
“நான் அழுவதாக இருந்தால் மழையில்தான் அழுவேன், என் கண்ணீர் யாருக்கும் தெரிய கூடாது” என சொன்னவர் சாப்ளின்
அவர் மட்டும் சினிமாவில் அனுசரித்து போயிருந்தால் அவருக்கு இருந்த வரவேற்புக்கு பெரும் ஹாலிவுட் நிறுவணங்களை உருவாக்கி இருக்கலாம், சினிமா உலகை ஆட்டியிருக்கலாம்
ஆனால் கலைஞனுக்கு மக்கள் நலனும், சமூக பொறுப்பும் மகா முக்கியம் என நின்றிருந்தவர் அவர்
சாப்ளினின் சாயலிலே உலகெல்லாம் பலர் வந்தார்கள், நமது ஊர் என்.எஸ் கிருஷ்ணன், எம்.ஆர் ராதா, சந்திரபாபு , சோ ராமசாமி ,போன்றோரிடம் கூட சாப்ளினின் சாயல் உண்டு
உலகெல்லாம் சிரிக்க வைத்த, இன்று அந்த காட்சியினை பார்த்தாலும் சிரிக்க , சிந்திக்க வைத்த சாப்ளின் உலகெல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடிகொண்டிருந்த பொழுது மறைந்தார்
அவர் மக்களை அழ வைத்தது இந்த ஒரு தருணத்தில்தான்
“கலைஞன் என்பவன் மக்களின் பணத்தில் நடிப்பவன், மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் துயரத்தையும் தன் கலையில் எடுத்து சொல்லா எந்த கலைஞனும் பெரும் பாவம் செய்கின்றான்..” என்ற அந்த பெரும் கலைஞனின் வார்த்தைகள் சாகா வரம் பெற்றவை.
அந்த மானிடம் நேயமிக்க மகா நடிகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்