சென்னை புத்தக கண்காட்சி 2018
சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது
ஒரு நல்ல புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும்
நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை
சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த சமூகமானால் கொண்டாடபட்டிருக்க வேண்டும்
ஊடகங்கள், செய்திதாள்கள், ரேடியோக்கள் எல்லாம் அதனை மிகபெரும் அளவில் பிரபலபடுத்தியிருக்க வெண்டும்
ஆனால் அவற்றில் என்ன நடக்கின்றது? போலி அரசியல் பரபரப்பு, நாடக சினிமா வெளியீட்டு செய்தி என அது ஏதோ செய்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இம்மக்களுக்கு அந்த ஊடகம் செய்யும் துரோகங்கள்
பாம்பு கூட பழைய எற்பாட்டில் மனிதனுக்கு அறிவு வரவேண்டும் என ஆசைபட்டதாம், இவர்களுக்கு அந்த ஆசை கூட இல்லை
புத்தக கண்காட்சி நிறைந்து வழிய வேண்டிய சமூகத்தில் திரையரங்கும் அரசியல்கூட்டமும் நிரம்பி வழிந்தால் இச்சமூகம் சரியில்லை என்றே பொருள்
பாரதி சாகும்பொழுது 4 பெரும், ஜெயகாந்தன் சாகும்பொழுது 40 பேர் என கூடிய சமூகம் இது. இங்கு புத்தக கண்காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்றால் எப்படி??
எதிர்பார்ப்பது நிச்சயம் தவறுதான்.
ஆனால் நம் கடமையினை நாம் செய்வோம், முடிந்தவர்கள் அனைவரும் நிச்சயம் இப்பொங்கலுக்கு அங்கு செல்லுங்கள், குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய பெரும் கடமை நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டுவது
ஆசிரியர்களுக்கும் இக்கடமை நிச்சயம் உண்டு
ஆக பெற்றோர்களே வருங்கால தலைமுறையாவது நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள அவர்களை அழைத்து சென்று புத்தகம் வாங்க பயிற்றுவியுங்கள்
விரைவில் சென்னை வரும்பொழுது நிச்சயம் ஓடிசென்று நல்ல புத்தகங்களை வாங்க வேண்டும்
எமது அபிமானத்திற்குரியவர்கள் வரிசையில் பழைய எழுத்தாளர்கள் புத்தகம் எல்லாம் வாசித்தாயிற்று. சுஜாதா , மதன் போன்ற ஜாம்பவான்களின் புத்தகம் விடுபட்டிருக்கின்றது வாங்க வேண்டும்
கலைஞரின் அட்டகாசமாக அரசியல் கவிதைகள் புத்தகமாக உண்டு என செய்தி, அப்படி இருந்தால் வாங்க வேண்டும் கிடதட்ட 80 ஆண்டு தமிழகம் அதிலே வந்து அமர்ந்துவிடும்
ஜெயா பற்றிய வாசந்தி புத்தகம் வாங்கும் திட்டம் உண்டு, முகிலின் பல புத்தகங்களும், சொக்கனின் மொஸாட்டும் முதலிடத்தில் இருக்கின்றன
காவல் கோட்டம் போன்ற புத்தகங்களும் வாங்க வேண்டும், பெரியாரின் புத்தகங்கள் நல்ல விஷயம். ஆனால் இன்றிருக்கும் திராவிட எழுத்தாளர்கள் எல்லாம் பெரும் பொய்யினை எழுதுவதால் அப்பக்கம் செல்லும் திட்டமில்லை, அதனை வாசித்தால் நாமே நம் தலையில் மண் அள்ளி போடுவதற்கு சமம், ஒரு குறுகிய வட்டத்திலே இருப்பார்கள். பெருந்தன்மை என்பது அதில் வராது
அதில் பாமரன் என்பவரின் எழுத்து மட்டும் தனித்து நிற்கும், தமிழகத்து உண்மையான பெரியாரிஸ்ட் அவர்தான். அதுவும் அவர் கம்யூனிச அபிமானி, உண்மையான திராவிட போராளி இன்று இருப்பதில் அவர் ஒருவர்தான். அவர் புத்தகம் இருந்தால் நிச்சயம் வாங்க வேண்டும்
Pa Raghavan எல்லா புத்தகமும் வாங்கி குவித்துவிட வேண்டும், தங்கம் என தெரிந்தபின் அது என்ன டிசைனில் இருந்தால் என்ன? விட கூடாது
Saravanan Chandran புத்தகங்கள் நன்றாய் இருக்கும் என்கின்றார்கள் , அவரின் பதிவுகள் அட்டகாசம் அதனால் அவரின் புத்தகங்களும் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
பெண் எழுத்தாளார்களில் Rajathi Salma புத்தகம் படிக்க வேண்டும், அமெரிக்க பல்கலைகழகத்தில் குறிப்பெடுக்க வைக்கபட்டிருகும் புத்தகம் அவருடையது, அதனால் தயக்கமின்றி வாங்கலாம்
இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் அந்த கண்காட்சிக்கு வரவேண்டி இருக்கின்றது, இது போக பாலகுமாரனின் உடையார் போன்றவையும் உண்டு, முத்துகுமாரின் அரசியல் புத்தகங்களும் உண்டு.
இந்த உயிர்மை என்ற பதிப்பகம் நமக்கு சரிவராது, ஆனால் ராஜ் சிவா என்பவரின் அட்டகாசமான பறக்கும் தட்டு , வான்வெளி மாயன்கள் விஷயத்தை அவர்ரை தவிர யாரும் எழுதுவதில்லை, இந்த ஒரு காரணத்திற்காக உயிர்மை பக்கம் செல்ல வெண்டி இருக்கின்றது
ஜெயமோகன் என்பவர் தங்க சுரங்கம் போன்றவர் , அதாவது சகட்டு மேனிக்கு மண் , கல், இரும்பு என நிறையவரும் அப்படியே தங்கமும் வரும் சில நேரம் வைரமும் வரும். பிரித்து அறியவேண்டியது நம் பொறுப்பு , அவரின் சில புத்தகங்கள் நிச்சயம் பாராட்டவேண்டியது
இது பொதுவான புத்தக பட்டியல்
இது போக அறிவியல் நூல்கள், வட்டார நூல்கள் என ஏக விஷயங்கள் குவிந்திருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
நெல்லை மக்கள் இருந்தால் உங்களுக்கு சொல்லி கொள்வது , நம் மனதை அப்படியே நெல்லைக்கு அள்ளி செல்வது சுகா என்பவரின் எழுத்துக்கள்
நெல்லை தமிழ் என்பதல்ல விஷயம், அந்த மண்ணுக்குரிய நகைச்சுவை, கிண்டல், அழுகை , சிரிப்பு, உருக்கம் என எல்லாவற்றையும் கொட்டி எழுதுவார், அவரின் “மூங்கில் முடிச்சு”, “தாயார் சந்நதி” போன்றவை சிலாகிக்க வைப்பவை
மிக அருமையான எழுத்தாளர், இசை ஞானம் உள்ளவர். அவர் எழுத்தாளராகவே இருக்கலாம் ஆனால் அது சோறு போடாது அல்லவா? அதனால் சினிமாவில் இருக்கின்றார் சதிலீலாவதியில் இருந்து பாபநாசம் வரை கமல்ஹாசனோடு பயணிக்கின்றார், தூங்காவனத்தில் கூட ஒரு சீனில் வந்தார்
மனிதர் நெல்லைக்காரர் என்பதில் நெல்லையர் பெருமைபடலாம், முகில் சிவா , Mugil Siva கூட தூத்துகுடிதான் நெல்லை பக்கம் சேர்த்துவிடலாம்
இந்த புத்தக கண்காட்சியினை நன்றாக நோக்குங்கள், ஈழ சிக்கல் பற்றி புத்தகம் இருக்கும் எல்லாம் புலிகள் சார்பாக இருக்கும், இந்தியா சார்பாக ஒரு புத்தகமும் இல்லை
Pa Raghavan யுத்தம் சரணம் கச்சாமி போன்ற ஈழ தொடர்கள் நின்றிருக்க கூடாது, அவைகள் ஏன் நின்றது என தெரியவிலை. ஈழ விவகார உண்மை தன்மை, புலிகளின் கொடூரத்தை எல்லாம் இங்கு எழுத யாருமில்லை அல்லது விடமாட்டார்கள்
இத்தன்மை மாறவேண்டும், அதற்கும் சில புத்தகம் வரவேண்டும்
அது வரட்டும், சென்னை வாசிகளுக்கு சொல்வது இதுதான். தமிழில் நல்ல புத்தகங்கள் வருவது குறைவு, அந்த எழுத்தாளார்கள் எழுத்தை நம்பி வாழ்பவர்கள்
அவர்களும் தேனியும் ஒரே சாதி, எங்கெல்லாமோ இருந்து தேடி தேடி எடுத்து புத்தகம் எழுதுகின்றார்கள், தேனிக்கள் பரவாயில்லை ஆனால் இவர்கள் மனிதர்கள் வாழ்வின் தேவைகள் அவர்களையும் விரட்டும்
இந்த தமிழ் எழுத்தாளர்களை யார் காப்பாற்ற வேண்டும் என்றால் நாமே காப்பாற்ற வேண்டும், வேறு யார் வருவார்கள்?
சென்னையினை சுற்றி பாருங்கள், பெரும் ஜவுளி கடைகள், பெரும் நகை கடைகள், திரையரங்குகள், உணவகம் இன்னபிற கேளிக்கை மையங்கள் எல்லாம் யார் பணத்தில் உருவானவை? சாட்தாத் மக்கள் பணத்தில்
குடும்பத்தோடு அடிக்கடியோ இல்லை பண்டிகைகளுக்கோ, சொந்த விழாக்களுக்கோ குடும்பத்தோடு சென்று மக்கள் செலவழித்த பணத்தில் உருவானவை
ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி பெரும் பணக்காரனாக உருவானான் என தமிழில் காட்ட முடியுமா? சினிமாவிற்கு எழுதியவர் தவிர?
எழுத்தை தமிழன் ஆதரிப்பவன் என்றால் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் மிகபெரும் கோடீஸ்வரன் ஆகியிருப்பார்கள், அப்படி ஆகவில்லை
சினிமா, நகைகடை, உணவகம் போன்றவற்றை போல எழுத்தாளர்களுக்கு அள்ளி கொடுங்கள் என சொல்லவில்லை மாறாக அவர்கள் எழுத்தை விட்டு வெறுத்து போகாத அளவிற்கு கிள்ளி கொடுங்கள்
இந்த புத்தக கண்காட்சி மாபெரும் வெற்றி அடையட்டும், அதில் நல்ல புத்தகங்கள் இன்னும் வரட்டும்
ஊடகங்களும், இன்ன பிற அமைப்புகளும் இந்த புத்தக கண்காட்சிக்கு பெரும் விளம்பரங்களை கொடுக்கட்டும் அது அவர்கள் கடமை
மற்ற ஊடகங்கள் செய்யாமல் இருந்தால் ஆச்சரியமில்லை, ஆனால் சன்டிவி, கலைஞர் டிவி , தந்தி டிவி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
எழுத்தாளனின் வலி கலைஞரை விட , முரசொலி மாறனை விட, ஆதித்தனை விட யாருக்கு தெரிந்துவிடும்?
தன் எழுத்தை தலைசுமையாக சுமந்து சென்று விற்று வாழ்வினை தொடங்கியவர் கலைஞர், அந்த மாபெரும் எழுத்தாளனின் வலி நிறைந்த தொடக்கம் அப்படித்தான் இருந்தது
குங்குமம் பத்திரிகையினை தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்டாக கொண்டுவரவேண்டும் என முரசொலிமாறன் கொண்டிருந்த அக்கறை கொஞ்சமல்ல
பெரியார் தொடங்கி வைத்த பாமர தமிழை, மக்கள் தட்டு தடுமாறி வாசிக்க பழகியதை அப்படியே ஏட்டுக்கு கொண்டு வந்த சிபா ஆதித்தனார் தன் எழுத்துக்களை கொண்டு செல்ல பட்டபாடு கொஞ்சமல்ல
இந்த எழுத்தாளர்களின் உழைப்புத்தான் இன்று சன்டிவி, கலைஞர் டிவி, தந்தி டிவி என வளர்ந்து நிற்கின்றது
கல்கி, சீனிவாசன், போன்றோரின் எழுத்துக்கள்தான் பின்னாளில் விகடனாகவும், கல்கியாகவும், குமுதமாகவும் வந்து நிற்கின்றது
இன்று கோலோச்சும் ஊடகம் எல்லாம் அன்று எழுத்தாளார்களால் உருவாக்கபட்டவை
அந்த நன்றியும் அவர்கள் நினைவும் இருந்தால் இந்த ஊடகங்கள் இந்த புத்தக கண்காட்சி செய்திகளுக்கு பெரு முக்கியத்துவம் கொடுக்கட்டும்
எழுத்தாளர்கள் பணி சிரமானது, எல்லோரும் எழுத முடியாது அதற்கு தனி ஆசீர்வாதமும் அறிவும் வேண்டும், அந்த சிந்தனையாளர்களை புறக்கணிக்கும் எந்த சமூகமும் உருப்படாது
அவர்களை ஆதரிப்போம், அடுத்த தமிழக தலைமுறையாவது அறிவுடை தமிழகமாக மலரட்டும்
பொங்கல் பரிசு பொருட்களோடு புத்தகங்களும் இடம் பெறட்டும், பொங்கலோடு அறிவும் பொங்கட்டும்