பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சே குவேரா : மானிடம் உள்ளவரை அவன் பெயர் வாழும்

Image may contain: 2 people, beard and hat

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது.

ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.

அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா, அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு , ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள்,

அதாவது நமது பகுதியில் வியப்பின் உச்சத்தில் ஒரு உணர்ச்சியாக சொல்வோம் அல்லவா?, வாசிம் அக்ரம் கலக்கும்பொழுது, எதிரணியாக இருந்தாலும் “ச்ச்சே என்ன பவுலர் ” என்போம் அல்லவா? அந்த உணர்ச்சிமிக்க உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.

தென் அமெரிக்க பழங்குடியினர் சொல் அது (அவர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு அதிகம்) , சே என்றால் நமது எனும் பொருளில் வருமாம்.

அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லபிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பிண்ணணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் என சகலரையும் படித்தார்.

முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்.

பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவினை சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, தரையில் விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம்.

ஆனால் மக்கள் ஏழைகள்.

இதுதான் அவரை சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைபொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது, பிடல்காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டி நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்துபத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார். பின் ஐரோப்பா பறப்பார்.

கனிம வளத்திற்காக, அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிகொண்டிருந்தன, அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் சீனியும்.

நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக்கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே, அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார், மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திகாட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். (பெரும் வரலாறு இது,விரிவாக சொன்னால் 1 வாரம் ஆகும்).

ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது, உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை, ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?

ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர்1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.

பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி, தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார். ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.

ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் அணுவுலை, ஜல்லிகட்டு,கச்சதீவு,காவேரி பிரச்சினை ஒருங்கிணைப்பு போலவோ வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.

கிட்டதட்ட ஆப்ரிக்கர்களும் தமிழர்களும் சிந்தனையால் ஒரே மாதிரியானவர்கள், அதாவது ஆளாளுக்கு ஒரு நியாயம், பொது நியாயத்திற்குள் வரவேமாட்டார்கள்.

இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது, காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்ல தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை, ஆனால் இப்படி சொன்னார், “எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்”.

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார், தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று, வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.

கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களை காண சென்றார், இந்தியாவும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார், இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்,

இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் அவனே, அது என்ன வெளிநாட்டு தலைவன்? காமராஜர் நேரு, சாஸ்திரிக்கு பின் உள்நாட்டு தலைவர்களையும் சேர்த்துகொள்ளலாம்.

இலங்கைக்கு சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார்.உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான்.

இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன, அவை இப்படி சொன்னது.

உலகெங்காம் கடும் செல்வாக்கினை பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம்( சாத்தியம் இருந்தது), அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுகொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணைய தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது.

சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல.

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது, கொலை செய்வது கடினம். ஆதாரம் கிடைத்தால் அமெரிக்காவிற்கு நெருக்கடி, அதனால் என்ன? பலவீனத்தில் அடிப்போம்

சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.

சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழசொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரபடுத்தினார்கள்,மக்கள் போராடுகின்றார்கள் என்பதால் களத்தில் குதித்தார் சே, வழக்கம்போல வந்து நின்றார் சே, அமெரிக்கா எதிர்பார்த்தது இதனைத்தான் சண்டை உச்சத்தை அடைந்தது. பொறியில் சிக்கினார் நாயகன்.

அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைகடந்தார், அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

அமெரிக்க படைகள் சுற்றிவளைத்தன, அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார், சுற்றிபார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, “இது என்ன இடம்,பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிகூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா”

சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கின்றார் பார்த்தீர்களா? இதுதான் சே.

விசாரித்து தீர்பளித்தால் சிக்கல் பெரிதாகும், உலகம் கொந்தளிக்கும் என கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்ல தீர்மானித்தது, நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.

எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது

அந்த சுட்டவீரன் சொன்னான், ,முகத்தில் தாடியோடு,கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்றகாட்சி சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திறு என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை, ஒடுகபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.

ஒரு தேசத்தில் போராட சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், “எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்”

ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார் “அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சய்மாக எனது நண்பன்”

இன்று அவரின் பிறந்த நாள்

அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.

சக மனிதனை நேசிக்க தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழ தமிழரை போல அகதிகளாய் வாழும் , சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து,பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களை பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.

தூத்துகுடி மக்களையும் அதில் சேர்த்துகொள்ளலாம்

மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தை பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்க தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.

ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, இவர் ஈழபோராட்டம் மட்டும் சே வின் சம காலத்தில் ஈழத்தில் போராடியிருப்பாரென்றால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக பத்மநாபாவோடு நின்றிருப்பார். அதுதான் சே.

காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் என போராடிய ஒரே போராளி சே மட்டுமே.

அவரிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மாணிட நேயம் மட்டுமே.

ஜார் மன்னனின் அக்கிரமத்தில் களம் புகுந்தான் லெனின், சீன பலவீனமான அரசினை எதிர்த்து களம் கண்டான் மாவோ, அமெரிக்க சுரண்டலை எதிர்க்க வந்தான் ஹோ

ஆனால் உலகெமெல்லாம் மனிதனை மதித்து, அவன் அடிமை விலங்கினை உடைக்க கிளம்பிய மகத்தான மனிதர்களில் கார்ல் மார்க்ஸ் வரிசையில் மானிடத்தை நேசித்த பெருமகன் சே

போதை பொருள் இல்லாத, மருத்துவமும் கல்வியும் எல்லோருகும் கிடைக்கும் நாடாக, இன்றுவரை சேவின் தாக்கம் இருக்கம் நாடாக இருக்கும் கியூபா அப்பெருமகனை நன்றியோடு நினைக்கின்றது

இந்நாளில் அவன் தியாகத்தால் பெற்ற நன்மைகளை எண்ணி கியூபர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்

கென்னடி கொல்லபட்ட அவமானத்தை துடைக்க அமெரிக்கா எதிர்நடவடிக்கையில் கொல்லபட்டவன் தான் சந்தேகமில்லை

ஆனால் இவ்வுலகம் கண்ட புத்தன், இயேசு, வரிசையில் அவனுக்கு எக்காலமும் இடம் உண்டு.

அதனை அமெரிக்கா என்ன? அந்த ஆண்டவனாலும் அழிக்க முடியாது.

அந்த பெருமகனுக்கு கண்ணீர் அஞ்சலி. மானிடம் உள்ளவரை அவன் பெயர் வாழும்

 

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications