தெய்வீக குரலோனுக்கு இன்று பிறந்தநாள் 

Image may contain: 1 person, beard

எத்தனை பாடகர்களும் வரலாம் பாடலாம்

ஆனால் தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும், வெண்கல குரலை வெண்ணையில் வடிகட்டியது போன்ற அக்குரல் அமைவது அபூர்வம்

அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர்

மலையாள உலகில் இருந்துவந்து இசையால் எல்லா இந்தியரையும் கவர்ந்த பாடகர் அவர்

சினிமாவில் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌

பாடல் அவர் குரலில் வரும்பொழுது தேனில் குழைந்து வெண்கலத்தில் வார்த்து அப்படியே காதில் ஊற்றபட்டது போல் இருக்கும்

அக்குரல் உள்ளிரங்கும்பொழுதே ஒரு சிலிர்ப்பும் அமைதியும் ஏற்படும்

கிறிஸ்தவ பாடல்களில் அவரின் பாடல்கள் சாகா வரமுடையது, இந்து பாடல்கள் கேட்கவே வேண்டாம்

“ஹரிவராசனம்” அதிகாலையில் அவர் குரலில் கேட்டால் உருகா மனமும் உருகும்

“ஆனந்தமானது அற்புதமானது” எனும் பாடல் அவரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?

பாடகர்களால் படத்தை வெற்றிபெற செய்யமுடியும் என்பதற்கு எடுத்டுகாட்டு ஜேசுதாஸ், சிந்துபைரவி என்ற படமே ஜேசுதாஸின் பாடலால் நின்றது, மறக்க முடியாது

எழுதினால் எழுதிகொண்டே செல்லலாம், மனிதரின் முத்திரை அவ்வளவு வலுவானது

மனதிற்கு பெரும் நிம்மதியும், உருக்கமும் கொடுக்கும் குரல் அந்த ஜேசுதாசுடையது

அந்த முகம் போலவே அக்குரலும் அமைதியானது, பாடும் பொழுது எவ்வித சலனமும் அவரிடம் இருக்காது, தியானத்தில் பாடுவது போன்றே இருக்கும்

நிறைகுடம் தழும்பாது என்பது அதுதான்

இன்றைய பாடகர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம், காதை பொத்துவார்கள், ஒரு மாதிரி வானம் பார்க்க இழுப்பார்கள், சரிவார்கள் இன்னும் ஏராள இம்சைகள்

நல்ல பாடகர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஜேசுதாஸ் பெரும் உதாரணம், இன்றிருப்பவர்கள் அவரிடம் நிறைய படிக்க வேண்டும்

கிட்டதட்ட 78 வயதானாலும் இன்னும் குரல் அப்படியே இருக்கின்றது, ஆனால் அதிகம் பாடுவதில்லை

1980,90களின் பாடல் உலகில் அவரின் முத்திரை அதிகம், குரலால் கட்டிபோட்டிருந்தார் மனிதர்

ஜேசுதாஸின் குரலும் அவர் பாடலும் அதன் அழகும் ஆத்மார்த்தமானவை, அதனை இனி கொடுக்க இன்னொரு ஜேசுதாஸ் வந்தால் மட்டுமே முடியும்

அந்த தெய்வீக குரலோனுக்கு இன்று பிறந்தநாள் அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள், அவர் குரலின் இனிமை போல அவர்வாழ்வு இனிது அமையட்டும்