மக்கள் மாறாமல் எதுவும் மாறாது…
அந்த 12 பேருக்கும் அழுதாகிவிட்டது, கண்ணீர் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது
இங்கு போராடினால் நியாயம் கிடைக்கும் என்ற அந்த மூட நம்பிக்கை அவர்களை கொன்றிருகின்றது. கொலை பாதக ஆட்சியில் கொல்லமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையில் செத்திருகின்றார்கள்
சுட்டவர்களும் ஏதோ சீன ராணுவத்தை சுட்டது போல சுட்டிருக்கின்றார்கள். ஆயுதம் இல்லா மக்களை மிரட்ட வானை நோக்கி சுடுதல், காலுக்கு கீழ் சுடுதல், ரப்பர் குண்டுகளால் சுடுதல் போன்ற சில விதிமுறை உண்டு
அதை எல்லாம் விட்டுவிட்டு முகத்தில் சுட்டிருக்கின்றார்கள், கொடுமதியாளர்கள், இரக்கமில்லா பாவிகள்
நிச்சயம் வலிதான், ஏற்றுகொள்ள முடியா மாபெரும் சோகம்தான்
அழுது அழுது தீர்த்தாலும் தீரா வலிதான்
ஆனால் என்னாகும்
அடுத்த தேர்தலிலும் திமுகவோ அதிமுகவோ அங்கு வெல்லும், இதே ஸ்டெர்லைட்டோ இல்லை இதுபோல வேறு ஆலையோ வரும்
ஏன் என்றால் அரசியல் அப்படித்தான்
“இன்று சுதந்திரத்திற்காக வேலை, தொழில் இன்றி போராடுகின்றோம், நாளை சுதந்திரம் பெற்றால் இந்த வேலை வெட்டி இல்லாத கூட்டம் என்ன செய்யும்? அவர்களுக்கு என்ன தொழில் தெரியும்?
அவர்கள் அரசியலில் சம்பாதிக்க முயல்வார்கள் இதனால் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசை கலைக்க வேண்டும்” என்றார் காந்தி
“கட்சிக்காரன்எல்லா பயலும் கமிஷன் வேலையில இருக்கான், அவன சரிபண்ணணும்னு நான் முதல்வர் பணியினை விட்டு கட்சி பணிக்கு செல்கின்றேன்” என சென்றார் காமராஜர்
“கட்சியில் இருக்கும் இந்த அண்ணனை ஆட்சியில் எதிர்பாராதீர்கள், ஆட்சியில் இருப்பது தமிழக முதல்வர்” என உறுதியாய் சொன்னார் அண்ணா
கட்சி நடத்துவதும், அதன் பின் பலர் அணிவகுப்பது எல்லாம் இப்பொழுது நாட்டுபற்றா? பொது சேவையா?
ஒன்றுமில்லை
நம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாம் சம்பாதிக்கலாம் என்பதே அன்றி வேறல்ல, 2 கோடி செலவழித்தால் 200 கோடி அள்ளலாம் என்பதை அன்றி வேறு கணக்கு அல்ல
தமிழக கட்சி என்பது சம்பாதிக்கவும், தேர்தல் என்பது பல்லாயிரம் கோடி புழங்கும் சூதாட்டமாகவும் ஆகிவிட்டது
(தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தை இணையவும் இவர்கள் விடமாட்டார்கள். திராவிடம், தமிழ், இந்துத்வா, இந்தி, இந்துமதம் என பல மிரட்டல்களை காட்டியே இம்மாநிலத்தை தேசியத்திலிருந்து பிரிப்பார்கள்
பஞ்சாபே தேசிய கட்சிக்கு வந்துவிட்டதே, இன்று மலையாளாம் முதல் மேகாலயா வரை மாநில மொழி அழிந்ததா? மதம் அழிந்ததா? எது இந்துமயம் ஆயிற்று? எது இந்தி மயம் ஆயிற்று என்பது இம்மக்களுக்கும் புரியாது
அப்படி ஒரு குதர்க்க விளையாட்டும் உண்டு. இதனால்தான் தேசிய கட்சிகள் தமிழர் துயரத்தையும் கண்டுகொள்ளாது, தங்கள் பிரதிநிகளையும் கண்டுகொள்ளாது
காங்கிரஸ் மாநில தலமை, பாஜக மாநில தலமை எல்லாம் டம்மியாக இருப்பது இதனால்தான்)
இதுதான் எதார்த்தம்
இதனால் கள்ள நோட்டை தவிர எல்லா வழியிலும் பணம் குவிக்கும் தேவை தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றது. இங்கு ஸ்டெர்லைட் முதல் எல்லா அழிவும் வந்தது இப்படித்தான்
இந்த பணமே தேர்தலில் வெள்ளமென பாய்கின்றது.
இந்தியன் என்ற உணர்வை மறக்கடிக்கவும், தங்கள் அற்ப கொள்கையின் படுதோல்வியும் பணம் கொடுத்தால் மறையும் என நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கை வெற்றியினையும் கொடுத்திருக்கின்றது
பணமின்றி ஆட்சியில்லை என்ற நிலையினை உருவாக்கிவிட்டார்கள்
உறுதியாக சொல்லலாம், மக்கள் மாறாமல் எதுவும் மாறாது, கட்சியோ அதன் அரசியலோ ஒரு நல்ல முடிவினையும் கொடுக்காது
எத்தனையோ சாவுகளை பார்த்துவிட்ட தமிழகம் இந்த கொடுஞ்சாவில் திருந்தட்டும்
அந்த 12 பேருக்கும் தீரா கண்ணீரை அர்பணித்துவிட்டு, அஞ்சலி செலுத்திவிட்டு தமிழகத்தை பரிதாபமாய் பார்ப்பதை விட என்ன செய்ய முடியும்?
மக்கள் மாறினால் மாநிலம் மாறும், இல்லாவிட்டால் இன்னும் கொடூர அழிவுகள் தொடரும்.
மக்கள் மாறவேண்டும் என்ற ஏக்க பெருமூச்சுடன் 12 பேருக்கும் அஞ்சலி செலுத்துவோம்
இவர்களே இங்கு கடைசியாக கொடூரமாய் செத்தவர்கள் என வரலாறு பதியட்டும்
பாவபட்ட, பரிதாபத்திற்குரிய, அறிவுகெட்ட மக்களிடை பிறந்துவிட்டு நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?