மணியம்மை நினைவு நாள்
என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள்
அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும்
அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி படிப்பும் , அதை தாண்டி தமிழ்புலவர் பட்டமும் தன் மகளை பெறவைத்திருந்தார்
காந்திமதி பெரும் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ஆம் 1940களில் முற்போக்கு பெண்களின் அடையாளமாக அவர் காணபட்டார்,சிறு வயதில் இருந்தே பெரியாரின் பேச்சு, சிந்தனையில் வளர்ந்தவர் அவர்.
அரசியலை அப்பொழுதே பேசிய பெண்மணி அவர், இதனால்தான் அவரின் காந்திமதி என்றபெயர் மாறி, “அரசியல் மணி” ஆயிற்று
பெரியாருக்கு 1940களில் நாக்கில் பிரச்சினை வந்தது, புற்று நோய் என்றார்கள். கடவுளை பழித்ததால் ராமசாமி சாகபோகின்றான் என்றார்கள். அவர் கொஞ்சம் உடல் நலம் குன்றிய காலங்கள் அவை
ஒருவன் உடல்நலம் குன்றும்பொழுதுதான் அவரின் உண்மையான அபிமானிகள் தெரியவருவார்கள், அதுவும் பணக்காரன் என்றால் சொத்துசண்டை, வாரிசு சண்டை அப்பொழுதுதான் முளைக்கும்
அப்பொழுதுதான் பெரியார் உணர்ந்தார், அவர் பாணியிலே சொன்னார், “ஒரு பயலும் எனக்கு விசுவாசமாய் இல்லை, பூரா பயலும் என் சொத்துமேலே குறியா இருக்கான், என் மோதிரத்தை கூட விடமாட்டானுக போல”
எல்லோரும் தூர இருந்து 70 வயதை நெருங்கிய பெரியாரை உடலை பார்த்துகொள்ளுங்கள் என்றார்களே தவிர யாரும் அருகிருந்து பார்க்க முன்வரவில்லை , இந்நிலையில்தான் கனகசபை மகளோடு அவரை நலம் விசாரிக்க வந்தார்
சிறு வயதிலிருந்தே பெரியாரை பார்த்துவளர்ந்த அரசியல் மணிக்கு பெரியாரை சந்திக்க வந்தபொழுது , இனி பெரியாரை நான் அருகிருந்து கவனிக்கின்றேன் என பொறுப்பை ஏற்றார் அரசியல் மணி
பெரியாரை அருகிலிருந்து அவர் கவனிக்க தொடங்கியபொழுது வயது 24, பெரியாருக்கு 60
எல்லோரும் தன் சொத்துக்களை குறிவைத்து நிற்க, தன்னை உள்ளார்ந்த அர்பணிப்போடு வாழவேண்டிய வயதில் ஒரு இளம்பெண் வந்து நிற்பது பெரியாருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
தலையில் பூவும், சூடி தளைய பட்டுசேலை உடுத்தி திருமணம் குழந்தை என மகிழவேண்டிய வயதில். கருப்பு சேலை கட்டி சமூக இழிவை துடைக்க ஒரு துறவி வேடத்தில் ஒரு அசாத்தியபெண் தன் முன்னால் வந்து அமர்ந்திருப்பது அவருக்கு பெரும் ஆச்சரியமானது
தன்னால் வளர்க்கபட்ட எத்தனையோ பேர் தன் முதுகில் குத்த தயாராகிவிட்டபொழுது எங்கிருந்தோ வந்த மணியம்மை தன்னை முழு பாசத்தோடு கவனித்துகொள்வது அவர் மனதை உருக்கியது
நிச்சயம் பெரியாரின் அழகுக்கோ, பணத்திற்கோ ஆசைபட்டு மணியம்மை வரவில்லை. பெரியார் மிக பெரும் போராளி என்பதும் , வராமல் வந்த மாமணி என்பதும், இச்சமுகத்தை புரட்டிபோட வந்த புரட்சிக்காரன் என்பதுமே மணியம்மை பெரியார் முன் மண்டியிட்ட காரணம்
பெரியாரை கவனித்துகொண்ட அரசியல்மணி, மரியாதையாக மணியம்மை என அழைக்கபட்டார்
பெரியாருக்கு அருகிருந்து அவரை மணியம்மை பார்த்துகொண்ட விதத்தில் பெரியாருக்கு நோய் பறந்தது, மனிதர் உற்சாகம் ஆனார்
மணியம்மை பெரியார் கூட்டங்களுக்கு கூடவே செல்வார், பெரியார் கூட்டம் நடக்கும் இடத்தில் பெரியாரின் புத்தகங்களை எல்லாம் அவர்தான் விற்பனை செய்வார்.
பெரியாருக்கு பூர்வீக சொத்து நிறைய இருந்தது, வாரிசாக ஈவிகே சம்பத் வருவார் என கருதிய பெரும் கூட்டம் அவரை சுற்றி இருந்தது, சம்பத் பெரும் அடையாளமாக இருந்தார்
ஆனால் சம்பத்தின் திருமணம் பெரியாரின் விருப்பத்தில் நடைபெறாததிலும் , பெரியார் தங்களை அரசியலுக்கு விடவில்லை என்பதிலும் ஒரு கூட்டம் குறியாக இருந்தது
பெரியாருக்கு மன உளைச்சல் அதிகரித்தடு, தன் கொள்கைகளை விலைபேசி, தன் சொத்துக்களுக்காக தன் அருகே இருக்கும் கூட்டத்தை நம்பி தன் சொத்டுக்கள், மக்கள் கொடுத்த நன்கொடைகளை விட்டுவிட அவர் விரும்பவில்லை
இந்நிலையில்தான் சுதந்திரம் வந்தது, அதிலிருந்தே அண்ணாவிற்கும் பெரியாருக்கும் முட்டிகொண்டது
பெரியார் முடிவிற்கு வந்தார், அக்கால சட்டபடி ஒரே சாதியில் தத்தெடுக்க முடியாது, பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. இவை எல்லாம் 1956க்கு பின் வந்த சட்டங்கள்
இதனால் வேறுவழியின்றி மணியம்மையினை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்தார். இதுதான் சாக்கு என பொங்கிய அண்ணா கும்பல் இதை காரணம் காட்டி தனிகட்சி கண்டன
சம்பத் கூட ஓடிவிட்டார்
பெரியாருடன் மணியம்மையும் வீரமணியும் மட்டுமே இருந்தனர். பெரியார் கொஞ்சமும் அசரவில்லை
உண்மையில் பெரியாரின் தீவிரம் அப்படியே மணியம்மைக்கும் வந்தது, பெரும் போராட்டங்களை நடத்தினார்
குடந்தை போராட்டத்தில் சிறை சென்றது, 1949ல் இந்தி எதிர்ப்பு போரில் கலந்து சிறை சென்றது என பெரும் தீவிரமாய் களத்தில் நின்றார்
அவரின் பேச்சும், எழுத்தும் பெரும் சீறலாய் இருந்தன, பெரியாரின் பேச்சையும், சிந்தனையினையும் அருகிருந்தே எழுதி பெரும் புத்தகங்களாய் கொண்டுவந்தார்
இன்று நாம் காணும் பல பெரியாரின் புத்தகங்கள் அவரால் வந்தது
1958ல் போருக்கு புறப்படு தமிழா என அவர் கட்டுரை எழுதியபொழுது கலவரத்தை தூண்டுகின்றார் என சிறையில் அடைக்கபட்டார்
1974ல் இந்திராகாந்தி டெல்லி ராம்லீலா விழாவில் கலந்துகொண்ட பொழுது, ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் மத விழாக்களில் கலந்துகொள்ள கூடாது என்ற ஒரே குரலாக மணியம்மை குரல் ஒலித்தது
அதையும் மீறி இந்திரா கலந்து கொண்டபொழுது சென்னையில் ராமன், சீதை படங்களை எரித்து சிறை சென்றவர் மணியம்மை, அவரின் தைரியம் அப்படி இருந்திருக்கின்றது
1976ல் மணியம்மை நெருக்கடி நிலையில் கைது செய்யபட இதுவே முதல் காரணம். நெருக்கடி நிலை அறிவிக்கபட்டகாலத்தில் கைது செய்யபட்ட சில பெண்களில் அவரும் ஒருவர்
1977ல் இந்திரா தமிழகம் வந்தபொழுது சர்வாதிகாரியே திரும்ப போ என தைரியமாக கருப்புகொடி காட்டினார் மணியம்மை
பெரியாரின் மறைவிற்கு பின் திராவிட கழக தலைவராகவும் நியமிக்கபட்டார், அவரின் செயல்பாடு மிக நன்றாகவே இருந்தது
சிறுவயதில் இருந்தே பெரியாரை தவிர ஏதும் அறியாத அந்த ஒரே பெரியாரிஸ்ட் பெரியார் இறந்த இரு வருடங்களில் மரித்தார், அவருக்கு வயது அப்பொழுது 58
இதே மார்ச் 10ம் நாள்
அப்பெண் ஆச்சரியமானவர், அக்காலத்திலே ஒரு பெண்ணாக பெரியாரை குருவாக ஏற்க பெரியாரை முழுக்க புரிந்துகொள்ளும் அவருக்கு பக்குவம் இருந்திருக்கின்றது
24 வயதில் எனக்கு திருமணமே வேண்டாம், பெரியாரை கவனித்துகொள்வதே என்பணி என அர்பணித்து நிற்க அவருக்கு அர்பணிப்பு உணர்வு இருந்திருகின்றது
திராவிட நாடே இவள் பெரியாரை மயக்கிவிட்டாள் என வாரி தூற்றும்பொழுது அதை 28 வயது பெண்ணாக கடந்து செல்லும் பக்குவம் இருந்திருக்கின்றது
பெரியாரின் மனைவியாக வாழவும் அவர் தயாராகியிருகின்றார், பெரியாருக்காக எந்த சவாலையும் ஏற்கும் அளவு அவரின் அர்பணிப்பு இருந்திருக்கின்றது
நிச்சயம் பெரியாரின் சொத்துக்களுக்கு அவர்தான் வாரிசு
ஆனால் அந்த சொத்துக்களை சுருட்டினாரா? இல்லை கனகசபை குடும்பத்தை மன்னார்குடி குடும்பமோல் வளர்த்தாரா?
இல்லை தன்குடும்ப ஆட்களை எல்லாம் திராவிடர் கழகத்தில் பொறுப்புக்கு கொண்டுவந்தாரா?
இல்லை, பெரியார் எந்த நோக்கத்திற்காக அதனை கொடுத்தாரோ அதனை இறுதிவரை காத்து நின்றவர் மணியம்மை
இதனால்தான் முதல்வர் ஆனபின் பெரியாரை சந்திக்க வந்த அண்ணாவிற்கு மணியம்மையினை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை
இந்த பதவிக்காகதானே என் மீது இல்ல பழிசுமத்தினீர்கள் என அவர் பார்வையில் இருந்த வீரியத்தை அண்ணாவால் தாங்கமுடியவில்லை
முகத்தை திருப்பியபடியே அண்ணா சொன்னார், “இத்தனை காலம் பெரியாரை காத்து, அவர் கனவு நனவாக காரணம் நீங்கள் தான், நீங்கள் ஒருவர்தான்”
புன்னகையுடன் அதனை கடந்தார் மணியம்மை, அண்ணாவின் வார்த்தைகளை கவனித்தால் அதிலே மணியம்மையின் பெருமை அடங்கும்
பெரியார் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை அவர்தான் தாங்கி நின்றார்
கலைஞரை சந்திக்க சென்றபொழுது அங்கு நித்தி என்ற இளைஞர் அவரை உடனிருந்தே கவனிப்பதாக சொன்னார்கள்
அன்றைய கலைஞர் நிலையினையும் அவரையும் பார்த்தபொழுது , அங்கிருந்த பெரியார் படத்தினையும் பார்த்தபொழுது மணியம்மையும் பெரியாரை இப்படித்தான் கவனித்தார் என்ற நினைவு வந்து போயிற்று
பெரியாரை பற்றி பேசும்பொழுதெல்லாம் மணியம்மை பற்றி பேசியே தீரவேண்டும், பெரியாரின் கடைசி 30 வருடங்களின் ஒவ்வொரு நொடியிலும் அருகில் இருந்து கவனித்து, பெரும் சிந்தனை புத்தகம் எல்லாம் வர அவரே காரணம்
பல காரணங்களுக்காக மணியம்மை பெருமை மறைக்கபட்டது, நிச்சயம் “அம்மா” என தமிழகத்தில் அழைக்கபட்டிருக்க வேண்டியது அவர்தான், பெரியார் கொள்கையாளராக, திராவிட பெண் ஒளியாக அவர் வாழ்வு அப்படி
ஆனால் யாரோ ஒரு பிராமணத்தியினை “அம்மா” என பெரியார் வழி வந்த அதிமுகவினர் சொன்னது காலத்தின் கோலம்
போகட்டும்
பெரியாரின் போராட்டத்தில் உருவான மிகபெரும் பிம்பம் மணியம்மை, பெண்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் பகுத்தறிவிக்க்கும் அவர் பாடுபட்டது கொஞ்சமல்ல, பெரியாரோடு இணைந்து அவர் அந்த அளவு பாடுபட்டிருக்கின்றார்
திராவிட இயக்கம் கொடுத்த உந்துதலில் போராட வந்த பெண்கள் பலருண்டு எனினும் இறுதிவரை பெண் போராளியாக நின்ற மணியம்மை மறக்க முடியாதவர்
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி