மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி
தமிழுக்காக தமிழருக்காக திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும்.
ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியததை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள்
அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுடையோர் மிக குறைவு ஆனால் இந்தியனாக இருப்பதில் அவருக்கு சிக்கலே இல்லை
கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் சொல்லிய அளவிற்கு யாரும் சொல்லவில்லை இதனால்தான் “சிலம்பு செல்வர்” என அழைக்கபட்டார், ரா.பி சேதுப்பிள்ளை எனும் தமிழறிஞர் அவருக்கு அப்படி பட்டம் வழங்கினார்
திமு கழக தலைவர்கள் டமாரங்கள், ஆரவாரமாக தமிழ் ஒலி, இலக்கிய ஒலி எழுப்புவார்கள், எல்லாம் வெற்று கூச்சல்கள்
ஆனால் மபொசி போன்றோர் ஆலய மணி போன்றவர்கள். ஆனால் தமிழகம் டமார கூட்டம் பின்னால்தான் சென்றது
மபொ சிவஞானம் முதலில் காங்கிரசில்தான் இருந்தார், நாட்டுக்காக சிறை எல்லாம் அனுபவித்தார். பின்னாளில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் பேஷன் ஆகிவிட்ட காலம் அவரையும் இழுத்தது
அவரின் தமிழறிவும் தமிழுணர்வும் அப்படி இருந்தது, “தமிழரசு கழகம்” என இயக்கத்தை நடத்தினார்.
இவ்விஷயத்தில் கிட்டதட்ட குமரி அனந்தனின் சாயல் இருந்தது. குமரி அனந்தன் மிகபெரும் தமிழறிஞர், மொழியின் தமிழ் மொழியின் அழகினை தன் பேச்சிலே கொண்டு வந்தவர் ஆனால் தேசியவாதி
சென்னையினை தமிழகத்துடன் இணைத்த தீரமிகு போராட்டத்தின் காரணமே அந்த மபொசிதான், அவரின் போராட்டத்தின் விளைவே திருத்தணியும் தமிழகத்தோடு இணைந்தது
திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழருக்கே என முழங்கிய முதல் மற்றும் ஒரே தமிழ் உணர்வாளர் அவர்தான். முழங்குதல் என்றால் கத்துதல் அல்ல
ஆதாரத்தோடும் வாதத்தோடும் பேசுவது.
அன்று காங்கிரஸ் அரசு அவருக்கு எதிர்ப்பாய் இருந்தது, திராவிட கட்சிகள் எல்லாம் திராவிடமே என மல்லாக்க கிடந்தன
பெரியாரோ சென்னை எங்கே இருந்தால் என்ன திராவிடநாட்டில்தானே இருக்கின்றது என சொல்லிவிட்டு நகர, திமுகவும் அதே நிலைப்பாட்டில் இருந்தது
அன்றைய திமுக அங்கிள் சைமன் கட்சி போலத்தான் இருந்தது, அதுவும் சென்னை சிக்கல் பற்றி கவலைபடவில்லை
ஆனால் சென்னைக்கு தெலுங்கர்கள் மல்லுகட்டியபொழுது “தலை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்..” என உறுமிய ம.பொ.சி தனித்து கவனம் பெற்றார்
அவருக்கு மட்டும் பெரும் ஆதரவு கிட்டியிருக்குமாயின் திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழகத்தோடு இணைந்திருக்கும்.
திரு என்பது தமிழ்பெயர், திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழருக்கே என வாதாடி நின்றார் மபொசி, ஆனால் பெருத்த ஆதரவில்லை
எனினும் கன்னியாகுமரியும், செங்கோட்டையும் தமிழகத்தோடு இணைந்தது என்றால் அந்த தீயினை தொடங்கி வைத்தது நிச்சயம் ம.பொ.சி
தமிழக கிராம பாடல்களை மிகுந்த நுணுக்கத்தோடு ஆராய்ந்தார், அப்படி அவர் வெளிகொண்டுவந்ததுதான் கட்டபொம்மன் வரலாறு
அதுவரை கட்டபொம்மனை பற்றி யாருக்கும் தெரியவில்லை, அவன் பிரபலமில்லை. அப்படி ஒருவன் இருந்தான் போராடி செத்தான் என வெளிகொண்டுவந்தது ம.பொ.சி ஒருவர்தான்
இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு
பாரதியாரை பற்றி பல நூல்கள் எழுதினார், பாரதி புகழ் இன்றுவரை நிலைத்து நிற்க அவரின் நூல்களும் காரணம்
இந்திய சுதந்திர தியாகிகளில் மிக உன்னதமான வ உ சிதம்பரனார் பற்றி பல நூல்களை எழுதி அவர் புகழை உயர பறக்க வைத்தவர் மபொசி.
வஉசிக்கு சிலை வைக்க அன்றைய காங்கிரசாரே தயங்கியதில் கடை கடையாக பிச்சையெடுத்து வ உசிக்கு சிலை வைத்த உத்தமன் மபொசி.
சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் திரைபடத்தை அவரே இயக்கினார்
வள்ளுவனை பற்றி, இராமலிங்க அடிகளாரை பற்றி அவர் எழுதிய அளவு யாரும் தமிழகத்தில் எழுதவில்லை
தமிழகத்தில் முதல் முதலாக சிலப்பதிகார விழாவினை நடத்திகாட்டியவர் மபொசி. இதற்கு பதிலாக அரசியல் காரணத்துடன் தொடங்கபட்டதுதான் உலக தமிழ்சங்க மாநாடுகள்
ஆக உலக தமிழ்சங்க மாநாடு நடக்க அடியெடுத்து கொடுத்தவரே மபொசிதான்
ஈழவிவகாரத்தில் மலையக தமிழரை இணைக்காமல் தீர்வு கொடுக்க கூடாது என வாதாடி நின்றது அவர்தான். அந்த மக்களை நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டவரும் அவர்தான்
புலிகள் யாழ்பாணம், வன்னி, கிழக்கு மாகாணம் மட்டும் ஈழநாடு என சொன்னபொழுது, பத்மநாபா மலையக தமிழரும் அதில் சேர்க்க வேண்டும் என சொன்னார்
புலிகள் பத்மநாபா மோதல் இதில்தான் தொடங்கியது, இதில் பத்மநாபாவினை ஆதரித்தார் மபொசி
சென்னையில் பத்மநாபா கொல்லபட்டபொழுது கண்ணீர் சிந்தி, புலிகள் ஒரு காலத்தில் கேட்க ஆளின்றி அனாதைகளாக அழிவார்கள் என சொன்னவரும் அவர்தான்.
பெரும் ஆற்றலும், நுட்பமான தமிழுணர்வும் பெற்ற மபொசி ஏன் மற்ற திராவிட தலைவர்கள் போல பெரும் அடையாளம் பெறவில்லையென்றால் அவர் பகுத்தறிவு பேசவில்லை,பெரியார் வாழ்க ,அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என சொல்லவில்லை
அறிஞன் ராமசந்திரனை இதயகனியாக ஏற்கவில்லை, அரசியலுக்கே உரிய பல கோமாளிதனங்களை அவர் செய்யவில்லை.
முக்கியமாக “ஏ இந்திய அடக்குமுறை இந்தி ஏகாதிபத்தியமே “, “, ஆரிய பார்ப்பன அதிகார கூட்டமே ..” என அவர் முழங்கவில்லை,
இப்படிபட்ட படுபயங்கர பாவங்களை செய்ததால் அவர் புறக்கணிக்கபட்டார்
ஆனால் கலைஞருக்கு அவர் மீது உள்ளூர பாசம் இருந்தது. மபொசி கனவுகளான பூம்புகார் நிர்மானிப்பு, வள்ளுவர் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை எல்லாம் கலைஞர் கட்டினார்
ம.பொ.சிக்கு இயற்றமிழ் அறிஞர் என்ற பட்டமும் கொடுத்து அவருக்கு சிலையும் வைத்தவர் கலைஞர். தன் மனம் எப்படிபட்டது என்பதை சில இடங்களில் கலைஞர் இப்படித்தன் காட்டினார்.
அது ஆழமாக நோக்கினால் புரிய கூடியது.
தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி
இன்று அவரின் பிறந்த நாள்
நரகாசுரன் முப்பாட்டன், இன்னும் யாரெல்லாமோ பாட்டன், நாங்கள் தமிழர்கள், நாங்கள் மட்டும்தான் தமிழர்கள் என குதிப்பவர்கள் யாரும் அவரை நினைக்க மாட்டார்கள்.
அவருக்கு அஞ்சலி செலுத்த கூட ஒரு பயலும் நினைப்பதில்லை
ஆனால் தமிழராக, தமிழ் இலக்கியவாதியாக, சொல்லும் செயலும் தமிழராக, எல்லை காத்த தமிழராக அவர் வாழ்ந்தார்
எல்லை காத்தவர் நிச்சயம் அவர்தான், சென்னையும் குமரியும் அவரால் இணைந்தன
ஆனால் சீமான் கோஷ்டியிடம் கேளுங்கள், எல்லை காத்தது வீரப்பன், மொழி காத்தது பிரபாகரன்
அந்த மூடர் கோஷ்டி அறிந்தது அவ்வளவுதான்.
தமிழரின் எல்லை காத்த தமிழன் நிச்சயம் மபொசி, தமிழர்கள் ஒருவனை தமிழுக்காகவும் , போராட்ட குணத்திற்காகவும் நினைக்கவேண்டுமென்றால் அதில் மபொசியும் இருப்பார்
அவர் இல்லையென்றால் சென்னை இன்று சந்திரபாபு நாயுடுவின் கீழ் இயங்கிகொண்டிருக்கும்
அங்கிள் சைமன் போன்றோர் இது தமிழர் மண் என பேசிகொண்டிருக்க முடியாது.
பிரபாகரனுக்கும், வீரப்பனுக்கும் அஞ்சலி செலுத்தும் தமிழகத்தில் எல்லை காத்த மபொசியினை நினைத்து பார்க்க யாருமில்லை,
அந்த அளவு குறுக்கு புத்தியுள்ள பைத்தியக்காரன் எல்லாம் தமிழுணர்வு, உணர்வாளன் என கிளம்பியிருக்கின்றான்.
நாம் நல்ல தமிழர், நன்றி மிக்கோர். நல்ல இந்தியனாய். தமிழனாய் வாழ்ந்த அந்த மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்
சென்னையில் இருப்பவர்கள் கூடுதல் அஞ்சலி செலுத்தலாம்