மாபெரும் அறிவியல் தமிழ்பிதாமகன் பா.வே மாணிக்க நாயக்கர்
தமிழகத்தில் மிக சிறந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள் அவர்களில் மிக சிலரே அப்துல்கலாம் போல தமிழ்பற்றும் இலக்கிய அறிவும் கொண்டிருந்தனர்
அவர்களில் ஏராளமானோர் மறைக்கபட்டனர், ஆயினும் தங்கள் ஒப்பற்ற தொண்டால் சிலர் வெளிதெரிவர் அதில் ஒருவர் பா.வே மாணிக்க நாயக்கர்
1870ல் பிறந்தவர் பெரும் படிப்பாளி, அப்பொழுதே பொறியாளர் பட்டம் பெற்ற சிலரில் ஒருவர். கன்னட சிற்பி விஸ்வேஸ்ரய்யாவின் சமகாலத்தவர், அவருக்கு சமமான தகுதி கொண்டிருந்தவர்
லண்டன் பொறியாளர் மாநாட்டில் அவர் கண்டுபிடித்த கருவி இன்றும் கட்டட பொறியியல் உலகில் பயன்படுத்தபடுகின்றது
ராமானுஜம், சர்சிவி ராமன் போன்ற மேதைகள் வரிசையில் தயக்கமின்றி வரும் அறிவியல் மேதை அந்த மாணிக்க நாயக்கர்.
ஆனால் மறைக்கபட்டார்
அக்காலத்தில் ஆங்கிலம் பேச தெரிந்தாலே பறப்பார்கள், அதுவும் பொறியாளர் என்றால் அவ்வளவுதான், ஆனால் இந்த மாணிக்க நாயக்கருக்கு தமிழ்மீது இருந்த அக்கறையில் அற்புதமாக சிந்தித்தார்
ஆம், முதன் முதலில் தமிழில் அறிவியல் தமிழ் என்றொரு வகையினை அவர்தான் கொண்டுவந்தார். இந்த கணிதத்தில் பயன்படும் புள்ளி, திரிகோணமிதி, குவியம் , வடிவையளவு, கன அளவு, பரப்பளவு , அளவை போன்ற வார்த்தைகளை எல்லாம் தமிழுக்கு கொடுத்தது இவர்தான்
தமிழில் ஏகபட்ட நூல்களை இலக்கியமாகவும், அஞ்ஞானம் எனும் அறிவியல் தமிழ் நூலையும் எழுதினார். அது டார்வின் சிந்தாந்தத்தை தமிழர் என்றோ சிந்தித்தனர் என்ற அடிப்படையில் எழுதபட்ட நூல்
அந்நாளைய ஜஸ்டிஸ் கட்சியின் இதழான ஜஸ்டிஸ் பத்திரிகை இவரை எழுத வைத்து கொண்டாடியது
தமிழுக்கு தனி பல்கலைகழகம் வரவேண்டும் என போராடியதும் இவரே
உச்சமாக காவேரியில் கன்னடருக்கு கிருஷ்ணராஜசாகர் கட்ட விஸ்வேரய்யா கிளம்பியபொழுது தமிழருக்க்கு மேட்டூரில் அணைகட்ட பொருத்தமான இடம் பார்த்து ஒப்புதல் செய்தவரும் இவரே
60 வயதில் அவர் சாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் காவேரியில் இன்னொரு அணை கட்டியிருப்பார். வரலாறு அதனை அறுதியிட்டு சொல்கின்றது. ஆனால் தமிழகத்து விதி என்று சரியாக இருந்தது?
வானியல், மொழியியல், பொறியியல், விலங்கியல், நிலவியல் துறையில் பெரும் நிபுணராக இருந்த தமிழர் அவர்
நிச்சயம் அப்துல்கலாமிற்கு அவர் முன்னோடி, ஆனால் இங்கு அவர் பெயரில் எந்த அடையாளமுமில்லை
காரணம் நாசமாய் போன அரசியல், பெரியாருடன் நெருங்கி பழகியவர் ஆயினும் பின்னாளைய அரசியல் சர்ச்சைகள் அவர் பெயரை மறைத்தன
மறைமலை அடிகள், இந்த நாயக்கர் எல்லாம் வேறு கோஷ்டி. பெரியார் வேறு கோஷ்டி அவர் உருவாக்கியது இன்னொரு கோஷ்டி. அந்த கோஷ்டிதான் பின் அரசியலுக்கு வந்தது, தனக்கு தோதானவர்களை மட்டும் தமிழக அடையாளமாக்கியது
அந்த 1870க்கும் 1930க்கும் இடைபட்ட காலத்தில்தான் பிராமண எதிர்ப்பு பலமாய் கிளம்பியது. நாங்கள் ஏன் படிக்க கூடாது, உயர்கல்வி என்பது பிராமணர் சொத்தா? என பலர் படித்து எழும்பினர்
அவர்களில் இந்த நாயக்கர், வழக்கறிஞர் பன்னீர் செல்வம் போன்றோர் முத்திரை பதித்தவர்கள், நீதிகட்சியின் தூணாய் நின்றவர்கள்
அவர்களை எல்லாம் தமிழகம் மறந்துவிட்டது அல்லது மறைக்கபட்டார்கள்
எனினும் பெரும் பொறியியல் கல்வி படித்து, பாரதிக்கு முன்பே தமிழில் உலகளாவிய அறிவியலை, கலைகளை தமிழ்மொழிக்கு கொண்டு வர கனவு கண்டு அதனை செயல்படுத்தவும் முனைந்தவர் மாணிக்க நாயக்கர்
அறிவியல் தமிழின் பிதாமகனும், பெரும் தமிழறிஞருமான அவருக்கு இன்று பிறந்த நாள்
அந்த மாபெரும் மேதையினை நன்றிகெட்ட அரசியல்வாதிகள் தமிழகம் மறக்கலாம் , அறிவியல் தமிழ்படித்த யாரும் மறக்க கூடாது
அந்த மாபெரும் அறிவியல் தமிழ்பிதாமகனுக்கு அஞ்சலிகள்.
தமிழக அரசு இனியாவது அந்த மாமேதைக்கு நினைவு சின்னமும் அவர் பெயரில் விருது அடையாளமும் வழங்கட்டும்.