முதல் தென்னிந்திய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ்…

Image may contain: 1 person, close-up

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவில் வட மாநிலத்தவருக்கே பிரதமர் பதவி இருந்தது, காமராஜர் தனக்கு வந்த வாய்ப்பினை ஏற்க மறுத்தார்

முதன் முதலாக தென்னிந்தியாவினை சேர்ந்த பிரதமர் என நரசிம்மராவ் என்பவர்தான் அறியபட்டார், பெரும்பான்மை இல்லா நிலையிலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சாகசக்காரர்

மனிதர் தீவிர காங்கிரஸ்காரர், நல்ல திறமையான‌ அரசியல்வாதியும் கூட. ராமராவின் எழுச்சிக்கு பின்னும் ஆந்திராவில் காங்கிரஸ் இருந்ததென்றால் அது இவர்களை போன்றவர்களால்தான்

நரசிம்மராவினை நினைக்கும் பொழுது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு

1983ல் கொழும்பு பற்றி எரிந்தது, அதாவது பெரும் கலவரம். 13 ராணுவத்தினரை புலிகள் கொல்ல, அவர்கள் சடலத்துடன் கொழும்பில் ஊர்வலம் நடத்தினர் சிங்களர்

கோபம் கொழும்பு தமிழர் மேல் திரும்பியது , வடக்கே சிங்களனை கொன்றால் தெற்கே இருக்கும் தமிழரை விடுவோமா என வெறியோடு இறங்கினர் சிங்களர்

உண்மையான இனபடுகொலை அதுதான்

போலிஸ் விலகி கொண்டது, அரசு குறிப்புகள் ரவுடிகள் வசம் கொடுக்கபட்டன. தமிழர் வீடு , கடைகள் என மிக துல்லியமான குறிப்புகளுடன் தமிழ்படுகொலை நிகழ்ந்தது

உலக நாடுகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை, இது மக்களின் எழுச்சி என கண்களை துடைத்து கொண்டார் ஜெயவர்த்தனே, உண்மையில் அவரையும் சிங்கள உயர்பீடம் கட்டுபடுத்தி இருந்தது

இந்திரா ஜெயவர்த்தனேவினை போனில் அழைத்து கண்டித்தார், இது மக்களின் கோபம் நான் என்ன செய்யமுடியும்? என கண்ணீர் வடித்தார் தந்திர நரியான ஜெயவர்த்தனே

மக்களின் கோபமாக இருக்கட்டும், இந்திய பிரநிதி வந்து பார்ப்பதில் ஆட்சேபனை இல்லை அல்லவா? என்றார் இந்திரா

வந்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது போல் சொன்னார் ஜெயவர்த்தனே

உயிருக்கு துணிந்த ஒருவரை அனுப்புகின்றேன் என சொல்லி நரசிம்மராவினை அனுப்பினார் இந்திரா

1983 ஜூலை 26ல் கொழும்பு சென்றார் நரசிம்ம ராவ், அவர் வந்தபொழுது வேறு வழியின்றி கலவரத்தை நிறுத்தியது சிங்களம், ஆயினும் கலவர காட்சிகளின் அழிவினை கண்டிருந்தார் நரசிம்மராவ்

ஜெயவர்த்தனே அவரிடம் பம்மினான், ஆனால் பிரேமதாசா கடும் அவமானபடுத்தினார்

அங்கு நடந்த கொடூரங்களை கண்ட சாட்சியாக பெரும் அறிக்கையினை இந்திராவிடம் கொடுத்தார் நரசிம்மராவ், அதன் பின்பே இந்தியா ஈழத்தில் நேரடியாக இறங்கியது

போராளிகளை அழைத்து பயிற்சி கொடுத்ததெல்லாம் இதன் பின்புதான்

ஈழபிரச்சினையில் இந்திய தலையீட்டை தொடங்கிவைத்த நரசிம்மராவ், அதே சிக்கலில் ராஜிவ் கொல்லபட பிரதமரான விஷயமும் நடந்தது

நரசிம்மராவ் ஆட்சியில்தான் பொருளாதார சீர்திருத்தம் நடந்தது, இந்திய சந்தைகள் திறந்துவிடபட்டன அதன் விளைவுதான் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

பெரும் வேலை வாய்ப்புகள், லட்சகணக்கான சம்பளம் மாறிவிட்ட வாழ்க்கை தரம் பெருகிவிட்ட கார்கள், புழங்கும் ஏராளமான பணம் எல்லாம் இதன் பின்புதான்

அதை நரசிம்மராவ் அரசுதான் தொடங்கி வைத்தது

அதே நேரம் விலைவாசி உயர்வும் அதனாலே வந்தது என்பது இன்னொரு விஷயம்.

இன்னொரு கோணத்திலும் நரசிம்மராவ் மேல் ஒரு சர்ச்சையுண்டு, அந்த பாபர்மசூதி அவர் ஆட்சியில்தான் இடிக்கபட்டது

உபியில் கல்யாண்சிங்கின் பாஜக அரசு இருந்தாலும் டெல்லியில் நரசிம்மராவ்தான் இருந்தார், தகுந்த பாதுகாப்புகளை செய்திருந்தால் அதை தடுத்திருக்க முடியும்

ஆனால் மாநில சுயாட்சியில் தலையிடுவது சட்டவிரோதம் என இருந்துவிட்டாரோ என்னமோ?

இப்படி சில சர்ச்சைகள் இருந்தாலும் பொதுவாக நன்றாகத்தான் ஆண்டார், நேரு குடும்பம் பெரும் தயக்கம் காட்டிய காலங்களில் கட்சியினையும் ஆட்சியினையும் நன்றாக நடத்தினார்

குறிப்பாக மன்மோகன்சிங், பா.சிதம்பரம் இவர்களை எல்லாம் மிக நன்றாக நாட்டிற்காக பயன்படுத்திகொண்டார். அவர்களின் கரங்களை சுதந்திரமாக செயலாக்க விட்டிருந்தார்

இன்று அவருக்கு பிறந்தநாள்

அவரின் முகஅமைப்பு அவர் சிரிக்காத முகத்தை கொண்டவர் என காட்டும், இதனால் சிரிக்காத பிரதமர் என்றெல்லாம் பெயர் எடுத்தார்

அவருடைய கெட்ட நேரம் அந்த பெயரை அழிக்காமலே சென்றுவிட்டார்

இப்போது இருந்திருந்தால் மோடி & கோ ஆட்சி செய்யும் அழகிற்கு விழுந்து விழுந்து சிரித்திருப்பார்

அதுவும் மோடியின் அழுகை, கண்ணீர், இன்னும் சில பேட்டிகளை கண்டால் அவருக்கே சிரிப்பு வந்திருக்கும்

அப்படியும் சிரிக்காவிட்டால் தமிழக அரசியலை காட்டியிருக்கலாம், பழனிச்சாமி கோஷ்டியினை கண்டபின்னும் அவரால் சிரிக்காமல் இருக்க முடியுமா?

இந்த தேசத்தின் முன்னாள் பிரதமரும், ஈழவிவகாரத்தில் இந்தியாவின் கரம் தேவை என சொல்லி, அந்த மக்களுக்கு ஆறுதலாக , பாதுகாவலாக‌ இந்தியா நுழைய அடியெடுத்து கொடுத்த அந்த நரசிம்மராவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்