வாமணன் : நெப்போலியன் வரலாறு : 11

Image may contain: one or more people, people riding horses and outdoor

பிரிட்டன் மீது பொருளாதார தடை என அறிவித்தாலும் ஐரோப்பிய நாடுகள் தயங்கித்தான் இருந்தன‌

காரணம் பிரிட்டன் அன்று மிகபெரும் வர்த்தக சாம்ராஜ்யம், வியாபாரத்திற்கு உண்டான அத்தனை சாதகங்களும் அவர்களுக்கே இருந்தது, குறிப்பாக கப்பல்கள்

வியாபாரம் இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கதி அதோகதிதான், அதனால் பிரிட்டனுடன் ரகசிய உறவுகளை வளர்த்தன. சசிகலா கோஷ்டியோடு பன்னீர் கோஷ்டியில் சிலருக்கு உறவு இருக்கின்றதல்லவா? மோடியினையும் மீறி ரகசியமாக பழகுகின்றார்கள் அல்லவா? அப்படி

நெப்போலியன் நிர்வாகத்தில் கில்லாடி, பிரிட்டன் மீது பொருளாதார தடை விதிக்கபட்டிருக்கும் பொழுது பிரான்சின் வருமானம் கூடியிருக்க வேண்டும் , ஆனால் கூடவில்லை என்பதை உணர்ந்தான், ஆக அவன் நூல் பிடித்து பார்த்ததில் ஸ்பெயினும் போர்ச்சுகலும் பிரிட்டனுடன் ரகசிய உறவு இருந்தது புரிந்தது

அவ்வளவுதான் இனி ஸ்பெயின், போர்ச்சுகல் என இருநாடு கிடையாது, எல்லாமே பிரான்ஸ் என சொல்லி ஆக்கிரமித்துகொண்டான்

அவனை எதிர்க்க யாரால் முடியும்? அதனால் வஞ்சக திட்டத்தில் இறங்கியது பிரிட்டன்

காட்டில் சிங்கம் என்றுமே சிங்கம்தான். நேருக்கு நேர் எந்த மிருகத்தையும் சந்திக்கும் பலம் அதற்கு உண்டு

ஆனால் செந்நாய்கள் கூட்டமாக நின்று 50 நாய்களும் ஆளுக்கொரு பக்கமாக இழுக்கும்பொழுது சிங்கம் திணறத்தான் செய்யும்

இந்த யுத்தியில் இறங்கியது பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிரான கொரில்லா யுத்தம் ஆரம்பித்தது

ஆனால் அவன் அசரவில்லை. பிரான்சின் கலவரங்களை அடக்கியே வளர்ந்தவன் என்பதால் அசால்ட்டாக சமாளித்தான். ஓரளவு அமைதி வந்தபின் தன் தளபதிகளை நிறுத்திவிட்டு பாரிஸ் திரும்பினான்

ஆனால் நெப்போலியன் அளவுக்கு அவன் தளபதிகள் இல்லை என்பதால் ஸ்பெயின் பிரிட்டன் கூட்டுபடைகள் பிரான்சு படைகளை விரட்ட தொடங்கின‌

போர் வலுத்தது, பெரும் செலவு பிடித்தது. வருமானத்தை எல்லாம் போர் விழுங்க, நெப்போலியன் தவித்தான்

அமெரிக்கா அருகே கனடாவில் பிரான்சுக்கு காலணி இருந்தது, அவற்றை அமெரிக்காவிற்கு விற்று சமாளித்தான், விலை என்ன தெரியுமா?

1 ஏக்கர் நிலம் 70 சென் அதாவது 70 பைசா

எப்படி எல்லாமோ சமாளித்த நெப்போலியனுக்கு அந்த போர் கடும் சரிவினை கொடுத்தது

பின்வாங்கியது பிரான்ஸ்படை, ஆனாலும் ஸ்பெயினும் போர்சுகல்லும் பதற்றத்திலே இருந்தன, அடிபட்ட புலி நிச்சயம் பாயும் என்ற பதைபதைப்பு இருந்தது

பிரிட்டன் அட்டகாசமாக விளையாடியது. ஸ்பெயினும் போர்ச்சுகல்லும் கத்தோலிக்க நாடுகள் போப்பாண்டவரை தொழும் நாடுகள்

அவ்வகையில் போப்பிற்கு ஆதரவான நாடுகளை எல்லாம் கிளப்பிவிட்டது பிரிட்டன். போப் என்பவர் கிறிஸ்துவின் பிரதிநிதி, அவரை ஆதரிப்பது கிறிஸ்தவ கடமை என கிளம்பின அந்நாடுகள்

அவைகளை பிடித்து காலுக்குள் வைத்துகொண்டு நெப்போலியன் செய்த காரியம் ஐரோப்பாவினை அலற வைத்தது

ஆம், போப் என்பவரை காணவில்லை. நெப்போலியன் வீரர்கள் எங்கோ கடத்தி சென்றுவிட்டனர். கிறிஸ்தவ உலகம் பதறியது, நெப்போலியனிடம் கேட்டார்கள், அவன் சொன்னான்

“அவர் இல்லாவிட்டால் உலகம் ஒன்றும் இயங்காமல் போகாது, பாருங்கள் சூரியன் உதிக்கின்றது பனி பெய்கின்றது”

யாரும் பதில்பேசவில்லை. கொஞ்சநாள் கழித்து வீரப்பன் கும்பலிடம் இருந்து தப்பிய ராஜ்குமார் போல வந்தார் போப்

அவர் உயிரோடு வந்ததே பெரியவிஷயம் என எண்ணிய நாடுகள், அதன் பின் அவருக்காக நெப்போலியனிடம் பகைக்கவில்லை

போப்பினை விட கூடுதல் அதிகாரம் நெப்போலியனுக்கு வந்தது , கிட்டதட்ட 1500 ஆண்டுகால ஐரோப்பாவில் போப்பினை ஆட்டிவைத்த அரசன் நெப்போலியன் ஒருவனே

இரு விஷயக்கள் அவனை உறுத்தின, ஒன்று வெல்லமுடியாத பிரிட்டன் இன்னொன்று பிள்ளை பெறாத ஜோசப்பின்

பிரான்ஸ் வழக்கபடி பிள்ளைபேறு இல்லாத அரசி பதவி நீக்கம் செய்யபட்டு அரசர் இன்னொரு திருமணம் செய்யவேண்டும்

இல்லாவிட்டால் அரச கட்டிலை விட்டு இறங்க வேண்டும்

நெப்போலியனுக்கோ பிரான்சும், ஜோசப்பினும் இரு கண்கள், இரண்டையும் மனமார நேசித்தான். ஆனால் ஒருவரை விட்டு தீரவேண்டிய நிலை

ஜோசப்பினை பிரிய முடிவு செய்தான் நெப்போலியன், அவன் வாழ்வின் மிக கடினமான முடிவு அது.

அரசிபட்டத்தில் இருந்து விலக்கினானே ஒழிய அவளை அடிக்கடி சந்தித்துகொண்டான். நெப்போலியன் கிட்டதட்ட நெற்றிக்கண் ரஜினி போல தீராவிளையாட்டு பிள்ளை ஆயினும் ஜோசப்பின் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது

நெப்போலியன் இப்படி குழம்பிகொண்டிருக்க, பிரிட்டன் மறைமுக அம்புகளை எய்துகொண்டே இருந்தது. இம்முறை ஆஸ்த்ரியாவின் மனதை கரைத்தது

பலமுறை அடிபட்ட ஆஸ்திரியா இம்முறையும் அடிவாங்க தயாரானது, யுத்தத்திற்கு கிளம்பியது

ஆஸ்திரியாவினை அடித்து அடித்து கைவலித்த நெப்போலியன் இம்முறையும் அடித்தான், ஆஸ்திரிய அரண்மனைக்குள் நுழையும்பொழுதுதான் அந்த இளவரசியினை கண்டான்

அவனுக்கு பல கணக்குகள் ஓடின, தன் அரியாசனத்திற்கு ஒரு அரசி வேண்டும், ஆஸ்திரியாவுடன் சமாதானம் வேண்டும் என பல திட்டங்கள் இட்டு இறுதியாக அந்த இளவரசியினை மணமுடிக்க திட்டமிட்டான்

ஒரு விஷயம் உண்மை, சாதிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடித்துவிடும், அதுவும் போர் களத்தில் சாதிக்கும் ஆண்களுக்கு கிடைக்கும் ரசிகைகளே தனி

நெப்போலியனுக்கு அப்படி ரசிகை பட்டாளம் ஐரோப்பா முழுக்க இருந்தது, அதில் சில கூட்டத்தோடு அவன் கொண்ட்டாட்டம் நடத்திய காட்சிகளும் இருந்தன‌

அவன் குதிரை சில நேரங்களில் நெப்போலியனோடு அழகிய பெண்களையும் சுமந்தது, அவன் அழைக்காமலே வந்து அமர்ந்துகொண்ட பெண்கள் அவர்கள்

அப்படிபட்ட நெப்போலியனுக்கு ஆஸ்திரிய இளவரசி மேரி லூயிஸ் தலையாட்டியது ஒன்றும் அதிசயமல்ல‌

அவளை மணக்க நெப்போலியன் விரும்பியதும், ஆஸ்திரிய அரச குடும்பம் மனதில் ஒளிந்திருந்த நெப்போலியன் வெறுப்பு துள்ளி குதித்து மூளைக்கு வந்தது

அவனை வீழ்த்த ஒரே ஆயுதமாக அவளை பயன்படுத்தினார்கள்

அதை அறியா நெப்போலியன் அவளை திருமணமும் செய்தான், வழக்கம் போல அடம்பிடித்த போப் அள்ளி கொண்டுவரபட்டார்

அவள் பிரான்சின் அரசியாக முடிசூட்டிகொண்டாள். நெப்போலியனை வீழ்த்தும் திட்டத்தில் ஆஸ்திரிய அரச குடும்பம் இறங்கியது

தான் பார்த்த எத்தனையோ ரோஜாக்களில் ஒன்று என மேரி லூயிசை நினைத்தான் நெப்போலியன், அதில் ஒளிந்திருந்த பூ நாகத்தை அவன் கவனிக்கவில்லை

இன்னொரு விஷயமும் நோக்கவேண்டியது

சில ஜாதக விஷயங்கள் பல இடங்களில் பலித்திருக்கின்றது, அது எப்படி? எதனால் என தெரியாது. ஆனால் நடந்திருக்கின்றது

ஜோசப்பின் ஏழை சிறுமியாக இருந்தபொழுதே அவள் மகாராணி ஆவாள் என அவள் ஜாதகம் சொல்லிற்று, நெப்போலியனால் அவள் ராணியும் ஆனாள்

நெப்போலியன் அவளை திருமணம் செய்தபின்புதான் மாபெரும் உயரத்தை தொட்டான்

அவளை விவாகரத்து செய்தபின் அவன் பெரும் சரிவினைத்தான் கண்டான். ஏன் எப்படி என்பதற்கு எல்லாம் விடை இல்லை

அந்த ஜோசப்பின் ராணி அந்தஸ்திலிருந்து இறங்கினாலும் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாள் பின் அவளின் பேத்தி ஸ்வீடன் ராஜ குடும்பத்தில்தான் திருமணம் செய்தாள், நெப்போலியன் ஏற்றி வைத்திருந்த உயரம் அது

இன்றும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாட்டு அரசகுடும்பங்கள் அந்த ஜோசப்பினின் வாரிசுகளே. இன்றும் அவள் வாரிசுகள் ஐரோப்பாவினை ஆள்கின்றன‌

ஜோசப்பினை விட்டுவிட்டு நெப்போலியன் பக்கம் வருவோம்

ஆஸ்திரியாவினை தூண்டிவிட்டு அந்தபோர் மணகோலத்தில் முடிந்ததும் சோகமான பிரிட்டன் இம்முறை ரஷ்யாவினை தூண்டிற்று

ரஷ்யா நெப்போலியனின் பொருளாதார தடையினை ஏற்க மறுத்து மீறியது

புதுமாப்பிள்ளை ஆனாலும் சீறினான் நெப்போலியன் , பெரும் படை திரட்ட உத்தரவிட்டான்

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்து கிடக்கும் நாடு ரஷ்யா, மிகபெரும் யானை அது. அதனை பிடித்துவிட்டால் பெரும் பகுதி தனக்கு என திட்டமிட்டான்

ரஷ்ய தாக்குதலுக்கு தயாரானான். ஆஸ்திரிய அரச குடும்பமும் மேரி மூலம் அவனை வீழ்த்த சமயம் பார்த்தது

சுற்றி திரியும் பிரிட்டன் ஒரு எதிரி, தன் கட்டளையினை மீறிவிட்ட ரஷ்யா ஒரு எதிரி என கருவிய நெப்போலியன் தன் காலடியில் இருந்த எதிரியினை கணிக்க தவறினான்

படை திரட்டினான் நெப்போலியன், மிக பெரும் படை அது

ஜூன் 24, 1812, கிட்டதட்ட 7 லட்சம் வீரர்களோடும், அதற்கு உதவ 3 லட்சம் பேரோடும் பெரும் படையோடு நின்றான் நெப்போலியன்

ஐரோப்பாவின் மிக பெரிய ராணுவம் வரலாற்றில் அதுதான்

நெப்போலியனின் உறுமலை கேட்ட ரஷ்ய மன்னன் ஜார் பதறினான். ரஷ்ய கரடியினை விழுங்க பிரான்ஸ் புலி பாய்ந்தது

வாமணன் வருவான்…