வாமணன் : நெப்போலியன் வரலாறு : 12
1812 ஜூன் 24ல் நெப்போலியனியனின் பெரும்படை ரஷ்யா நோக்கி கிளம்பியது
7 லட்சம் வீரர்கள், 70 ஆயிரம் குதிரைகள் 2 ஆயிரம் பீரங்கிகள் , உணவு பொருள் விநியோகத்திற்கு 2000 வேகன்கள் அதில் முழுக்க உணவுகள் என ஐரோப்பாவின் மிகபெரும் படையாக அது இருந்தது
அந்த படையோடும் கூட ஒட்டோமன் சுல்தான்களோடு நெப்போலியன் மோதவில்லை என்பதுதான் வரலாற்றின் மறைக்கபட்ட பக்கம். ஓட்டோமேன் துருக்கியரை அடித்திருந்தால் பட்டுசாலை உட்பட பல சாலைகள் நெப்போலியன் வசமாயிருக்கும், பிரிட்டனின் முதுகெலும்பு முறிந்திருக்கும்
இது நெப்போலியனுக்கும் தெரியாதது அல்ல, ஆனால் துருக்கியர் அவ்வளவு வலுவாக இருந்திருக்கின்றனர், அவர்களை நெருங்கவே நெப்போலியன் யோசித்திருக்கின்றான் என்பது புலனாகின்றது

இப்படி பல இடங்களில் வரலாற்றில் துருக்கிய ஓட்டோமன் பேரரசு மறைக்கபட்டிருக்கின்றது, அது இருக்கட்டும் ரஷ்ய பக்கம் போகலாம்
நெப்போலியன் வருகின்றான் என்றதுமே ரஷ்யா அதிர்ந்தது. அவன் படைக்குமுன் ரஷ்ய படைகள் 5 நாள் தாக்குபிடித்தாலே மகா அதிசயம்
ஜார் மன்னர் கலங்கியிருந்தார், அவ்வாறே ரஷ்யாவும் கலங்கி இருந்தது. அவர்கள் தளபதியுடன் ஆலோசனை நடத்த்தினார்கள்
அந்த தளபதி கிழட்டு நரி, வயது 67 ஆகியிருந்தது ஒரு கண் கிடையாது, அட்ராசிஸ் போரில் நெப்போலியனிடம் தோற்று ஓடியவர் அந்த அவமானம் அவர் நெஞ்சில் இருந்தது, எரிந்து கொண்டிருந்தது.
அவர் பெயர் மிக்கைல் குட்சோவ்
நெப்போலியனை நேருக்கு நேர் சந்த்தித்தவர் என்பதால் அவனை போரில் வெல்ல முடியாது என்பது அவருக்கு புரிந்தது
ஒருவழியாக ஆலோசித்து அந்த குட்சோவ் சொல்படி கேட்பதாக ஜார் மன்னர் சொன்னார், அவரை தொடர்ந்து ரஷ்ய மக்களும் சொன்னார்கள்
குட்சோவ் சொன்னார், “இந்நிலையில் ஒரு பெரும் சக்தி துணையின்றி நெப்போலியனை வெல்ல முடியாது, போரிட்டால் நிச்சயம் தோல்வி
அதனால் நமக்கு உதவும் அந்த பெரும் சக்தி வரும்வரை பின்வாங்குவோம், அந்த உதவி கிடைத்தவுடன் திருப்பி அடிக்கலாம்
பின் வாங்குவது என்றால் சும்மா அல்ல, நெப்போலியனுக்கு யாரும் கொடுக்காத விநோதமான தண்டனையினை நாம் கொடுப்போம், ஆம் இந்த ஊரை விட்டு பரந்த ரஷ்யாவின் வடக்கு பக்கம் நோக்கி சென்றுகொண்டே இருப்போம்
பாலங்களை எல்லாம் தகர்த்துவிடுவோம், பின் தொடர்ந்து அவன் வரமுடியாது
ஒரு பருக்கை கோதுமை விடாமல், ஒரு கால்நடை இல்லாமல், ஒரு குண்டுமணி தங்கம் விடாமல் எடுத்துகொண்டு கிளம்புவோம், இந்த வெறும் கட்டங்களை வைத்துகொண்டு நெப்போலியன் என்ன கிழித்துவிடுவான்”
சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் கிளம்பினார்கள், சில இடங்களுக்கு தீவைத்துவிட்டும் சென்றார்கள்
ரஷ்ய எல்லைக்கு வந்த நெப்போலியன் 2 லட்சம் வீரர்களை அங்கே நிறுத்திவிட்டு 5 லட்சம் வீரர்களோடு ரஷ்யாவிற்குள் புகுந்தான்
அவன் கணக்குபடி 15 நாளில் யுத்தம் முடியும், அப்படியே ஜார் மன்னரை இழுத்துபோட்டு அடித்து தூக்கி எறிந்துவிட்டு ரஷ்யாவினை பிரான்சோடு இணைத்துவிடலாம்
ஆனால் அவனுக்கு அங்கு வினோத சோதனை இருந்தது, எதிரிகள் போருக்கு வந்தால் சண்டையிடலாம், எதிரிகள் பின்வாங்கி கொண்டே சென்றால் அதுவும் இருக்கும் வளங்களை எல்லாம் எரித்துவிட்டு பின்னோக்கி சென்றால்..
நெப்போலியனுக்கு மகா குழப்பம், என்ன இது சண்டைக்கு வருவார்கள் என நினைத்தால் எல்லாவற்றையும் கொழுத்திவிட்டு பின்னோக்கி நகர்ந்தால் எப்படி?
லித்வேனியாவிலிருந்து மாஸ்கோ செல்லும் வழியிலே சிக்கியது பிரெஞ்ச் படை, வழிகள் சரியில்லை குருட்சோவின் படைகள் அப்படி தடைகளை ஏற்படுத்திவிட்டு சென்றன, பாலம் கிடையாது எங்கும் இடிபாடுகள்
இந்த பாதையற்ற பயணத்திலே நெப்போலியனின் படைகளில் 20 ஆயிரம் பேர் காலி
ஒரு வழியாக மாஸ்கோ செல்லும் வழியில் இருந்த லெமொன்ஸ்க் கோட்டையில் சண்டையிட்டார் நெப்போலியன்
1 லட்சம் ரஷ்ய வீரர்கள் மோதினர், மிக பெரும் சண்டையாக உருவெடுக்கும் என நெப்போலியன் நம்பியபொழுது, திடீரென எல்லாவற்றையும் எரித்துவிட்டு ஓடியது ரஷ்யபடை
இப்பொழுது கோட்டை நெப்போலியன் வசம், ஆனால் இடிபாடுகளும் எரிந்த பாகமும் கொண்ட வெற்று கோட்டை, அதனை வைத்து என்ன செய்ய?
நெப்போலியன் தான் மிக பெரும் வலையில் சிக்கிவிட்டதை உணர்ந்தான், ரஷ்ய படைகளோ இருப்பதை எரித்துவிட்டு பின் வாங்கும் வகையில் சென்றுகொண்டே இருந்தது
எங்கு செல்கின்றார்கள் என தெரியாமலே சென்றான் நெப்போலியன்
மாஸ்கோவிற்கு முன்பு அவன் போராடினோ என்ற இடத்தினை நெருங்கியபொழுது பெரும் யுத்தம் வெடித்தது
குருட்சேவ் செய்த தந்திர காரியம் அது, நெப்போலியனுக்கு அழகாய் விளையாட்டு காட்டினான் குருட்சேவ் எப்படி?
இதற்கு அடுத்த இடம் மாஸ்கோ, ரஷ்ய தலைநகர். ஜார் மன்னன் அங்குதான் இருந்தார். இங்கு ஒரு யுத்தம் நடத்தினால் அங்கு ஜார் மன்னர் மாஸ்கோவினை காலி செய்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல வசதியாயிருக்கும்
அவர் அந்த திட்டத்தில் போங்கு போர் நடத்த நெப்போலியனோ வெறிகொண்ட யுத்தம் நடத்தினான்
அன்றைய போர் மிக கொடூரமானது ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் இறந்தனர். நெப்போலியனுக்கு வெற்றி ஆனால் சேதம் அதிகம்
வழக்கம் போல பின் வாங்கி சென்றது ரஷ்யபடை
எதிரிக்கு சேதம் விளைவித்துவிட்டு தன் பக்கம் சேதத்தை குறைத்து கொண்டு, இருப்பதை அழித்துவிட்டு பின்வாங்கி எதிரியினை தவிக்கவிடும் யுத்தியில் கைதேர்ந்திருந்தார் குருசேவ்
இதனை எதிர்பாரா நெப்போலியன் தடுமாறினான், 15 நாளில் முடியவேண்டிய யுத்தத்தை 3 மாதம் இழுத்தார் குருட்சேவ்
களைத்துவிட்ட நெப்போலிய படைகள் கொஞ்சம் தேறி மாஸ்கோ பக்கம் வந்தன
ரஷ்யாவின் தலைநகரை பிடித்துவிட்டால் ரஷ்யா நமது என்ற உற்சாகத்தில் தன் சக்தி எல்லாம் திரட்டி மீதி இருந்த படையுடன் மாஸ்கோவில் நுழைந்தான்
40 ஆயிரம் மக்கள் வசித்த மாஸ்கோ நகரம் துடைத்து காயவைத்தது போலிருந்தது, போதா குறைக்கு வீடுகளுக்கு தீவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்
ரஷ்ய வீடுகள் மரத்தால் ஆனவை என்பதால் அவை கொழுந்துவிட்டு எரிந்தன, நெப்போலியனை வரவேற்றது இவைகள்தான்
ஜார் மன்னரின் கிரெம்லின் மாளிகைக்கு விரைந்தான் நெப்போலியன் அங்கு அரசனின் செருப்பு கூட இல்லை
மாஸ்கோ நகர் எரிய, அங்கேயே வெறுத்துபோய் அமர்ந்தான் நெப்போலியன், அவனுக்கு நிச்சயமாக வெற்றி ரஷ்யாவினை பிடித்தாயிற்று ஆனால் மக்கள் இல்லாத மாஸ்கோவினை வைத்து என்ன செய்வது
வீரர்கள் சீதோஷ்ண நிலையில் சிக்கி இறந்தனர், உணவு குறைந்தது, இனி ஜார்மன்னரை தேடி சமாதானம் செய்துவிட்டு கிளம்பலாம் என திட்டமிட்டான் நெப்போலியன்
மன்னரோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தார், ஆனால் தந்திர குருட்சேவ் சொன்னான், மன்னா சமாதானம் எல்லாம் வேண்டாம், சற்று பொருங்கள் . நமக்கு உதவி செய்ய பெரும் படை ஒன்றுவரும் , நெப்போலியனை ஓட அடிக்கலாம்”
ஜார் மன்னர் சமாதான ஒப்பந்தத்தை இழுத்தடித்தார், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு செல்ல்ல நெப்போலியன் தீர்மானிக்கும்பொழுதுதான் அவனுக்கு எதிராக காலநிலை மாறியது
ரஷ்ய குளிர்காலம் தொடங்கியது குளிரென்றால் பிரான்சிலும், ஜெர்மனிலும் உள்ள குளிர் அல்ல, இது பேய்குளிர்
அசால்டாக மைனஸ் 20 டிகிரிக்கு குறைவாக செல்லும் குளிர், அந்த காலம் தொடங்கியதும் குருட்சேவ் சொன்னார், நமக்கு உதவியாக இயற்கை போராட வந்துவிட்டது இனி அடிக்கலாம்
அந்த பேய்குளிர் ரஷ்யர்களுக்கு நமது பங்குனி வெயில் போல பழக்கபட்ட விஷயம், ஆனால் நெப்போலியனுக்கு புதிது
அந்த குளிரில் அவனும் சிக்கி அவன் படைகளும் சிக்கி, உணவு தட்டுபாடும் இருந்தபொழுதுதான் குருட்சேவ் தாக்க ஆரம்பித்தார்
உண்மையான சண்டையினை குருட்சேவ் அப்பொழுதுதான் தொடங்கினார், நெப்போலியனோ சண்டையிட்டு களைத்து குளிரில் நடுங்கியபடி இருந்தான்
மாவீரன் நெப்போலியன் நிச்சயம் பெரும் வித்தகன், குருட்சேவினை அவன் சமாளித்தான், ஆனால் கடுங்குளிர் அவனை தோற்கடிக்க தொடங்கியது
வெல்லமுடியா ஒரு மாவீரன் இயற்கையிடம் தோற்க தொடங்கினான், இயற்கை உதவியுடன் குருட்சேவ் உற்சாகமாக முன்னேறினான்
நெப்போலியன் ரஷ்யாவில் சிக்க பிரிட்டன் தன் அரசியல் விளையாட்டை பிரான்சில் நடத்தியது, இனி நாடு என்னது என ஒருவன் புரட்சி செய்ய தொடங்கினான்
தகவல் நெப்போலியனுக்கு சென்றது
வாமணன் வருவான்..