வாமணன் : நெப்போலியன் வரலாறு : 7
ஜூன் 9, 1798ல் எகிப்தை குறிவைத்து தன் படைகளை நகர்த்தினான் நெப்போலியன் 29 வயதுதான் அவனுக்கு அப்போது.
ஜோசப்பினுடன் ஒரு பக்கம் தீரா காதல் என்றாலும் இன்னொருபக்கம் மிக நேர்த்தியான யுத்த நகர்வு இருந்தது. எகிப்திற்கு நிலம் வழியாக செல்ல அவனுக்கு ஐரோப்பாவில் தடையேதும் இல்லை, ஆனால் ஆசிய நுழைவாசலில் இருந்தது சிக்கல்
ஆம், ஆட்டோமன் துருக்கியர் அங்கு வலுவாக இருந்தனர். துருக்கி சிரியா இஸ்ரேல் அரேபியா ஆர்மீனியா என பரவி இருந்தது அவர்கள் சாம்ராஜய்ம், கிட்டதட்ட 500 வருடமாக அசைக்க முடியாத சக்தி அவர்கள், இரண்டாம் உலகபோரில்தான் அவர்கள் அரசு முடிவுக்கு வந்தது.
அவர்களை வெற்றிகொள்வது நடக்காத காரியம் என்பது அவனுக்கு புரிந்தது. நெப்போலியன் மாவீரன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மாவீரனுக்கும் விவேகம் வேண்டுமல்லவா? அது அவனுக்கு இருந்தது
அங்கு சிலநாட்கள் பணியாற்றிய அனுபவத்தில் அவன் அதனை உணர்ந்திருந்தான்
தரைபடை நடத்துவதில் தன்னிநகரில்லாதவன் நெப்போலியன் ஆட்டோமான் துருக்கியரை எதிர்க்க தயங்கினான், சிலுவை போர்களில் துருக்கியரிடம் ஐரோப்பியர் தோற்றதில் இருந்து அந்த பக்கமே எட்டிபார்ப்பதில்லை
இதனால் கடல்வழியே எகிப்துக்கு செல்ல ஆயத்தமானான், இத்தாலி அவன் கையில் இருந்ததால் அதன் அருகில் இருந்த மால்ட்டா வழியாக செல்ல முயன்றான்
மால்டா மீது யுத்தம் தொடுத்தான், வெறும் 3 வீரர்களை மட்டுமே இழந்து அத்தீவினை பிடித்தான், அது இலங்கை போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது
கடற்போரில் அவன் பெற்ற முதல்வெற்றி அதுதான்.
அந்த உற்சாகத்தோடு எகிப்தின அலெக்ஸாண்டிரியா நகரை நோக்கி சென்றான், அது அலெக்ஸாண்டர் உருவாக்கிய அற்புத நகரம்
அந்த மாவீரன் உருவாக்கிய நகரத்தில்தான் நெப்போலியனும் கால்பதித்தான், யுத்தம் தொடங்கிற்று மம்லுக் எனப்படும் எகிப்து ஆட்சியாளர்களுடன் மிக கொடூரமான யுத்தம் நடந்தது.
அவர்களை நெப்போலியனின் படை வீழ்த்தியது, கிட்டதட்ட 5 ஆயிரம் மம்லுக் வீரர்கள் இறந்தனர். எகிப்து நெப்போலியன் வசமாயிற்று, அவன் இழந்தது வெறும் 300 வீரர்களே
அதாவது நெப்போலியன் எனும் தளபதி பிரென்ஞ் குடியரசு சார்பாக எகிப்தை வீழ்த்திகாட்டினான்.
ஜூலை 21 1798ல் எகிப்தில் வெற்றிகொடி நாட்டிய நெப்போலியன், அலெக்ஸாண்டிரியா நகரத்தை சுற்றிபார்த்தான் நெப்போலியன், அலெக்ஸாண்டரின் கலை மனமும் அவனின் பிரமாண்டமும் அவன் கண்முன் வந்துபோயின, அலெக்ஸாண்டர் மிக பெரும் திறமைசாலி, அற்புதமான ரசிகன், நிர்வாகி என வாய்விட்டு சொன்னான்.
அலெக்ஸாண்டிரியா அப்படி அவன் மனம் கவர்ந்தது.
கெய்ரோவில் நுழைந்தான் நெப்போலியன், எகிப்து என்றால் நைல் நதியும் பிரமீடுமே அடையாளம்.
இதில் பிரமீடு என்பது என்னதான் உலக அதிசயம் என்றாலும் அது கிட்டதட்ட தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்ட் கொண்டது. அதாவதுள், அதனை வெற்றிகொண்ட அரசர்கள், நான் அரசன் எனும் மமதையில் அங்கு நுழைந்தால் கொஞ்ச நாளில் இறந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை
தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்டும் அப்படியானது, அரசு பதவியில் இருப்பவர்கள் நானே எல்லாம் எனும் அகங்காரத்தில் நுழைந்தால் அவர்களுக்கு சிக்கல் என்றும், பக்தர்களில் ஒருவராக வந்தால் சிக்கல் இல்லை என்பதும் அங்குள்ள நம்பிக்கை
சிலர் அரசு பதவியிலிருந்து அங்கு சென்றுவிட்டு பின் பதவிபறிபோன சம்பவங்கள் இன்றும் தமிழகத்தில் பிரபலம்
ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்றால், ராஜராஜ சோழனின் கனவு அவ்வாலயம். அன்று அது சோழ நாடு.
அக்கால பழக்கபடி ஒரு நாடு யுத்ததில் தோற்குமாயின் முதலில் இடிக்கபடுவது ஆலயங்கள், காரணம் கோவில் என்பது தங்க சுரங்கம், அக்கால மன்னர்கள் கொட்டியது அப்படி.
இதனால்தான் அக்கோவிலில் கால் வைக்கும் எதிரி மன்னர்கள் அழியட்டும் என்றொரு வேண்டுதலை அவன் வைத்ததாகவும் அது இன்றுவரை பலிப்பதாகவும் நம்பிக்கை.
எகிப்தியர்கள் மன்னனின் உடலை பாதுகாக்க பிரமீடுகளை கட்டினர், அவன் மீண்டும் உயிர்பெற்றுவருவான் என நம்பினர். அவன் சமாதியில் பொன் பொருள் எல்லாம் குவித்து வைத்தனர்.
மந்திர தந்திரங்களில் மிக பெரும் பெயர் பெற்றவர்கள் எகிப்தியர்கள், பைபிளின் யாத்திராமகம் தெளிவாக சொல்கின்றது, கடவுளுக்கே சவால் விட்ட மந்திரவாதிகள் அவர்கள்
அப்படிபட்ட எகிப்தியர்கள் ஏதோ சக்தியினை பிரமீடில் நிறுத்தியிருப்பதாகவும் அதனை கொள்ளையிடுபவர்கள் அழிவதாகவும் நம்பிக்கை
நெப்போலியன் அசாத்திய பிறவி, அவன் பிரமீடுகளை தோண்டி கொள்ளையிட உத்தரவிட்டாலும் வீரர்கள் அஞ்சினர்
அசால்ட்டாக சொன்னான் நெப்போலியன் “என்ன பிரச்சினை? ஓரிரவு முழுக்க நான் அங்கு தனியாக தங்குகின்றேன், நான் மறுநாள் வந்து உத்தரவிட்டால் நம்புவீர்களா”
ஆச்சரியத்தில் வியந்தனர் வீரர்கள், சவாலை துணிந்து எடுத்த நெப்போலியன் அவர்களுக்கு அதிசயமாக தெரிந்தான்
ஒரு மாலையில் தனியாக சென்று பிரமீடு ஒன்றில் படுத்துகொண்டான், உள்ளூர் எகிப்தியர்கள் நெப்போலியனின் வீரர்களிடம் கேட்டார்கள், “
பெட்டி தயார் செய்யலாமா? எளிதுதான் 3 அடி உயரத்தில் செய்துவிடலாம்”
ஆனால் மறுநாள் காலையில் அசால்ட்டாக வந்தான் நெப்போலியன், அனைவருக்கும் ஆச்சரியம். எகிப்தியர்களுக்கோ மகா நடுக்கம், “இவன் கடவுளாக இருப்பானோ? பாரோ ஆக்கிவிடலாமா?”
அங்கு என்ன நடந்தது என கேட்டார்கள், அமைதியாக சொன்னான் நெப்போலியன், “நான் கண்ட அனுபவம் மகா வசித்திரமானது, சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் விசித்திரமான சக்திகள் நிலவுவது உண்மை”
அதன் பின் அவன் அதிகம் பிரமிடு புதையலை தேடவில்லை, அவன் வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துவந்தார்கள்.
அதில் அவன் ஜோசபைனுக்கு எதுவும் எடுத்து வைக்கவில்லை, ஆனால் அங்கிருந்து காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் மட்டும் எழுதிகொண்டிருந்தான்.
அதே நேரம் எகிப்து நமது, இனி இங்கிருந்து செங்கடல் வழியாக சென்று பிரிட்டிசாரை நடுங்க வைக்கலாம், திப்பு சுல்தானுக்கு உதவலாம் என திட்டம் தீட்டிகொண்டிருந்தான் நெப்போலியன்
நெப்போலியன் எகிப்தை பிடித்துவிட்டான், வலுவான கப்பல்படையோடு நகர்கின்றான் என்றதுமே பிரிட்டன் தவித்தது, அவனை தடுக்காவிட்டால் அது பிரிட்டனின் வியாபாரம் முதல் இந்திய ஆக்கிரமிப்பு வரை எல்லாவற்றையும் பாதிக்கும் என கருதியது
நெப்போலியனும் திப்பு சுல்தானும் இணைவதை தடுக்க அது மிக அவசர திட்டம் தீட்டியது
காரணம் இருவரும் இணைந்துவிட்டால் அவ்வளவுதான், மொத்த இந்தியாவும் திப்புவின் தலமையில் பிரான்சுடன் வியாபாரம் செய்யும் நிலைக்கு வந்திருக்கும். இருவரின் திறமைக்கு முன்னால் பிரிட்டன் படை நின்றிருக்க முடியாது
திப்பு இரு போர்களில் வெள்ளையனை கதறவிட்டு வெற்றிகொடி நாட்டியிருந்தார், அந்த நம்பிக்கைதான் நெப்போலியன் திப்புவினை உற்று நோக்க வைத்தது
இருவரும் கடிதம் எல்லாம் எழுதியிருந்தார்கள், நேரில் பார்க்காமலே இருவருக்கும் நட்பு இருந்தது
பிரிட்டன் அவசர கதியில் இயங்கியது, திப்பு அமைதியாக இருக்க கூடாது அவரை யுத்தத்தில் இழுத்து சாகடிக்கவேண்டும் அதே நேரம் நெப்போலியனும் யுத்த களத்தில் இருந்தாக வேண்டும், யாரை முந்தி கொல்லமுடியுமோ கொன்றுவிடலாம்
நெப்போலியனை எதிர்க்க அனுபவசாலியான ஒரு தளபதியினை அனுப்பினார்கள்
அவனால்தான் திப்பு சுல்தான் தலைவிதி, இந்திய தலைவிதி எல்லாம் மாறிற்று.
அவன் பெயர் ஹொராஷியா நெல்சன், பழுத்த அனுபவசாலி
40 வயது நெருங்கியிருந்தாலும் கடற்போரில் பெரும் அனுபவம் வாய்ந்தவன்
அந்த சிங்கத்தை நெப்போலியனை நோக்கி ஆகஸ்ட் 10 1798ல் ஏவியது பிரிட்டன்
இரு சிங்கங்களும் சந்தித்துகொள்ள நேரம் நெருங்கிற்று, ஏற்கனவே பிரிட்டனின் பலமிக்க கப்பல்படை மீது வெறுப்பில் இருந்த நெப்போலியனுக்கு இம்முறை வாய்ப்பு கிட்டிற்று
வாமணன் வருவான்…