வாமணன் : நெப்போலியன் வரலாறு : 10

நெப்போலியன் கதை என்ன ஆனது? என ஒரு பயலும் கேட்கவில்லை, ஆனாலும் சொல்வது நம் கடமை

Image may contain: one or more people, people riding horses, horse and outdoor

நெப்போலியனின் வெற்றியில் ஐரோப்பா அதிர்ந்து கொண்டிருந்தது, மிக அசால்ட்டாக ஸ்பெயின், போர்சுக்கல் தவிர எல்லா நாடுகளையும் அமுக்கியிருந்தான். ஜெர்மன் அப்பொழுது இப்பொழுது போல் அல்ல, பிரஷ்யா என வேறு பெயரில் வேறு வடிவத்தில் இருந்தது

ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் நாம் நண்பர்களாக இருக்கலாம் “இந்த கோட்டை தாண்டி..” என சொல்லிவிட்டு அவனுக்கு அடங்கியே இருந்தன‌

அதாவது மோடிக்கு தமிழக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் அடங்குவது போல் அடங்கி இருந்தன‌

பிரிட்டனின் போர் அறிவிப்பில் இருந்தாலும் அதனால் நெப்போலியனை அசைத்துபார்க்க முடியவில்லை, வெற்றி மேல் வெற்றி பெற்று பெரும் பூதமாக மாறியிருந்தான்

அவன் மனதில் பிரிட்டனை போட்டு சாத்தவேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருந்தது, அதுவரை அவன் பெற்ற தோல்வி அந்த நெல்சனுடையது

எப்படியாவது பிரிட்டனை வென்று, அந்த நெல்சனின் இன்னொரு கண்ணை பிடுங்கி அவனை பிரான்சுக்கு இழுத்துவர உள்ளம் துடித்தது

கடுமையாக திட்டமிட்டான் நெப்போலியன் அவனின் மிரட்டலுக்கு ஸ்பெயின் வழிக்கு வந்தது ஸ்பெயின் பிரான்ஸ் கூட்டு கடற்படை உருவானது

இதுதான் ஆங்கில கால்வாயினை கடந்து பிரிட்டனை அடிக்க போகும் படை என்பதால் கவனமாக திட்டமிட்டான் நெப்போலியன்

இன்றுவரை பிரிட்டன் அசைக்கமுடியா சக்தியாக, வீழ்த்தமுடியா தேசமாக இருக்க அதன் நிலபரப்பும் காரணம், அது தீவுநாடு அதன் பலம் அது

சுற்றிலும் கடல் என்பதால் தன் கடற்படையினை அவ்வளவு பலமாக வைத்திருந்தது பிரிட்டன், பிரிட்டனின் சாம்ராஜ்யத்தின் அடித்தளம் அந்த கடற்படை

அதில்தான் பாய்ந்தான் நெப்போலியன், ஆங்கில கால்வாயில் கடும் சண்டை மூழ்ந்தது

ஆங்கில கால்வாய் என்பதுதான் ஐரோப்பிய கடலுக்கு வந்து பின் சூயஸை கடந்து ஆசியாவிற்கு வரும் வழி. ஆங்கில கால்வாயினை மட்டும் பிரிட்டனிடனிடமிருந்து பறித்துவிட்ட்டால் பிரிட்டனின் கதை முடிந்தது

அது வாஸ்கோடகாமா போல ஆப்ரிக்காவினை சுற்றி வருவதெல்லாம் முடியாத விஷயம்

அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் பிரிட்டனும் கடும் எதிர்ப்பில் இறங்கியது

நெப்போலியனின் முழு கவனமும் ஆங்கில கால்வாய் பக்கம் இருக்க, பிரிட்டன் தந்திரமாய் ஒரு காரியத்தில் இறங்கியது

அதனிடம் பணமும் இன்னபிற வசதிகளும் இருந்ததால் நெப்போலியனுக்கு அஞ்சி ஆதரவு தெரிவித்த ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவினை மனம் மாற உதவின‌

அப்படித்தான், இப்பொழுது தங்களை காப்பாற்ற ஒரு சக்தி இருந்தால் பழனிச்சாமியும் பன்னீரும் யார் அழைத்தாலும் செல்லமாட்டார்களா?

அப்படி சரி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்

பிரிட்டன் வகுத்துகொடுத்த திட்டபடி ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரான்சின் மேல் படையெடுக்க வேண்டும்

அப்படி செய்தால் நெப்போலியன் ஆங்கில கால்வாயினை விட்டுவிட்டு அலறி அடித்து பிரான்ஸ்கு திரும்புவான் எனும் நரிதந்திரம் அதில் இருந்தது, அப்படி நெப்போலியன் திரும்பும்பொழுது கடல் ரீதியாக அவனை வளைப்பதால் ஆஸ்திரிய ரஷ்யா வெற்றிபெறுவது எளிது சொல்லபட்டது

இந்த தகவல் நெப்போலியனுக்கு கிடைத்ததும் அவன் ராணுவ மூளை உஷாரானது

இரு எதிரிகளை இணையவிடுவது என்றுமே யுத்த பூமியில் ஆபத்து என்பது ராணுவ பாடம்

அவசரமாக பிரான்ஸுக்கு திரும்பிய நெப்போலியன் ரஷ்ய ஆஸ்திரிய படைகள் சேரவிடாமல் தடுக்க முயன்றான்

ஆஸ்திரியா நோக்கி சென்றான் “ஆஸ்ரலிட்ஸ்” எனும் இடத்தில் ஆஸ்திரிய‌ படைகளுக்கும் அவனுக்கும் சண்டை மூண்டது, அடித்த அடியில் ஆஸ்திரியா அவன் வசமானது

ஆஸ்திரியாவோடு கரம் கோர்க்க வந்த ரஷ்யா ஓடி திரும்பியது

நெப்போலியனுக்கு இது வெற்றி என்றாலும் ஆங்கில கால்வாய் யுத்தம் வெற்றி கொடுக்கவில்லை, அவன் படைகள் திரும்பின‌

அதாவது ஆங்கில கால்வாயினை தக்க வைக்க தந்திரமாக ரஷ்யாவினையும் ஆஸ்திரியாவினையும் இழுத்துவிட்டதில் அது வென்றது

ஆங்கில கால்வாய் போர் சொன்ன முடிவு நெப்போலியனுக்கு ஒன்றுதான், பிரிட்டனின் பணவரவு மிக அதிகம் அவர்களால் தொடர்ந்து போரிடமுடிகின்றது, அதனால் பிரிட்டனை போட்டு அடிக்க அதன் பணவரவினை குறைக்க வேண்டும், இன்னும் மிகபெரும் ராணுவம் வேண்டும்

ஆஸ்திரியா தன்னோடு வாலாட்டியதில் கடும் கோபமடைந்த நெப்போலியன் ஐரோப்பாவினை மொத்தமாக விழுங்கி நின்றான்

ரஷ்யா ஒரு ஒப்பந்தம் போட்டு என்னை விட்டுவிடு சாமி என ஓடிஓளிந்தது, ஆனால் வன்மம் குறையவில்லை இன்று இந்தியா சீன இடையே இருக்கும் ஒருமாதிரியான புரிதல் ரஷ்யாவிற்கும் நெப்போலியனுக்கும் இருந்தது

அன்று ரஷ்யாவினை ஆண்டது ஜார் மன்னர்கள்.

இப்பொழுது ஐரோபாவில் இரண்டே நாடுதான். ஒன்று நெப்போலியன் நாடு இன்னொன்று நெப்போலியனின் ஆளுமையினினை ஏற்றுகொண்டு அடிமையான நாடுகள்

ரஷ்யா தனி, பிரிட்டன் தனியாக ஒதுங்கி இருந்தன.

தான் வென்ற நாடுகளில் யாரை பதவிக்கு அமர்த்தலாம் என யோசித்தார், ஏற்கனவே பிரெஞ்ச் அதிகாரிகளாக யாரையெல்லாமோ அமர்த்தி கசப்பான அனுபவங்களை பெற்றவருக்கு அடுத்தவர்களை நம்ப முடியவில்லை

விளைவு தன் பரந்த குடும்பத்தின் உடன்பிறந்தோர் எல்லாம் அரசன் ஆனார்கள்

நெதர்லாந்து, போலந்து, பெல்ஜியம், ஹங்கேரி என வரிசையாக நெப்போலியனின் உடன்பிறந்தோரும் உறவினர்களும் மன்னரானார்கள்

அரசியல் அப்படித்தான், எப்பொழுது யார் முதுகில் குத்துவார்கள் என தெரியாததால் குடும்பத்தாரை நம்புதலே நலம்

வாரிசு அரசியலை விடநம்பிக்கைக்கு உகந்த அரசியல் ஏதுமில்லை, இல்லாவிட்டால் நெப்போலியனுக்கு டைரக்டர்ஸ் காட்டிய நன்றியினை விடுங்கள், கலைஞருக்கு ராமசந்திரனும் இன்னபிற தலைவர்களும் காட்டிய நன்றிகள் பெரும் உதாரணம்

வாரிசுகள் பதவியில் அமர்த்தினால் நாளை சிக்கல் என்றால் கண்கள் பனித்தன, இதயம் கனிந்தது என சொல்லிவிட்டு சமாதானம் ஆகலாம், அடுத்தவன் என்றால் விடுவானா?

அப்படி நெப்போலியன் குடும்பம் முழுக்க ஐரோப்பிய‌ மன்னார்குடி இல்லை மன்னர்குடி ஆயிற்று

ஐரோப்பாவின் மிகபெரும் சக்தியாக உயர்ந்து நின்றான் நெப்போலியன், அவன் கண்ணசைவில் ஆடியது ஐரோப்பா.

ஐரோப்பாவின் அமைதியினை தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நின்றான் அவன்.

ஒரு சாதரண சிப்பாய் பிரான்சின் மன்னராகி, ஐரோப்பிய சக்கரவர்த்தியான அதிசயத்தை கண்டு வியந்து நின்றது உலகம்.

தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கி உயர்ந்து நின்றான் நெப்போலியன்

ஐரோப்பிய சக்ரவர்த்தி ஆனபின் அவனுக்கும் போப்பாண்டவருக்கும் சர்ச்சை வலுத்தது, போப்பின் அதிகாரங்களை குறைத்தான் நெப்போலியன்

அவமானமடைந்த போப் இயேசுபாடுபட்ட சொரூபத்தின் முன் கதறிகொண்டிருந்தாரே தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை

சக்கரவர்த்தியானாலும் நெப்போலின் அதே எளிய வாழ்க்கையில் இருந்தான். ஒரு கட்டில் ஒரு மேஜை அறை நிறைய புத்தகம் என அவனது வாழ்வு மிக எளிமையாயிருந்தது

ஆனால் ஜோசபைன் ராணியாக திகழ்ந்தாள் அதனை அவன் கண்டுகொள்ளாவில்லை, அவளின் சிரிப்பு அவனுக்கு அவ்வளவு முக்கியம்

ஜோசப்பின் தங்கதட்டில் உண்டாலும் நெப்போலியன் அலுமினிய தட்டில்தான் உண்டான். அது எளிமையென்று அல்ல, அது அப்பொழுதுதான் கண்டுபிடிக்கபட்டிருந்தது

ஐரோப்பா முழுக்க ஆண்டாலும் பிரிட்டன் அவனுக்கு அடிபணியாதது அவனுக்கு பெரும் மனக்குறையாயிருந்தது, அவனுக்கு இருந்த இன்னொரு மனக்குறை ஜோசபைனுக்கும் அவனுக்கும் பிள்ளைகள் இல்லை

ஐரோப்பிய அரச வழக்கபடி ராணிக்கு குழந்தை இல்லாவிட்டால் அரசன் மறுமணம் செய்யவேண்டும்

எப்படியும் ஜோசபின் தனக்கொரு வாரிசு கொடுப்பாள் என நாட்களை நகர்த்தினான் நெப்போலியன், நாட்கள் மட்டும் நகர்ந்தன‌

பிரிட்டனை என்ன செய்யலாம் என கடுமையாக யோசித்தான் நெப்போலியன், முதலில் அதன் பொருளாதாரத்தை தகர்க்க திட்டமிட்டான்

ஒரு சுபதினத்தில் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஐரோப்பாவிலும் தனக்கு அடங்கி இருந்த நாடுகளிடமும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டுகொண்ட ரஷ்யாவிடமும் மிரட்டி சொன்னான்

பிரிட்டன் மீது பொருளாதார தடை விதிக்கபட்டிருக்கின்றது, அவர்களோடு யாரும் வியாபாரம் செய்ய கூடாது

கிராமங்களில் நாட்டாமை ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பார் அல்லவா? அப்படி

அதுவரை நெப்போலியன் படையெடுப்பான் நிச்சயம் ஒருநாள் லண்டனை நோக்கி வருவான் என எதிர்பாத்திருந்த, அவன் யுத்தம் மட்டுமே நடத்துவான் என எதிர்பார்த்த பிரிட்டன் மிரண்டது

தன் அடிமடியிலே கைவைத்த நெப்போலியனை இனி சும்மாவிட கூடாது என கிளம்பியது

நெப்போலியனின் தந்திர கணக்கிற்கு தந்திரத்தால் பதிலளிக்க திட்டமிட்டது பிரிட்டன்

அது செய்யும் நகர்வை பொறுத்து அடுத்த கட்ட காரியத்திற்கு இறங்க தயாராக இருந்தான் நெப்போலியன், எப்படியாவது பிரிட்டனை வென்று காட்டவேண்டும் என்ற வெறியில் வேங்கையாக சுற்றிகொண்டிருந்தான்

வாமணன் வருவான்…