2004 சுனாமியால் கொல்லபட்ட அந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்
லெமூரியா அல்லது குமரிகண்டம் ஒன்று இருந்தது, பல வகையில் அது சிறப்புற்றிருந்தது முழுக்க முழுக்க தமிழகபூமி, எல்ல்லோரும் தமிழர் என்றால் யாராவது கொல்லவரவேண்டும் அல்லவா?, யாரும் வரவில்லை அந்த வேலையய் கடல் பார்த்துகொண்டது.
அந்த கண்டம் அப்படியே கடலால் விழுங்கபட்டு சுவடில்லாமல் ஆக்கபட்டது, இளங்கோவடிகள் அதனை சிலப்பதிகாரத்தில அப்படியே பதிந்துவைத்திருக்கின்றார், அதோடு கடலின் வெறி தீர்ந்ததா என்றால் இல்லை, சிலப்பதிகாரத்திலா என்னை பற்றி எழுதுகிறாய் என சீறி கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரத்தின் மையமான பூம்புகாரையும் அப்படியே விழுங்கிற்று.
அப்படியே மாகாபலிபுரத்து கடற்கரைகோயில் போல இன்னும் பல கோவில்கள் அதன் கிழக்கு பக்கம் இருந்ததாகவும் அவை எல்லாம் கடலுக்குள் சென்றதாகவும் கதைகள் உண்டு.
அவ்வளவு ஏன்? கிருஷ்ணபரமாத்மா ஆண்ட துவாரகா குஜராத் கடலில் மூழ்கியது, மிகசிறந்த அறிவுகூட்டம் நிரம்பிய அட்லாண்டிக் கண்டம் கடலில் மூழ்கியதாக சாக்ரடீஸ்காலத்திற்கு முன்பிருந்தே குறிப்புகள் உண்டு.
நிலம் மூழ்காமல் பேரலைகள் எழும்பி அழிவை உண்டாக்கும் என கடலோடிகள் எழுதிய குறிப்புகள் உண்டு
இப்படியான அலைகள் பொதுவாக ஜப்பானியரைத்தான் தாக்கும், நிலநடுக்கம், துறைமுகத்தை தாக்கும் பேரலைகள் எல்லாம் அவர்களுக்கு நமது பங்குனிமாத வெயில்போல மிக அசால்டாக எதிர்கொள்வார்கள், ஆழிபேரலைக்கு அவர்கள் தான் டிசுனாமி என பெயரும் வைத்தார்கள்.
இதனை உவமையாக கூறிய ஒரே ஞானவான் விவேகானந்தர், நிறைய வாசித்தவர், அதனால் சில பேச்சுக்களில் சொல்லியிருக்கிறார், “உள்வாங்கி சென்று பின் பெரும் வேகத்தோடு பொங்கும் கடல்போல, உள்ளம் ஓய்வில் உறுதிபெறவேண்டும்” என்பார் ,
அன்று ஆடிபோனது தெற்காசியா, ஆட்டம் என்றால் சகலமும் கையறு நிலைக்கு சென்று, இனி என்ன ஆகுமோ? என கிட்டதட்ட 3 மாத பரபரப்பு.
இதே நாள் 13 ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் நடந்தது, மிக சரியாக காலை 6.30 (இந்திய நேரம்) இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் மேற்கே கடலுக்குள் உலகின் மூன்றாம் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது,
அதாவது நிலமகளுக்கும் கடல்மகளுக்கும் ஏதோ தகறாறு, நிலமகள் குலுங்கிவிட்டாள், கடல்தாய்க்கு பொறுக்கவில்லை சீறிவிட்டாள்.
சீறிய அலைகள் இந்தியா, தாய்லாந்து, வங்கதேசம், மலேசியா, இந்தோணேசியா, சிங்கப்பூர் ,இலங்கை,மாலத்தீவு, கிழக்கு ஆப்ரிக்ககா வரை அடித்து நொறுக்கிற்று.
அதாவது அபொழுது கடற்கரையில் நின்றவர்களுக்கு அது வித்தியாசமான காட்சி, கடல் உள்வாங்கியது பாறைகள் தெரிந்தன, சிப்பியும், சங்குகளும் அதில் ஒட்டிகொண்டிருந்தன, மீன்கள் துள்ளிகொண்டிருந்தன, கடல் உள்ளே சென்றுகொண்டே இருந்தது, இதனை யாராவது முன்னர் கண்டதுண்டா? ஆனந்தமாய் ரசித்தார்கள்.
சென்னை மெரீனா வாக்கிங் சென்றவர்கள், கரையில் மீன்வியாரம் செய்தவர்கள்,கன்னியாகுமரி, வேளாங்கண்ணியில் புனிதநீர் ஆடியவர்கள் என சகலரும் திடீரென வாரி சுருட்டபட்டார்கள், பின்னர் கருப்பு சகதிபூச பிணமாய் தள்ளபட்டார்கள், எல்லாம் நடந்தது 10 நிமிடத்திற்குள்.
திடீரென் 5 பனைமர உயரத்திற்கு சேறும் சகதியுமாய் அது சீற, யார் என்ன செய்யமுடியும், மனிதர்,படகு,கப்பல்,வீடு,குடிசை என அனைத்தையும் அப்படியே அள்ளி சென்று, அழித்துவிட்டு பேயாட்டம் ஆடி அடங்கியது கடல்.
தமிழகத்தில் இறந்தவர் 10ஆயிரம், இலங்கை மட்டும் இல்லை என்றால் தமிழகம் பெரும் அழிவினை சந்தித்திருக்கும், சுமத்திராவின் கிழக்குபகுதியில் நடந்திருந்தால் மலேசியா,சிங்கப்பூரே இருந்திருக்காது.
கிட்டதட்ட உலகில் 3லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலி, மாபெரும் இயற்கை சீற்றம், நூற்றுகணக்கான செயற்கை கோள்களும், நிலநடுக்க கண்காணிப்பு மையமும் இயங்கும் உலகுதான், ஆனால் அதுவரை நிலநடுக்கம் பூமியில் வரும் ஆடும், இப்படி கடலை தூண்டிவிட்டு அழித்தது அன்றுதான் உலகம் கண்டது.
ஆனந்தமாய் சென்றுகொண்டிருந்த எத்தனைபேர் வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் புரட்டிபோட்டது அந்த கடல் சீற்றம், எத்தனை அனாதைகள், எவ்வளவு வாழ்வாதார அழிப்பு, ஈழத்தில் புலிகளின் முதுகெலும்பான கடல்படை முற்றிலும் நாசம்,
அந்த கடல் அரக்க அலையால்தான் ராஜபக்சே சிரிக்கமுடிந்தது.
தமிழக கடற்கரை முழுக்க கவிழ்ந்த டோலர்களும், உடைந்த படகுகளும், கருப்புசகதியில் புதைந்த உடல்களும், இன்று நினைத்தாலும் அப்படியே கதறி அழதோன்றும்.
லெமூரியா,பூம்புகார்,துவாரகா போல முழு அழிவில்லை என்றாலும், இந்த சீற்றத்திற்கே மனித குலம் ஆடிபோனது, உலகம் அச்சத்தில் உறைந்து போனது.
என்னதான் மனிதன் ஆயிரம் பெருமை பேசினாலும், அணுகுண்டுகளால் உலகை பயமுறுத்தினாலும் அல்லது அணுகழிவினை கண்டேய்னரில் மூடி கடலிலே கொட்டி, கெட்டிக்கார தனத்தை காட்டினாலும், இயற்கை கொஞ்சம் சீறினாலும் என்ன ஆகும் என்பதற்கு அந்த துயரவரலாறு பெரும் உதாரணம்.
மிஞ்சிபோனால் மனிதனால் அவன் வாழ்க்கைகுறிய சில வசதிகளை உண்டாக்கலாம், அந்த வசதியில் கடல்மேல் ஓடலாம், கடலுக்குள்ளும் ஓடலாம், ஆனால் ஒரு காலமும் அவனால் இயற்கையை வெல்லவே முடியாது, அதன் சக்தி அப்படி.
கிட்டதட்ட மிக நவீன அணுகுண்டுகள் 10,000திற்கும் மேலாக வெடித்தால் கூட அந்த விளைவு வந்திருக்காது என்பது அறிவியலே கூறும் உண்மை, உலகின் நவீன அணுகுண்டுகள் மொத்தம் 2ஆயிரத்தினை கூட தாண்டாது.
நிச்சயமாக இம்மாதிரியான சீற்றங்களை தடுக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை.
அதனை தடுக்கும் சக்தி நிச்சயமாக இறைவன் ஒருவருக்கே உண்டு, அவரிடம் அந்த சுனாமி ஏன் தாக்கியது என கேட்கமுடியாது ஆனால் இனி இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்காதீர்கள் என கெஞ்சுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்?
கெஞ்சுவோம், அதாவது அப்படி ஒரு அழிவு ஜப்பானில் வந்து புக்குஷிமா உலை கடலுக்குள் சென்று, ஏகபட்ட பணத்தை கொட்டியும் இன்னும் முடிவில்லாத நிலையில் அபாயநிலையில் இருக்கும் ஜப்பான் புகுஷிமா போல, கூடங்குளத்தையும் ஆக்கிவிடாதீர்கள், இயற்கை யாருக்கும் அடங்காது என மன்றாடி இந்திய அரசிடம் கேட்டுகொண்டிருக்கும் இடிந்தகரை மக்களை போல நாமும் இறைவனிடம் கேட்போம்.
அரசுகளை விட இறைவன் கருணயுள்ளவன்,
வேளாங்கணணியில் சுனாமியில் மரித்தவர்களை புதைத்து சிலுவை வைத்திருக்கின்றார்கள், அந்த சிலுவைக்கு அடியில் இருந்திருக்கவேண்டியரில் நானும் ஒருவன், ஆனால் விதி கொஞ்சம் திசைமாற்றி உவரி கடற்கரையில் அன்று என்னை நிறுத்தியிருந்தது.
அப்படியே வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தால் இன்று இந்த குழுவில் ஒரு குழப்பமும் இருந்திருக்காது 🙂
அழகான உவரி கடற்கரை, கடலின் ஒரே பெரிய அலையில் கலவரம் நடந்த ஊராக அதனை மாற்றியது, ஆலயமணி ஒலித்துகொண்டே இருந்தது, அரசு அதிகாரிகள் வந்து நிலமையை எடுத்து கூறினர், யாருக்கும் எதுவும் புரியவில்லை, இந்தோனேசிய நிலநடுக்கம் நம்மை எப்படி தாக்கும் என பேசிகொண்டிருந்தார்கள்,
ஆனால் உவரியில் உயிர்சேதமில்லை.
ஏதோ புரிந்தும் புரியாமலும் பல மீணவர்கள், உடைந்த படகுகளை வெறித்துபார்த்துகொண்டிருந்தனர், உவரிஆலய பக்தர்கள் அலறி அடித்து காலிசெய்தனர், திசையன்விளை மகாபரபரப்பானது.
“ஊர் அழிஞ்சி போச்சயா.” என ஒரு மீணவ முதியவர் டிரக்கர் ஓரம் கதறிகொண்டிருந்தார்.
பின்னர் வீட்டிற்குவந்து தொலைகாட்சி பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது, அந்த முதியவர் மட்டுமல்ல தெற்காசியாவே அப்படித்தான் அழுதுகொண்டிருந்தது,
மீணவர்களை கடலை மடி என்றுதான் சொல்வார்கள், ஆம் அவர்களுக்கு அது அன்னை, தாயின் மடிபோல் அவர்கள் பாதுகாப்பான இடமாகவே கருதபடும், தாயே பிள்ளைகளை கொன்ற கொடூரம் அது
ஆனால் அந்த காட்சி மறக்கமுடியாது, மதம்பிடித்து பாகனையும் சுற்றி இருப்போரையும் கொன்றுவிட்டு வெறி அடங்கியதும் கண்ணீர் சிந்தியபடி அமைதியாக நிற்கும் யானைபோல பிணகுவியலை உருவாக்கிவிட்டு அமைதியாக அலை வீசிகொண்டிருந்தது அந்த கடல்
இனி அப்படி ஒரு நாள் வராமலே போகட்டும்
இந்த ஆழிதாண்டவத்தில் ஏன் சாகிறோம் என தெரியாமலே, தங்களுக்கு பிழைப்பு கொடுத்த அல்லது தாங்கள் நேசித்த கடலாலே கொல்லபட்ட அந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்.