36 வயதிலே மறைந்த மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 1 person, close-up

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது

16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள்

சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள்

வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு

ஆனால் 21 வயதிற்கு மேல் அவளின் ஜாதகம் மாறியது, எப்படி மாறியது என்றால் கலர் படங்கள் வந்தன, அதில் அவள் உடலை விட கண்கள் பெரும் கவனம் பெற்றன‌

யாருக்கும் இல்லாத கண்கள் அவை, மாயகண்கள். அந்த கண்கள் ஆண்களை கட்டிபோட்டன, அவளுக்காக ஓடி வந்தார்கள், மர்லின் மன்ரோ பிரபலமானார்

உலகில் எந்த நடிகைக்கும் இல்லா வரவேற்பு அவளுக்கு ஹாலிவுட்டில் இருந்தது, பெரும் தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் அவளை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள்

பணம் புரண்டது, அவள் அதன் மேல் புரண்டாள், இன்னும் யார் யார் எல்லாமோ அவளுக்காக காத்திருந்தார்கள்

காத்திருந்தவர்கள் ஏராளம் என்றாலும் அவளோடு சுற்றியவர்கள் பெயரில் அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடி வரையில் பெரிய பட்டியல் இருந்தது

சினிமாவில் அவளை பார்க்க பெரும் கூட்டமென்றால், அவள் செல்லுமிடமெல்லாம் பெரும் கூட்டம் கூடியது

இதோ நடக்கும் மயில் என ஹாலிவுட் அவளை கொண்டாடியது

வறுமையுடன் போராடி, பெரும் உச்சத்தை அடைந்த மர்லின் மன்றோ தனக்கான வாழ்வினை அடைய அடுத்த போராட்டத்தை தொடர்ந்தார்

அவள் வாழ்வில் ஆடவர் பலர் மஞ்சத்திற்கு வந்தனர், அவர்கள் அவளிடம் எதையோ தேட அவளோ மனதை தேடினாள்

அவளுக்கு ஒரு உளவியல் சிக்கல் இருந்தது, தந்தையின் அன்பை உணராத அவள் அதற்காக ஏங்கினாள். அழகிதான் பணத்தில் மிதந்தவள்தான் ஆனால் அது அவளுக்கு நிம்மதி கொடுக்கவில்லை

வயது கூடிய ஆண்கள் காட்டிய அன்பு அவளுக்கு ஒருவித சிலிப்பினை கொடுத்தது அப்படித்தான் 60 வயது எழுத்தாளருடன் பழக அது திசைமாரி திருமணத்தில் முடிந்து பின் தோல்வியும் ஆனது

கால்பந்து வீரருடனான திருமணம், இன்னும் சில திருமணங்கள் அவளுக்கு தொல்வியில் முடிந்தன‌

அவள் களங்கில்லா தூய அன்பை தேடி அலைந்தாள், அந்தோ பரிதாபம் பணத்தையும் சொகுசு வாழ்க்கையினையும் கொடுத்த அந்த ஹாலிவுட் அவளுக்கு அவள் விரும்பிய அன்பை கொடுக்கவே இல்லை

அது அவளை போதையில் வீழ்த்திற்று, கசக்கி எறியபடும் ரோஜா போலவும், காற்றில் ஆடும் தீபம் போலவும் அவள் வாழ்வு சென்றுகொண்டிருந்தது

நட்சத்திரம் என்பது தொலைவில் இருந்து பார்க்க ஒளிவீசி அழகாய் தெரிந்தாலும் உள்ளுக்குள் அது எரிந்துகொண்டிருகும்

திரை நட்சத்திரங்களும் அவ்வகையே, மர்லின் அதற்கு விதிவிலக்கு இல்லை

தனக்கொரு குழந்தை பெற்றுகொள்ள பெரும் விருப்பம் கொண்டாள் , அந்நாளைய கணவன் மூலம் அவளுக்கு கருவும் கிடைத்தது, ஆனால் சிதைந்தது

வறுமையான காலங்களில் அவளுக்கு வந்த போதை பழக்கம் பின்னாளில் குழந்தைபெற்றுகொள்ள முடியாதபடி செய்தது

எனினும் அதை தன்மனதோடு அழுத மர்லின் மன்றோ சொந்த படகம்பெனி நடத்தவும் செய்தார், அனாதையாக ஹாலிவுட்டுகு வந்து தன் 30ம் வயதிலே சொந்த கம்பெனி நடத்தும் அளவிற்கு அவளிடம் செல்வம் கொட்டியது

இந்நிலையில்தான் இதே ஆகஸ்ட் 5ம் தேதி 1962ல் இறந்தார், அவள் சாவு இன்றுவரை மர்மமே. தூக்கமாத்திரை பல உண்டார் என சொல்லி வழக்கு முடிக்கபட்டாலும் கென்னடியுடன் கூடிய உறவே அவளுக்கு சிக்கலை ஏற்படுத்திற்று என்ற செய்தியும் வந்தது

உலகமே அவள் கண்களிடம் கட்டுபட்டு கிடந்தகாலமது, கென்னடி என்ன விசுவாமித்திரரா?

அன்றைய உலகினையே ஆட்டிபடைத்த அந்த கென்னடி மர்லின் மன்றோவிடம் அடிமையாக இருந்தார்

ஆனால் அவளோ அவரைகொண்டு தனக்கு என்ன லாபம் என பார்க்கவே இல்லை, அமெரிக்க முதல் குடிமகளாகும் வாய்ப்பும் இருந்தது

அவளோ உண்மையான அன்பை தேடினாளே அன்றி அதிகாரத்தையோ பெரும் புகழையோ தேடவில்லை

ஆனால் அவள் இறந்தபின் யாருக்கும் வாய்க்கா சோகம் அவளுக்கு வாய்த்தது

ஆம் அவள் இறந்தபின் அவள் உடலுக்கு உரிமை கோர ஒரு உறவும் வரவில்லை. தந்தை தெரியாது தாய் மனநோயாளி

அவள் வாழும்பொழுது அவள் கண்ணுக்கும் அவள் உடலுக்கும் கோடி டாலர் கொட்டி அவளுக்காக காத்திருந்த ஆண்களில் ஒருவர் கூட இறந்தபின் அவள் உடலை வாங்க உரிமையாய் முன்வரவில்லை

அதாவது அவள் உடல் யாருக்கும் அப்பொழுது தேவைபடவில்லை என்பதே கசப்பான உண்மை

பின் சில உண்மை ரசிகர்களால் அடக்கம் செய்யபட்டது

தேசமே அவள் அடக்கதிற்கு கண்ணீர் வடித்த காட்சிகளும் பின் நடந்தன‌

அற்புதமான நடிகையும் கூட, அவளின் நடிப்பு அவளுக்கு பல விருதுகளையும் கொடுத்தது

199ல் எக்காலத்திற்கும் சிறந்த நடிகை என அவளுக்கு ஹாலிவுட் பெருமை சேர்த்தது

ஆயிரம் நடிகைகள் வந்தாலும் அவளின் கண்களும், அந்த ஸ்டைலும் யாருக்கும் வராது

ஹாலிவுட்டில் புதிய நடை, உடை ,சிகை, பார்வை, சிரிப்பு, , பாவனை என புதிய பாணியினை ஏற்படுத்தியவள் அவள்

அவளை தொடர்ந்தே உலகில் அப்பாணி வந்தது, தமிழகத்தில் மிக தாமதமாக 1990க்கு பின்பே வந்தது

மர்லின் மன்றோ காற்றில் பறக்கும் தன் உடையினை பிடித்துகொண்டிருக்கும் காட்சி உலகின் மிக பிரசித்திபெற்ற படங்களில் ஒன்று

அதை நமது ஊர் ரம்பா அழகிய லைலா என ஆடுவதற்கு அவள் காலத்திற்கு பின் 40 வருடம் ஆகியிருந்தது

இன்று எல்லா நாட்டு நடிகைகளின் ஏதோ ஒரு சாயலில் மர்லின் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றாள் அவளுக்கு அழிவில்லை

அந்த கண்களை அதன் பின் சில்க் ஸ்மிதாவிடம் கண்டது உலகம்

மர்லினின் கண்கள் போலவே சில்க்ஸ்மிதாவின் கண்களும் கடும் ஈர்ப்பு கொண்டது, ஆனால் தமிழன் எல்லாவற்றையும் ஒரு மாதிரி பார்த்த் பழக்கபடவன் என்பதால் சில்கிற்கு ஐட்டம் நடிகை என்ற இமேஜே நிலைத்தது

இருவரின் வாழ்க்கையிலும் ஏகபட்ட ஒற்றுமைகள் உண்டு, இருவரின் வாழ்வும் குடும்ப வாழ்விற்காக ஏங்கி இளமையிலே செத்துவிட்டது வரை ஒற்றுமை ஏராளம்

தன் கண்களாலும் அழகாலும் உலகை கட்டிபொட்டு, 36 வயதிலே கணகளை மூடி அழியா தடம் விட்டு சென்ற மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அந்த கண்களை யாரால் மறக்க முடியும்??

உலகெல்லாம் அழகி என்றும், மயில் என்றும் பலரால் காம அடையாளமாக பார்க்கபட்ட அவள் அதிகம் பேசியதில்லை, சில நேரம் பேசினாள் அதிலும் வலியே அதிகம்

ஒருமுறை சொன்னாள்

“இன்று என்னை அழகி என கொண்டாடும் உலகம் என் சிறுவயதில் என்னை பாடாய் படுத்தியது , நான் சிறுமி என்பதையோ எனக்கும் மனம் உண்டு என்பதையோ அது உணரவே இல்லை

அதனால் சிறுபெண்களிடம் நீயும் அழகு என சொல்லி தன்னம்பிகையினை வளருங்கள், அவர்கள் உள்ளம் உடைய விடாதீர்கள்”

அவள் மனதில் இருந்த ஆயிரம் வலிகளில் இது ஒரு சிறிய பகுதி,

இன்னும் சொல்லாத பல வலிகளோடே வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றாள் அந்த துரதிருஷ்டசாலி