இன்று கவிஞர் வாலியின் நினைவுநாள்
வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர்
ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார்
திருவரங்கத்து இயல்பான அறிவு சுஜாதா போலவே இவருக்கும் அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள், ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம்
நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், அவர் வந்த காலம் போட்டிமிக்கது
உடுமலை நாராயணகவி, பெரும் கவிஞன் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் என பெரும் ஜாம்பவான்கள் இருந்தகாலத்தில் நுழையமுயன்றார்
அக்காலம் அவருக்கு கைகூடவில்லை, மெதுவாகத்தான் நுழைந்தார், 1958ல் அவர் நுழைந்திருந்தாலும் 1963ல்தான் அவருக்கான அடையாளம் கிடைத்தது, கற்பகம் படத்தில் அற்புதமாக எழுதியிருந்தார்
அதன் பின்னும் போராடினார், நிச்சயமாக வாலி அபார திறமைக்காரர், ஆனால் கண்ணதாசனில் செங்கோல் ஆட்சிமுன் அவரால் பெயரிட முடியவில்லை, கண்ணதாசனின் வீச்சு அப்படி இருந்தது
அவர் காலத்திலே ஓரமாக படகோட்டி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைபடுத்தியவர் வாலி, கண்ணதாசனோடு போட்டிபோட்டு வளர்வது சாதாரணம் அல்ல, வாலி அதனை செய்தார்
ஒரு கட்டத்தில் கண்ணதாசனுக்கு ஈடாக எழுதிவந்தார், எது வாலிபாடல் எது கண்ணதாசன் பாடல் என தெரியாத அளவிற்கு தமிழகம் திணறியது
அற்புதமான பாடல்களை கொடுத்த அவரை மறக்க முடியாது, கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களை எழுதினார், இனி எந்த கவிஞனும் தொடமுடியா உயரம் அது
கடவுள் முதல் கல்லறை வரை அத்தனையினையும் வித்தியாசமான அழகு தமிழில் மிக சுருக்கமாக எழுதியதுதான் அவரின் ஆற்றல்
கிட்டதட்ட 5 தலைமுறை நடிகர்களுக்கு எழுதினார் என்றால் எவ்வளவு நீண்ட ஓட்டம்? எம்ஜிஆர் காலம் முதல் சிவகார்த்திகேயன் காலம் வரை எழுதிகொண்டே இருப்பது என்பது எவ்வளவு பெரும் சாதனை?
கலைஞரை போன்ற நீண்டகால தமிழ் உலக சாதனையாளர் ஒருவர் உண்டென்றால் வாலியினை தவிர யாரையும் காட்டமுடியாது
கலைஞரின் ஆற்றல் எல்லா திசைகளிலும் பயணித்தது, அரசியலுக்கு சென்று பின் ராமசந்திரனால் பாதிக்கபட்டு அவரின் முழு ஆற்றலும் பயன்பட்டதாக சொல்லமுடியாது, கலைஞரிடம் நாம் கண்டது அவரின் ஆற்றலின் ஒரு பகுதி
மீதி எல்லாம் பலவகையான எதிர்ப்பிலே கழிந்தது
கண்ணதாசனுக்கு ஆயுளும் குறைவு, அவருக்கே உரித்தான குணங்களால் அவர் எழுதியதும் குறைவே, நா.முத்துகுமாருக்கும் அவருக்கும் தமிழ்திரையுலகில் ஒரே ராசி
பட்டுகோட்டைக்கு ஆயுள் இல்லை, மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் அவர்
தமிழுலகம் இரு ஜாம்பவான்களை ஆயுள் முழுக்க பயன்படுத்தியது என்றால் போராட்ட வாழ்வில் பெரியாரும், தமிழ்பாடல் உலகில் வாலியும்
அந்த இரு தாடிகளுமே தங்கள் முழு உழைப்பினையும் சமூகத்திற்கு கொடுக்கும் வாய்ப்பினை பெற்றவர்கள்
வாலிபற்றி பேசினால் பேசிகொண்டே இருக்கலாம், அப்படிபட்ட கவிஞர் அவர். அவர் எழுதிய 13 புத்தகங்களும் அப்படி மிக மிக ரசனையானவை
பாடல்களில் எத்தனை தலைமுறைக்கு எழுதினாலும் ஒரு தலைமுறைக்கு எழுதிய பாதிப்பு அடுத்த தலைமுறைக்கு வராது
எம்ஜிஆர் காலத்தில் கடலோரம் வாங்கிய காற்று என்றும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் என்றும், படகோட்டி படத்தில் தரைமேல் பிறக்க வைத்தான் என்றும் பாடிய வாலி பின்பு கடலுக்கு பிஷ் நெட்டு, காதலுக்கு இன்டர்நெட்டு எனவும் பாட தயங்கவில்லை
கண்ணதாசன் தன் காலத்தில் “பசுமை நிறைந்த நினைவுகளே” என கொடுத்தால் வாலியால் பிற்காலத்தில் முஸ்தபா முஸ்தபா கொடுக்க முடிந்தது.
எல்லா தலைமுறை ரசிபப்தை தானும் ரசித்தாலொழிய இவையெல்லாம் சாத்தியமில்லை, அதனால்தான் திருலோக சுந்தர் முதல் பாலசந்தர், ஷங்கர் வரை அவரால் ஒட்டமுடிந்தது
சமைஞ்சது எப்படி போன்ற பாடல்கள் சர்ச்சையாகும் பொழுது, மேடைகளி அருமையான கவிமழை பொழியும் நீங்கள் இப்படி எழுதலாமா என கேட்டபொழுது சொன்னார்
“அங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
சினிமாவில் எலும்புக்கு வாலாட்டும் நாய்”
இதனை விட சினிமா கவிஞனின் வாழ்க்கையினை சொல்லமுடியாது.
கண்ணதாசனும் வாலியும், வாலியும் கலைஞரும் பங்குபெற்ற மேடைகள் எல்லாம் தமிழின் பொற்காலங்கள்.
வாலி பெரும் காவியம், எழுதி முடிக்க முடியாத புகழ் அவருடையது
இப்பொழுது வரும் ஏக்கம் ஒன்றுதான்
கண்ணனை பற்றி கண்ணதாசனின் பாடல்கள் அற்புதம் என்றால் வாலியின் முகுந்தா முகுந்தா போன்ற பாடல்கள் அழியா வரம் பெற்றவை.
கண்ணனுக்கு பாரதிக்கு பின் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன், அதற்குபின் நிச்சயம் வாலி
இனியார் அந்த இடத்தை நிரப்புவார்களோ தெரியாது, கிருஷ்ணனே வழிகாட்டட்டும்
தன்னைபற்றி வாலிஎழுதவில்லை என்பார்கள், தசதவாரம் பாடலில் ஒருவரியில் மிக அழகாக சொல்வார், அதில் தன்னையும் சொல்வார்
“நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”
அதே தான், கவிஞர்களின் அவர் ராஜகவிஞன், ராஜராஜ கவிஞன், சந்தேகமே இல்லை
இன்று அவரின் நினைவுநாள்
குஷ்பூ பற்றி எத்தனையோ பாடல்களை எழுதினார், அவற்றில் எல்லாம் குஷ்பூவினை வாழ்த்தியிருந்தார்,
“ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே” எனும் வரிகள் குஷ்பூவிற்கானது,
இது போல ஏராளமான வரிகளை குஷ்பூவிற்கு கொடுத்திருந்தார், உச்சமாக அவர் திமுகவில் இணையும் பொழுது சொல்லியிருந்ததில்தான் வாலி விளையாடியிருந்தார்
“பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று
இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு
உதயசூரிய வெளிச்சம்
சோபிதம் தந்திருக்கிறது.
அப்பூ… எப்பூ..குஷ்பூ “
என சொன்னவரிகளுக்காக என்றுமே அவர் நம் சங்கத்தால் நன்றியோடு நினைவு கூறபடுவார், குஷ்பூ திமுகவிலிருந்து சென்றிருக்க கூடாது என்பது வருத்தமான விஷயம்
கலைஞரை நிரம்ப நேசித்தவர் வாலி, ஒரு இடத்தில் சொன்னார், கலைஞரின் 60ம் ஆண்டுவிழாவிற்கு , வைரவிழாவிற்கு அன்றே வாலி சொன்ன வரிகள் இவை
“முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை”
வாலியினை தவிர யார் இப்படி சொல்லமுடியும்?, இன்னும் சொன்னார்
“அய்யனே
நீ தமிழகத்தின் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு”
‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று”
இந்த வாலியின் வரிகளோடு இப்பொழுது ஓய்வில் இருக்கும் கலைஞரை நோக்கினால் அதே வாலியின் குரல்கள் மறுபடியும் இப்படியாய் நினைவுக்கு வருகின்றன,
“ஞான ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்”
இம்முறை கைதட்ட மனம் வரவில்லை, கண்ணீர்தான் வருகின்றது
வாலிக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.