அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05
பெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும்.
பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள்.
ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது.
ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே இல்லை.
ஆனால் அர்ஜெண்டினா மிக மிக தொலைவான நாடு, இவை ஏதும் சாத்தியமில்லை , விமான பயணமே சாத்தியம், ஆக குடியிரிமை சோதனையினை ஈச்மென் கடந்தாக வேண்டும்.
ஆனால் ஈச்மென் விடுவாரா? விமான நிலைய வாசலிலே என்னை கடத்துகின்றார்கள், நான் நாசி என சொல்லிவிடுவார். அதற்காக அவரை வாயினை பொத்தியும் கொண்டு செல்லமுடியாது, இமிகிரேஷனில் சிக்கல்.
சரக்குக்கு விமானத்தில் புகையிலை பெட்டி இடையே போட்டும் அனுப்பமுடியாது.
விஷயம் தெரிந்தால் எந்த நாட்டு எல்லையிலாவது சிக்கிவிடும் அபாயம் உண்டு, அப்படியே கப்பலில் தூக்கிபோட்டாலும் நெடுநாள் பயணம் சரிவராது.
இது மிக மிக அவசரமாக கொண்டுசெல்லபடவெண்டிய விஷயம்.
சனியனை உயிரோடு வேறுகொண்டு செல்லவேண்டும் என பென் குரியன் சொல்லிவிட்டார் அதுதான் மகா முக்கியம், இல்லையென்றால் இப்பொழுதே தீர்த்துவிட்டு செல்லலாம்.
ஆனால் இவன் எல்லா யூதரும் பார்க்க பார்க்கத்தான் சாகவேண்டும்.
ஆக இவர் குடியுரிமை சோதனையினை கடந்து ஆகவேண்டும் ஆனால் பேசகூடாது, இதுதான் பிரச்சினை.
சரி ஒரு மனிதன் சுயநினைவில் இருந்தால்தானே பேசுவான், சுயநினைவு அற்ற நிலை என்றால் எப்படி பேசுவான், சரி பேசாதவனாக்கி விடலாம்.
வசூல்ராஜா படத்தில் வரும் சப்ஜெக்ட் ஆக்கிவிட்டால் சிக்கலே இல்லை. ஆக்கிவிடலாம்.
நாடு இப்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கின்றது, விமான நிலையம் மூல்ம் செல்லலாம், ஈச்மெனுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும், அர்ஜெண்டினா பாஸ்போர்ட்டா?
இல்லை இஸ்ரேலிய பாஸ்போர்ட் அப்பொழுதுதான் அதிக சோதனை இருக்காது, ஓடுங்கள் யூதர்களே என விரட்டுவார்கள்.
எப்படி இஸ்ரேலிய பாஸ்போர்ட் பெறுவது?
அர்ஜெண்டினா சுதந்திர தின கொண்டாடத்திற்கு ஒரு இஸ்ரேல் குழு அவர்கள் விமானத்தில் வந்திருந்தது.
அவர்களில் ஒரு விமான சிப்பந்தியின் பாஸ்போர்ட் ஈச்மெனுக்காக மாற்றபட்டது, அந்த ஒரிஜினல் நபர் வேறு பாஸ்போர்ட்டில் பறந்துவிட்டார்.
எல்லா நாட்டு பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதில் அவர்கள் பாணியே வேறு
இன்றும் பாருங்கள், மொசாத் நடத்தும் ஆப்பரஷேன்களில் ஐரோப்பிய நாடு, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து என பலநாட்டு பாஸ்போர்ட்டுகள் கைபற்றபடும்.
ஆனால் பாஸ்போர்ட் சம்பந்தபட்ட நபர் அந்நாட்டில் வான்கோழி சாப்பிட்டுகொண்டிருப்பார், அவரின் பெயர் பாஸ்போட்டில் மொசாத் விளையாடிருக்கும்.
எல்லா நாட்டு பாஸ்போர்ட்டையும் அச்சு பிசகாமல் தயாரிப்பதில் மொசாத் பிஎச்டி முடித்திருந்தது.
கூடுதல் வசதியாக புண்ணிய பூமி ஜெருசலேமிற்கு செல்லும் நபர்கள் மிக அதிகம்.
‘உங்கள் மேல் சந்தேகமாக இருக்கின்றது, இது வேறு ரத்த பூமி கொஞ்சம் ஒத்துழையுங்கள்” என பாஸ்போர்ட்டை கொண்டு சென்று 10 நிமிடத்தில் போலி தயாரித்து விடுவார்கள்.
பின்னர் “நீங்கள் ரொம்ப தூய்மையானவர்” என சொல்லி புன்னகையுடன் கொடுத்துவிடுவார்கள் தேவை படும்பொழுது எடுத்து களமிறங்குவார்கள்.
அப்படி ஈச்மெனுக்கும் பாஸ்போர்ட் தயார் செய்யபட்டு விட்டது, இனி அவர் இஸ்ரேலியர் சிக்கல் இல்லை.
ஆனால் அவர் விமான நிலையத்தில் வாய் பேசகூடாது தன்னை மறந்த நிலையில் இருக்கவேண்டும் அல்லவா?
அடுத்த கட்டமாக ஈச்மென் முன்னால் ஒரு விஸ்கி பாட்டில் வைக்கபட்டது.
தன் முன்னால் இருந்த விஸ்கி பாட்டிலை பார்த்தபடி இருந்தார் ஈச்மென், முழுவதையும் குடிக்குமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டார்.
விட்டுத்தான் விஸ்கி கொடுக்கபட்டது, அவர் மல்லாக்கவிழுந்ததும் ஒரு ஊசி போடபட்டது, அது ஒரு வகையான நினைவு மயக்கும் மருந்து.
ஒரு காலத்தில் ஹிட்லர் பல வகையான மருந்துகளை தயாரித்து யூதர்மேல் ஊசிகுத்தி பரிசோதித்தார்.
அப்பொழுது உதித்த மருந்தில் ஒரு வகை அது, பரிதாபம் அல்லது பழிவாங்கல் என்னவென்றால் அன்று அந்த கொடுமையை யூதர்மேல் நிகழ்த்திய மேற்பார்வையாளர் சாட்சாத் ஈச்மென், இன்று அவருக்கே குத்தியாகிவிட்டது.
பின்னர் விமான சிப்பந்தி உடை ஈச்மெனுக்கு மாட்டபட்டது.
அவர் இஸ்ரேலிய விமான சிப்பந்தி என்பதுபோல் எல்லாம் தயார் செய்தார்கள், ஒரு காலத்தில் ஹிடலரின் நாசி தொப்பி அணிந்த கம்பீர ஈச்மெனுக்கு.
இஸ்ரேலிய சின்னத்துடன் தொப்பி அண்விக்கபட்டது, சுயநினைவு இல்லையென்றால் ஈச்மென் தற்கொலை செய்திருப்பார், எப்படிபட்ட அவமானம்?
ஈச்மெனின் சட்டை மேலும் விஸ்கி தெளிக்கபட்டது.அப்படியே மயக்கநிலையில் சக்கர நாற்காலிக்கு மாற்றபட்டு, விமான நிலையம் கொண்டு சென்றார்கள்.
மொத்தமாக சென்றால் சிக்கல் வந்துவிடாதா? அதனால் மூவர் மட்டும் சென்றனர், மற்ற 9 பேரும் வேறு வேறு நாடுகளுக்கு செல்லும் கவுண்டர்களில் தனி தனியாக நின்று கண்காணித்தனர்.
அர்ஜெண்டினா குடியுரிமை அதிகாரி முன் சொன்னார்கள் , “இவர் எங்கள் நாட்டுக்காரர் ஆனால் பெரும் குடிகாரர்தான். ஆனால் உங்கள் நாட்டு சரக்கு ம்ம் சும்மா சொல்லகூடாது.
எத்தனையோ நாட்டு சரக்குகளை 10 பாட்டில் குடித்துவிட்டு அசால்டாக நின்றவர் உங்கள்நாட்டு சரக்கில் கால் பாட்டிலிலே சரிந்துவிட்டார், இங்கேயே விட்டு செல்ல முடியுமா?
அங்கே கொண்டு குடும்பத்தாரிடம் போடும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது, இந்த எருமையினை கொண்டு மதுஅடிமைகள் மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்க போகின்றோம்” என்றனர்.
அர்ஜெண்டினா இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை பரிதாபமாக பார்த்தனர், அவர்தான் வசூல்ராஜா ஆனநத்சார் நிலைக்கு சென்றுவிட்டாரே? எங்கு கத்துவது, மொசாத் உறுப்பினர்கள் வேறு அவரை திட்டி முணுமுணுத்தனர்
தங்கள் நாட்டு டாஸ்மாக் சரக்கினை மனதிற்குள் பெருமையாக நினைத்துகொண்டே அவரை பரிதாபமாய் பார்த்தபடி கிளியரன்ஸ் செய்து உள்ளே அனுப்பினார்கள்.
இன்னொன்று அர்ஜெண்டினா விமான நிலையம் மிக மிக பரபரப்பாய் இருந்ததும் ஒரு காரணம். அவரை இஸ்ரேலி விமானத்தில் ஏற்றினார்கள் மொசாத் குழுவினர்.
விமானம் பறந்தது, ஜெருசலேம் பாராளுமன்றத்தில் ஈச்மெனை தாங்கள் கைது செய்திருப்பதாக பிரதமர் பென் குரியன் அறிவித்தார்.
ஈச்மெனுக்கு மறுபடியும் ஒரு ஊசி, “இவ்வளவு நேரம் நான் எங்கிருந்தேன், இது எந்த இடம்” என கேட்டார். இது இஸ்ரேல் என அறிவிக்கபட்டது.
அப்பொழுதுதான் தான் யூதர்களால் கடத்தபட்ட விஷயமே அவருக்கு புரிந்தது.
இஸ்ரேல் எதிர்பார்த்தபடியே அர்ஜெண்டினா பயங்கர ரியாக்ஷன் காட்டியது, சர்வதேச மன்றத்தில் முறையிட்டு அலறியது, அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் விசாரணை செய்வோம் எனவும் அடம்பிடித்து பார்த்தது.
ஆனால் கடும் பாதுகாப்பில் குண்டு துளைக்காத கூண்டில் வைத்து ஈச்மெனிடம் விசாரணை நடந்தது. எமபாதக ஈச்மென் எல்லாம் அரசு உத்தரவு நான் பணியாளன் என சாதித்தார்.
ஆனால் அவர் செய்த அநியாயங்களையும் கொலைகளையும் அதன் கொடூர முறையினையும் அவர் சொல்ல சொல்ல உலகம் கண்ணீர் விட்டது.
எப்படி எல்லாம் யூதர்களை கொன்றோம் என அவர் சொல்ல, சொல்ல இஸ்ரேல் அழுதது, அதனை உலகிற்கெல்லாம் சொல்லி யூதரும் அழுதார்கள்
பின்னர் அவரை தூக்கிலேற்றி, எரித்து சாம்பலை கடலில் வீசினார்கள், எவ்வளவு காலம் ஆனாலும் தங்கள் மேல் கைவைத்த யாரும் தப்பமாட்ட்டார்கள் என உலகிற்கு காட்டியது இஸ்ரேல்.
அசந்து நின்றது உலகம், சில நாடுகள் மூச்சுவிட கூட மறந்தன, எப்படிபட்ட வன்மம் இஸ்ரேலின் மனதில் இருக்கின்றது என்பதை உலகம் உணர்ந்தது.
மொசாத் உலகினை அசரவைத்த சம்பங்களில் இதுதான் முதன்மையானது, அந்த குழுவின் தலைவர் ரபி எய்டனிடம் வெற்றிக்கு வாழ்த்து சொன்னார்கள்.
எய்டன் சொன்னார் இது பெரும் தோல்வி, ஈச்மென்னுடன் இன்னும் இருவரை கண்டுபிடித்து கடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்றார்.
அந்த இருவர் யாரென்றால் ஹிட்லரும் அவரின் இன்னொரு கூட்டாளியும்.
ஆம் ஹிட்லர் சாவதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை, சோவியத் படைகள் ஹிட்லர் மாளிகையினுள் நுழையும் பொழுது இரு சடலம் எரிந்துகொண்டிருந்தது. ஒன்று ஈவாபிரவுண் இன்னொன்று ஹிட்லர் என சொல்லி எலும்பு மண்டையோட்டை எடுத்து சென்றார்கள் ரஷ்யர்கள்
ஆக ஹிட்லரை அடையாளம் கண்டு கொன்றவர் யாருமில்லை அதனால் ஹிட்லர் தப்பினான், அவன் அர்ஜெண்டினாவில் இருந்தான் என மனமார நம்பியது இஸ்ரேல்
அதற்காக சிக்கிய ஈச்மெனை விட்டுவிடவும் மனமில்லை, தூக்கிவிட்டார்கள். ஈச்மென்னை பிடித்தபின் ஹிட்லர் எவ்வளவு உஷார் ஆகியிருப்பான் என உணர்ந்தது மொசாத்
அதனைத்தான் பெரும் தோல்வி என சொன்னார் ரபி எய்டன்
ஹிட்லரும் மொசாத்தும் சளைத்தவர்கள் அல்ல, ஆனாலும் இறுதிவரை ஹிட்லரை நெருங்கவே முடியவில்லை மர்மாகவே முடிந்தான் ஹிட்லர், இது அவனின் வெற்றி
ஆனால் தன்னால் ஓட ஓட அடிபட்ட இனம் தனிநாடு அடைந்து பெரும் சாகசங்களை படைத்து கொண்டிருப்பதை பார்த்துகொண்டே, தன்னால் உருவாக்கபட்ட ஜெர்மனி கிழக்கு மேற்கு என பிரிக்கபட்டும்.
தன் ராக்கெட் விஞ்ஞானிகளின் உழைப்பால் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொடுவதை எங்கிருந்தோ பார்த்துகொண்டேதான் செத்தான் ஹிட்லர் என்பது இன்றும் இஸ்ரேலியர் நம்பிக்கை.
அதாவது அவன் பூண்டோடு அழிக்க நினைத்த எம் இனம், அவன் மிக வெறுத்து ரசித்து சித்திரவதை செய்து கொன்ற எம் இனம்.
உலகில் அவன் கண்முன்னாலே வாழ்வாங்கு வாழ்கின்றது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
இதனை பார்த்துகொண்டே அவன் அனுதினமும் சாகட்டும், அதனை விட என்ன பெரும் தண்டனை அவனுக்கு கொடுக்க முடியும்? என சாந்தியடைந்தது இஸ்ரேல்.
இப்படி விமான பயணிகளை கடத்தியது அல்லது மனிதனை கடத்தியது. இது போக ஒரு விமானத்தையே மொசாத் அட்டகாசமாக கடத்திய கதை உண்டு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கலாம்.
சிலர் அந்த மியூனிச் சம்பவத்தில் இஸ்ரேல் எப்படி பழிவாங்கிற்று என அறிய ஆவல் என்றார்கள், எழுதலாம்
ஆனால் அதற்கு முன் குஷ்பூ தொடருக்கு நீங்கள் ஆதரவளித்தே தீரவேண்டும்.