பெரும்போரின் களப்பலி : 03
ஹிரோஷிமா பெரும் போர்

கூடங்குளம் அணுவுலையின் கழிவினை எங்கு பாதுகாப்பீர்கள் என திரு.உதயகுமார் கேட்ட கேள்விகளுக்கு குழப்பமான பதிலை சொல்லிவந்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் சொல்லியது,முதலில் அணுகழிவினை எடுத்துசெல்ல முடிவு செய்த ரஷ்யா,இப்பொழுது மறுக்கின்றது.
காரணம் இதுதான், கார்ப்பசேவின் கசப்பு மருந்து ஓவர்டோசாக வேலை செய்து, சோவியத் யூனியனை பக்கவாதத்தில் தள்ள, கருணை கொலையாக சோவியத்தை கலைத்தார். கோர்ப்பசேவ். 17 துண்டாக ரஷ்யா சிதற அவர்களின் அணு ஆயுத மையங்களும் சிதறின, யாருக்கு எதன் மீது அதிகாரம் என்பதே தெரியாத குழப்பான நிலை.
இந்த சிக்கலில் சிக்கிய ரஷ்யா, பின்னர் அமெரிக்கவுடன் அணுஆயுத குறைப்பு ஒப்பந்தமும் செயதது, இன்று இரு நாடுகளும் அணுஆயுதம் புதிதாக சோதிக்க மாட்டோம் என கையெழுத்திட்டன, காரணம் இரு நாடுகளும் கிட்டதட்ட 3000 மேற்பட்ட வெடிப்புகளை நடத்தியாயிற்று, இதற்குமேல் சோதிக்க ஒன்றுமில்லை.
ஆனால் உதயகுமார் அவர்களின் அந்த முக்கியமான கேள்விக்கு சொன்ன பதில் கழிவுகள் கூடன்குள வளாகத்திலே புதைக்கபடும் என்றார்கள். யாரேனும் கசாப்பிற்கு பெரியப்பா மகனோ அல்லது யகூப் மேமனுக்கு சித்தப்பா உறவோ அவ்வளவு ஏன் ஈழம் அமைந்துவிட்டால் சிங்களர்களில் ஒருவனோ வந்து அந்த கழிவினை தோண்டி எடுத்து பெட்டியை திறந்தால்?
அதாவது ஈழம் இன்னும் 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் கழித்து அமைந்தாலும் அணுகழிவு 200000 ஆண்டு வரை வீரியமாக இருக்கும் என்பதுதான் ஆபத்து.
இதை சொன்ன உதயகுமார் தேர்தலில் தோற்றதும், காவிகொடி பிடித்தவர் பார்லிமெண்டில் தூங்குவதும், ஆப்ரிக்க நாடுகளை தவிர தமிழகத்தில்தான் சாத்தியம். ஒரு ஆராய்ச்சியாளன் சொன்னான் சோமாலியா பழக்கவழக்கங்களுக்கும் தமிழருகும் நிறைய ஒற்றுமை உண்டென்று, இருந்தாலும் இருக்கலாம்.
அணுகுண்டு கலையில் கரை கண்டு ஒய்வெடுத்தவர்கள் மேற்கத்தியர். இக்காலம் வரை கூட பிரச்சினை இல்லை, இரு வல்லரசுகளும் உலகை ஆட்டிய நிலைமாறி, உலகின் சமநிலை குறைந்து ஒற்றை வல்லரசாக அமெரிக்கா ஆளும்பொழுது, ஏராளமான தீவிரவாத குழுக்கள் அட்டகாசம் செய்யும் காலமிது.
ஒரு கட்டத்தில் மெகா தீவிரவாத அமைப்புக்கள் எல்லாம் அணுகுண்டை தேடின, இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றன, அவர்களில் முதன் முதலாக தேடியவர் பின்லேடன்.
கையில்துப்பாக்கி, முகமூடி கொண்ட 10 பேர் என்றுதான் தீவிரவாதிகளை தெரியும், பெரும் அரசாங்கங்களே அணுஆயுதம் செய்ய தலைகீழாக நின்றாலும் முடியாத பட்சத்தில் ஒதுங்க ஒரடி நிலம் கூட கிடைக்காத தீவிரவாதிகளுக்கு எப்படி சாத்தியமாகும்?
சாத்தியம் இருந்தது, சோவியத் யூனியனின் அணுவுலைகள்,ஆயுத கிடங்குகள் அது சிதறும்பொழுது பல நாடுகளுக்கும் சிதறியது. இன்றும் தீவிரவாதிகளுக்கு கறுப்பு சந்தை ஆயுதங்களுக்கு அந்நாடுகளே சொர்க்கபுரி, உலகின் பணம் கொழிக்கும் இரண்ட்டாம் தொழிலில் ஆயுத தரகு.
பின்லேடன் போன்ற கோடீஸ்வர தீவிரவாதிக்கு அந்த ஆசை வந்தது தவறில்லை, ஆனால் வைத்து சோதிக்க ஒரு நாடு அல்லது ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா
அவர் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது கிட்டதட்ட சூடானை ஆண்டுகொண்டிருந்தார், நேரடியாக அல்ல விக்ரம் படத்தில் அம்ஜத்கானின் நாட்டினை சத்தியராஜ் ஆண்டுகொண்டிருப்பார் அல்லவா அப்படி.
எப்படியோ ஒரு புரோக்கரை பிடித்து பின்லேடனுக்கு அறிமுகபடுத்தினார்கள், அவரும் மயில்சாமி போலவே, “ஒன்றும் பிரச்சினை இல்லை, உங்களுக்காக செய்கிறேன், இல்லை என்றால் கூட கொஞ்சம் பணமிருந்தால் முடித்துவிடலாம்” என்றார், கடும் பாதுகாப்பிடையே ஒரு பெரிய பெட்டியை கொடுத்துவிட்டு முகவரியை மாற்றிவிட்டு பட்சி பறந்தது.
பெட்டியில் இருந்தது ஈயமும்,இன்னும் சில கன உலோகங்களும், அவற்றை வைத்து தீபாவளி அணுகுண்டு கூட செய்ய முடியாது, இது பின்லேடனின் இரண்டாம் அனுபவம், முதலனுபபம் ஒரு நைஜீரிய முன்னாள் ராணுவ அதிகாரி, நைஜீரியர்கள் பராக்கிரமம் பற்றி இணையம் பயன்படுத்தும் எல்லோரும் அறிந்திருக்கலாம்.
ஒருவேளை பின்லேடன் தனது முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால், அமெரிககா அல்லது ஐரோப்பாவின் நிலை “வரம் கொடுத்த சிவன் நிலைதான்”,
நல்லவேளையாக இன்னும் எந்த தீவிரவாதிகள் கையிலும் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு அணுஆயுத நாட்டினை தீவிரவாதிகள் கைப்பற்றினால் என்ன ஆகும்?
குரங்கின் கையில் ஏ.கே 56 கிடைத்தால்,அல்லது ஒரு ஏவுகனையின் ரிமோட் கிடைத்தால் என்ன ஆகுமோ அதுவே தான்.
அவ்வாறு நடக்க வாய்புள்ள நாடாக பாகிஸ்தான் அடையாளம் காணப்பட்டு, எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையுள்ள நாட்டின் அணுகுண்டுகள் வேறுபகுதிக்கு மாற்றபட்டதாக அதிகாரமற்ற தகவலுண்டு.
(இடையில் புலிகள் அணுகுண்டு வாங்க முற்படுகின்றார்கள் என இலங்கை கூட சீரியசாக காமெடி செய்தது,
அணுகுண்டு ஏன்? புலிகளிடம் விமான எதிர்ப்பு நுட்பமும், வசதியும் இருந்திருந்தால் புலிகளின் கால் நகத்தை கூட நெருங்கியிருக்க முடியாது என்பது வேறுவிஷயம்)
அணுகுண்டாவது பிரம்மாஸ்திரம், சில டிரிக்கர்களை கடைசி கட்டத்தில் சொருகி வீசினால்தான் வெடிக்கும், ஆனால் அணுவுலைகள் கிட்டதட்ட உறங்கும் எரிமலை போன்றவைதான், தீவிரவாதி புகுந்தாலோ அல்லது தொழில்நுட்பம் தோற்றாலோ தீர்ந்தது மனுக்குலம்.
கடந்த 65 ஆண்டுகளாகத்தான் அணுநுட்பத்தினை மனித குலம் பயன்படுத்துகிறது, ஹிரோசிமா, நாகசாகி எனும் இடங்களில் நேரடியாகவும், ஆர்டிக், அண்டார்டிக் பகுதியயில் ரஷ்யா அமெரிக்கா நடத்திய அணுசோதனைகளில் மறைமுகமாகவும் ஏராள அழிவுகள் உண்டு.
அணுவுலை வெடித்தால் என்ன நடக்கும் என்பதற்கு செர்னோபில்லும், அமெரிக்க 3 மைல் தீவும் பெரிய அழிவு அடையாளங்கள், அதுவும் செர்னோபில்லில் 40 அடி தடிமன் கொண்ட, (கவனியுங்கள் தடிமன்) கொண்ட காங்ரீட் போட்டு அணுவுலையினை மூடிவைத்திருக்கின்றார்கள்.
2011ல் புக்குஷிமாவில் நடந்த விபத்து எல்லோரும் அறிந்தது, ஜப்பானியர் இன்னும் ரோபாட்கள் உதவியோடு போராடி கொண்டுதான் இருக்கின்றார்கள், சமீப்த்தில் கூட ஜப்பானிய மக்களை அப்பகுதியை காலிசெய்ய சொல்லி சர்ச்சையில் சிக்கியது ஜப்பான்.
மிக சிறிய உலை வெடித்த செர்னோபில்லில் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கபட்டுள்ள பகுதி கிட்டதட்ட 100 சதுரமைல், அதாவது தென் தமிழ்நாடு மற்றும் தென்கேரளா பரப்பளவு கொண்டது. இந்த உண்மையை உரக்க சொன்ன உதயகுமார் பெற்ற வாக்குகள் 15,000 மட்டும்,
அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசினாலும் அவர் சொன்னது நிதர்சனமான உண்மை,அணுஅழிவுக்கு புல்லும்,மண்ணும் கூட தப்ப இயலாது, அந்த அழிக்கும் சக்திக்கு மதம்,இனம்,மொழி ஏதும் வேறுபாடு தெரியாத அகால நெருப்பு அது.
உலகத்தினை உற்று கவனியுங்கள், ஆகஸ்ட் 6ம் தேதியும் இன்னும் ஆகஸ்ட் 9ம தேதியும் அணுகுண்டை நினைவுபடுத்துவார்கள், ஜப்பானியர்கள் பாதிக்கபட்டார்கள் என கண்ணீர் விடுவார்கள்,ஊர்வலம் எல்லாம் போவார்கள்.
இனி உலகில் அணுகுண்டே வேண்டாம் என்று அணுகுண்டு வைத்திருக்கும் நாட்டு தலைவர்களே போதிப்பார்கள், போதிக்கட்டும். அரசியல் அப்படித்தான்
ஆனால் செர்னோபில் அணுவுலை விபத்தினை நினைவுபடுத்தும் ஏப்ரல் 26ம் தேதியன்று, எந்த நாட்டு தலைவரோ அல்லது அரசியல் தலைவரோ அஞ்சலி செலுத்தினார் என நாம் கேட்டதுண்டா?, கேட்கபோவதும் இல்லை. ஒரு அஞ்சலி ஊர்வலமாவது செர்னோபில்லுக்கு ஆதரவாக நடந்திருக்குமா?
நடந்திருந்தால் டிராம்பே, கல்பாக்கம்,கூடங்குளம் இங்கெல்லாம் அணுவுலை அமைந்திருக்குமா?
காரணம் அதையே நினைவுபடுத்தினால் அணுவுலையை எதிர்ப்பார்கள், பணம் கொழிக்கும் வியாபாரம் படுக்கும், புது குண்டுகள் செய்யமுடியாது, பக்கத்து நாட்டை அச்சுறுத்த முடியாது. நிச்சயமாக செர்னோபில்லில் இறந்த மக்களை யாரும் கண்டுகொள்வதில்லை.
இன்றுள்ள சூழ்நிலையில் எந்த நாடும் இன்னொரு நாட்டின் மீது அணுகுண்டினை வீசிவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது, உலகபோருக்கு பின் பலபோர்களை நடத்திய அமெரிக்கா இன்றுவரை அணுஆயுதத்தை தொடவில்லை, அணுஆயுத நாட்டோடு சண்டையிடவுமில்லை, இனியும் செய்யாது,
மிஞ்சி போனால் இருக்கிறது “பொருளாதார தடை” எல்லா நாடுகளும் எதிரிகளை பயமுறுத்தவே அணுகுண்டுகளை வைத்துள்ளன, எல்லா நாடுகளுக்கும் பொறுப்புண்டு.
ஆனால் உலகில் பாதுகாப்பான அணுவுலை என எதையும் நீங்கள் காட்டமுடியாது, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணிக்கலாம் அவ்வளவுதான், மீறி வெடித்தாலோ அல்லது ஒரு குரங்கு உட்புகுந்து வால்வை திருகினாலோ முடிந்தது விஷயம்,
அணுவுலையும் எமனின் அரண்மனைதான், எப்போது வெளிவருவார், பாசகயிறு அல்ல பாசவலைவீசி அள்ளுவார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் எருமையில் வரமாட்டார், ஓளியின் வேகத்தில்தான் வருவார்.
அணுகுண்டும் அணு உலையும் ஒரே அழிவைத்தான் கொடுக்கும்.
பழகிய விஷயத்தினை எளிதில் விடமாட்டான் மனிதன், டாஸ்மாக் வாசலே உதாரணம். எதிரியை நிரந்தரமாக மிரட்ட அல்லது அழிக்க ஒரு ஆயுதம் கிடைத்தால் எக்காலமும் விடமாட்டான்.
இரண்டாம் உலகபோராவது அணுகுண்டோடு முடிந்தது, மூன்றாம் உலகப்போர் நிச்சயம் அணுகுண்டோடுதான் தொடங்கும், முடிப்பதற்கு வேறு எந்த ஆயுதமும் வேண்டாம், எல்லாம் பஸ்பம்.
இந்நொடி வரை உலகில் 25க்கு மேற்பட்ட நாடுகளிடம் அணுகுண்டு இருக்கின்றது, இன்னும் அவ்வாயுதத்தினை பெற சில அரசுகளும், கூடவே சில தீவிரவாத இயக்கமும் படுபகீர்த்னம் செய்கின்றன.
அக்காலத்தில் பெரும் போருக்கு முன் ஒரு பலியினை செலுத்துவார்கள், அப்படித்தான் பெரும் அழிவுக்கு களப்பலிதான் நகசாகி. அது முடிவாக மட்டும் இருக்கவில்லை, ஆகஸ்ட் 9 முடிவாக இருக்கவில்லை
இன்று அணுகுண்டினை கட்டுபடுத்த பதில் ஆயுதம் இல்லை, உடனடி அழிவினை விட்டாலும், கதிர்வீச்சின் ஆபத்து பல ஆண்டுகளுக்கு வரும். இதை தடுக்கும் நுட்பம் இன்றைய தேதிவரை இல்லை. என்னதான் முடிவு???
கட்டுபடுத்தமுடியாத அந்த அரக்கனை ஒழிக்கும் வழியை கண்டுபிடித்தபின், அல்லது அவனை கட்டும் மந்திரத்தை கற்றபின் அவனை எழுப்பலாம், அது வரை அவன் தூங்கட்டும்.
அப்படி அல்லாமல் மனிதன் தன் பலத்தை காட்ட நினைத்தால், இந்த உலகை நிச்சயம் இறைவன் ஒருவனாலே தான் காக்க முடியும்.
உலகை படைத்த இறைவனே அதனை காக்கவும் பொறுப்புள்ளவன்.