தமிழக கல்வி முறை : 2

நான் தேடிய என் ஆசிரியர்

அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம்.

முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து.

பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் முதலில் வெளியே விழுவான், பின்னர் நோட்டு, கடைசியாக பாடபுத்தக பை.

அடிவாங்குபவனை மற்ற மாணவர்கள் கவனமாக குறித்துகொண்டார்கள், ஓ முதுகில் 2 குத்து, காலில் மிதி,நோட்டால் மண்டையில் 2 அடி அவ்வளவுதான், முகத்தை மட்டும் காட்ட கூடாது,

ஒகே.சார் நான் ரெடி மனதிற்குள் சொல்லிகொண்டார்கள்.

வெளியே செல்லும் மாணவன் முணுமுணுத்தால் இன்னொரு பொருள் பறந்து வந்து தலையில் விழும், ஒரு குரலும் அசிரீரியாய் ஒலிக்கும் “மார்க்க கேளு 10ம்கிளாஸ்ல 100, ஒரு சாதாரண சுருக்கல் தெரில, குற்றாலத்தில இருக்கவேண்டியதெல்லம் இங்க..ஹெட்மாஸ்டர் வேற அவனுக எல்லாம் அறிவாளி சார் கவனிசுக்கோங்கணு சொல்றார்..கவனிக்கேம்ல உங்கள நல்லா கவனிக்கேன்”

ஒரு வழியாக மாணவர் நொறுக்கல் முடிந்து மாணவியர் வரிசை, பெண்கள் விவரமானவர்கள், அடிக்கும் முன்னமே அழுது ஓடி வந்தார்கள், அவரா விடுவார்? கூப்பிட்டு தலையில் கொட்டி,நோட்டுகளை கிழித்து வீசி தலையை பிடித்து தள்ளுவார், அவர்களும் கொடையில் ஆடும் பெண்களை போல குலவையிட்டபடியே வந்து விழுவர்.

ஒரு வழியாக எல்லோரும் தட்டு தடுமாறி எழுந்தனர், சிலர் அன்றே தீவிரவாதியாகும் முடிவு, சிலருக்கோ தற்கொலை போராளி ஆகும் அளவு கண்களில் வெறி,சிலரோ சந்திரமுகி வடிவேலு போல சிலையாக நின்றனர். நல்லவேளையாக மணி ஒலித்தது, அவர் உடனே சென்றுவிட்டார்,

ஆனால் குறைந்தது 2 வருடத்திற்காவது அவருக்கு கொலஸ்ட்ரால்,சுகர் பிரச்சினை வராது, அவ்வளவு உடல்பயிற்சி அல்லது உழைப்பு அன்று அப்படி.
வகுப்பு கலவரம் நடந்த தெருபோல சிதறிகிடந்தது, பென்ஞ், டெஸ்க்,பென்சில்பாக்ஸ் செருப்பு, தலையில் இருந்த மல்லிகை என சகலமும் சிதறிகிடந்தது, சிலர் முகமும் வீங்கி கிடந்தது.

அங்கு என்ன கைரேகை நிபுணரா வருவார் அப்படியே வைக்க?, அடுத்த இயற்பியல் வகுப்பிற்காய் ஆசிரியர்தான் வருவார், அழுதழுது ஒழுங்கு செய்தார்கள்.

மறுநாள் கணிதவகுப்பிற்கு வந்தார், ஒன்றுமே நடக்காதவர் போல பாடம் நடத்தினார், மாணவ சமூகம் மனதிற்குள் பொங்கியது, அவர் அலட்டிக்காமல் சொன்னார், “நேற்று நடந்தது சும்மா டிரைலர், மெயின் பிக்சர் ரிவிசன்ல தொடங்கும், அது டிசம்பரில், அன்று நேற்றுமாதிரி அமைதியான ஆசிரியராக என்னை பார்க்கமுடியாது”

அது அமைதியா? ஆளாளுக்கு அலற தொடங்கினார்கள், சமய வேறுபாடில்லாமல் எல்லா ஆலயத்திலும் வணங்கி முறையிட தொடங்கினார்கள், இந்து மாணவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கடாவும் , கிறிஸ்தவ மாணவர்கள் இந்து ஆலயங்களுக்கு பொங்கலும் நேர்ந்துகொண்டனர், இஸ்லாமிய மாணவர்கள் இடைவிடாமல் பிரார்த்தினர், இன்னும் என்னவெல்லாமோ நடந்தது.

அவரோ அப்பொழுதெல்லாம் அடிக்கவுமில்லை,மிரட்டவுமில்லை, ஆனால் செமினார் நடத்த சொல்ல‌ ஆரம்பித்தார், (பின்னாளி கல்லூரியில் எடுத்த செமினாருக்கு எல்லாம் அதுதான் தொடக்கபுள்ளி) தவறு செய்தால் சொல்லுவார், எல்லாம் டிசம்பரில் தெரியும் அதுவரை சிரித்துகொள் என சொல்லிவிட்டு செல்வார், ஒவ்வொரு நாளும் தேதி கிழிக்கும் பொழுது மனம் சொல்லும் பாவி டிசம்பர் ஒரு 10 வருஷம் கழிச்சி வரக்கூடாதா?

டிசம்பரும் வந்தது, கூட்டுபிரார்த்தனைக்கு எவ்வளவு வலிமை என அன்றுதான் உணர்ந்த நாள், நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவருக்கு மிக சரியாக ரிவிசன் தொடங்கும் நாளைக்கு முன்னால் மஞ்சள்காமலை கண்டு பாதிக்கபட்டார், மாணவர்களுக்கு +2 தேர்வு முடிந்தது போல மகிழ்ச்சி, கோஷங்கள் மட்டும் போடவில்லை

தற்காலிகமாக ஒரு ஆசிரியையை நியமித்தார்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னால் அன்னா ஹாசரே போல செய்வதறியாது புதியவர் திகைத்தார், எப்படியோ சமாளித்தார், பொதுதேர்வுக்கு 1 வாரத்திற்கு முன்புதான் திரு.செல்வன் மறுபடி வந்தார். மெலிந்திருந்தார், கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது, தனது கடமை செய்யமுடியாமல் போன ஒரு வருத்தம் முகத்தில் தெரிந்தது, தப்பித்த பெருமை மாணவர்களிடம் தெரிந்தது.

அதன் பின் அவரை பார்க்கமுடியவில்லை, படித்துமுடித்து ஒரு கல்லூரியில் கல்லீரல் கரைய பாடம் நடத்தும்பொழுதுதான் அவரின் மனநிலை முழுதுமாக தெரிந்தது, இவர்கள் கணிப்பொறி மாணவர்கள், தானாக முயற்சி செய்தால் நிச்சயமாக அவர்களால் நன்கு படிக்க முடியும், ஆனால் பிராக்டிக்கல் மார்க் அல்லது வேறு மிரட்டல்கள் காட்டித்தான் படிக்க வைக்க முடிகிறது,

ஒரு மிரட்டலுக்கும் வழி இல்லாத திரு.செல்வன் அவர்கள் எப்படித்தான் கணிதத்தினை பயிற்றுவிக்கமுடியும்? அதுவும் +2 பொதுதேர்வு, நிறைய பெயில் என‌ நேர்ந்தால் மேலிடத்திடம் அவர் என்னதான் சொல்லமுடியும், அவர் அன்று மனதில் மாபெரும் உயரத்தில் தெரிந்தார்,

அவரென்று அல்ல ஜென்ம எதிரிகள் என மனதிற்கு அறியபட்ட அனைத்து ஆசிரியர்களும் தேவதூதர்களாக தெரிந்தார்கள்.

ஒரு ஆசிரியனாக அனுபவபட்டபின் அத்தொழிலின் சிரமம் புரிந்தது,

களர்நிலத்தை திருத்தி கழனியாக்கலாம் சிரமம்தான், ஆனால் ஒரு உழைப்பில் முடிந்தது பிரச்சினை. ஆனால் வருடம் வருடம் களர்நிலத்தை கழனியாக்கும் உழைப்பு எவ்வளவு கடினம், அதனைத்தான் ஆசிரியர்கள் செய்கின்றார்கள்.

அவரது கோபத்திற்கும்,மத்தள இசைக்கும் பின்னாளில்தான் அர்த்தம்புரிந்தது.

கல்லூரியில் வேலை பார்க்கும்பொழுது தற்செயலாக அவரை சந்தித்தேன் முகத்தில் சந்தோஷம் மிளிர ஒரு குழந்தையை போல கேட்டார் “எல என்ன படிச்சா நீ. இப்பொ என்ன செய்றா..”

“எம்.சி.ஏ படிச்சேன் சார் இப்போ ஒரு காலேஜில லெக்சரரா இருக்கேன்”

கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து காது குளிர்ந்தது, அதேதான்

“சாவு கிராக்கி..கிறுக்கால பிடிச்சிருக்கு எம்.சி.ஏ முடிச்சிட்டு எவனாது இந்த பக்கம் கிடப்பானா, ராத்திரி பஸ் ஏறுனா காலைல பெங்களூரு..போய் வேலைய தேடுல..ஆளும் மண்டையும்..உனக்கெல்லாம் எவம்ல எம்.சி.ஏ டிகிரி குடுத்தான்..” நீண்ட அர்ச்சனை.

இதுதான் ஆசிரிய குணம், தனது மாணவன் வழிதவறி போய்விடுவானோ என்ற அச்சமும் பரிதவிப்பும், இந்த அக்கரைதான் ஆசிரியரின் ஆணிவேர். ஒவ்வொரு ஆசிரியரின் கோபத்திற்கும்,கண்டிபிற்கும் பின்னால் இதுதான் ஒளிந்திருக்கின்றது.

ஒருவழியாக கல்லூரியை விட்டு ஓடிவிட்டேன், இன்று கணிப்பொறி மென்பொருள் தொடர்பான பணிதான், ஆனால் பார்த்தால் என்ன சொல்லுவார் தெரியுமா?

“சாவு கிராக்கி.. மலேசியாவுல என்னத்த புடுங்குறா?..அங்க எவம்ல போவான்..ரப்பர் தோட்டத்துக்கு பால்வெட்டயா?.இல்ல பாம்யில் எடுக்கயா?., அமெரிக்கா போல ..ஆளும் மண்டையும்..” இதுதான் அவர் பாணி.

மறைமுக ஆசீர்வாதம், உள்ளுக்குள் நிறைவு.

பின்னாளில் பள்ளியை பார்க்கசென்றேன், அவரை தேடினேன், அவர் ஓய்வுபெற்றதாக சொன்னார்கள், அவர் இல்லாத பள்ளியை பார்க்க மனதிற்கு ஏனோ பிடிக்கவில்லை திரும்பிவிட்டேன்.