வேலைக்காரன் : திரை விமர்சனம்
பொதுவாக பண்டிகை என்றால் வீட்டை விட்டு எங்குமே செல்ல கூடாது, நன்றாக சமைத்து உண்டு, குஷ்பு படம் மட்டும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையினை இதுகாறும் பின்பற்றி வந்தாயிற்று
இதனால் யார் வீட்டு விருந்துக்கும் சென்றதில்லை, சர்ச் அமைப்பு, நண்பர்கள், மிக முக்கியமானவர்கள் அழைத்தாலும் செல்வதில்லை, நாம சமைக்காவிட்டால் என்ன பண்டிகை எனும் மனநிலை அது. இங்கு ஒருமாதிரி பார்ப்பார்கள், பார்கட்டும். நல்ல சாபாட்டிற்காகவே பண்டிகைகள் வருகின்றன என்பது நமது நம்பிக்கை.
அப்படி உண்டுவிட்டு மல்லாக்க கிடந்தபொழுது வயிற்றில் மிதித்து எழுப்பினார் பாகம்பிரியாள், அடுத்த வீட்டில் படத்திற்கு செல்கின்றார்களாம் என்றவுடனே உண்மை விளங்கிற்று, “ஓ சிவகார்த்திகேயன் படம் வந்திருப்பதாக சொன்னார்களே, இவர் காதுக்கும் இப்பொழுதுதான் வந்திருக்கும்போல..” என எண்ணிவிட்டு சமத்தாக கிளம்பியாயிற்று
காரணம் சிவகார்த்திகேயனின் தீவிர் ரசிகை அவர், மறுத்துவிட்டால் அதன் பின் கிறிஸ்மஸ் புனிதவெள்ளி ஆகிவிடும் அபாயம் உண்டு
இந்த மோகன் ராஜா என்பவர் உண்மையில் நல்ல இயக்குநர், எந்தபடம் என்றாலும் நிதானமாக வித்தியாசமாக ஜனரஞ்சகமாக எடுக்க கூடிய மிகசிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி
வேலைக்காரன் படம் அவரால் மிக நுணுக்கமாக எடுக்கபட்டிருக்கின்றது. உண்மையும் அதுதான். இன்றைய உலகின் உணவுசந்தையினை , எதிர்காலத்தில் ஐடி தொழிலைவிட பெரும் மதிப்பாக பார்க்கபடும் உணவுசந்தையின் உள் அபாயங்களை மிக துணிச்சலாக சொன்னதால் பாராட்டுக்கள்
மனிதர் நிச்சயமாக கம்யூனிஸ்டுகளால் பாராட்டபட வேண்டியவர். அந்த அளவு தொழிலாளரின் சக்தியினை படத்தில் சொல்லியிருந்தார். நிச்சயம் சோவியத் யூனியன் போன்ற நாடுகள் இப்பொழுது இருந்திருந்தால் மாஸ்கோ அழைத்து கவுரவிப்பார்கள்
ஜெயகாந்தன் போன்றோர் இருந்திருந்தால் நெஞ்சம் மகிழ்ந்திருப்பார்கள், அதுவும் படம் முடிவில் செங்கொடி பறந்தபொழுது இந்த நாட்டில் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டுவிழாவினை நினைத்துபார்க்கவும் ஒரு இயக்குநர் இருக்கின்றார் என உண்மையிலே மனம் மகிழ்ந்தது
என்னதான் உலகம் விஞ்ஞானத்தில் முன்னேறினாலும் எந்நாளும் மானிட நலன் காக்க கம்யூனிசமே முக்கியம் என சொல்லியதும், முதலாளித்துவம் மக்களை வெறும் சந்தையாக , உழைக்கும் மெஷினாக மட்டுமே பார்க்கும் என சொல்லாமல் சொல்லியதும் இயக்குநரின் முத்திரைகள்
கம்யூனிசம் எனும் கட்டுபாடு இல்லா, எதிரி இல்லா முதலாளித்துவம் இவ்வுலகினை என்ன பாடுபடுத்துகின்றது என்பதை செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கின்றது படம்.
அந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். இந்த ஆண்டின் மிக மிக சிறந்த படம் இந்த வேலைக்காரன் என்பதையும் ஏற்றுகொண்டாயிற்று
நடிகர்கள் தேர்வும் அபாரம், அதுவும் மலையாளிகளில் சிலருக்கு உள்ள கள்ளம் நிறைந்த முகம் பகத் பாசிலுக்கும் வருகின்றது, அட்டகாசமான நடிப்பு
படத்தின் மிகபெரும் மகிழ்ச்சி நயன் கிழவியானது, இனி அவரின் ரசிகர்கள் சத்தம் எல்லாம் அடங்கும்.
படத்தில் சில காட்சிகள் வந்தன, ஏன் தேவையில்லாததை எல்லாம் சமூகம் வாங்கிகுவிக்கின்றது? இது இல்லாவிட்டால் வாழமுடியாதா? எல்லாமே மார்கெட்டிங், எல்லாமே தேவையில்லாதவை எனவும் சொன்னார்கள்
சரி இந்த சினிமா இல்லாமல் மனிதன் வாழமுடியாதா? அதுவும்தான் மாத சம்பளத்தில் ஒரு தொகையினை அடித்துவிடுகின்றது, கேபிள் டிவி எல்லாம் பிடுங்குகின்றது, இதனை எல்லாம் டைரக்டரிடம் கேட்க முடியுமா? மூச்…
படத்தில் பல சுவாரஸ்ய காட்சிகள் இருந்தன , படத்தின் ஒரு சீனில் நண்பர் வந்திருந்தார். டார்கெட் அச்சீவ் என விருதுகொடுக்கும் ஒரே ஒரு சீனில் வந்து சென்றார் அந்த நண்பர் Sri Rooban
அவர் மலேசிய யாழ்பாண தமிழர், யாழ்பாணத்தாருக்கே உள்ள கல்வி + வியாபார மூளை அவருக்கும் வந்துவிட்டது, 27 வயதிற்குள்ளே சுய தொழில் தொடங்கி இன்று பெரும் தொழிலதிபர் ஆகிவிட்டவர்.
அவர் வாங்கியிருக்கும் லேட்டஸ்ட் காரின் மதிப்பிலே ரஜினி படம் இரண்டு எடுத்துவிடலாம்
அவரின் பூர்வீகம் யாழ்பாணம், அவர் மனைவி பூர்வீகம் நெல்லை மாவட்டம் பிள்ளையார் குடியிருப்பு
இன்று மாலை கிறிஸ்மஸ் விருந்துக்கு வரசொன்னார், ஆனால் இங்கு சென்றாயிற்று, அதனால் என்ன இங்கு திரையிலும் கண்டாயிற்று
படத்தின் ஆலை சம்பந்தபட்ட காட்சிகள் மலேசியாவில் எடுத்திருக்கின்றார்கள், அதனால் இங்கு சூட்டிங் நடைபெறும்பொழுது மனிதருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது
படத்தில் அச்சீவ் அவார்டு வாங்குவது போலவே தன் தொழிலில் மாதம் 10 அவார்டுகளை வாங்கிவிட்டு உலகின் எந்த மூலைக்காவது பீரி டிக்கெட்டும் வாங்கிவிட்டு சென்றுகொண்டிருப்பவர் Sri Rooban
மிக சரியான, மிக சக்சஸ்புல்லான இன்சூரன்ஸ் வியாபாரி அவர், அதனால் ஏகபட்ட விருதுகளை வாங்குபவர். மிக சரியான ஆளை டார்க்டெ அச்சீவ்ட் சீனுக்கு கொண்டு வந்திருக்கின்றார் டைரக்டர்
அந்த ஒரு சீனில் கைதட்ட தோன்றியது, மிக உண்மையான சம்பவம் அது.
இந்த வயதில் அவரின் வளர்ச்சி நிச்சயம் அபாரமானது, அது யாழ்பாண தமிழருக்கு இயல்பாய் வரும் என்றாலும் இவர் கொஞ்சம் ஸ்பெஷல்
மனிதர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் கபாலி படபிடிப்பு நடந்தகாலத்தில் அவரை அடிக்கடி சந்தித்து போட்டோ எல்லாம் போட்டு வெறுப்பேற்றியவர்.
ஆக நல்ல படம் பார்த்ததிலும், அதில் நண்பரை பார்த்ததிலும் மகிழ்ச்சி, கம்யூனிச கருத்துக்களை கண்டதும் மகிழ்ச்சி
நயன் கிழவியானதில் மிக்க மகிழ்ச்சி, குஷ்பு படத்தில் வராதது மட்டும் சோகம்
வேலைக்காரன் குழுவினருக்கு வாழ்த்துக்கள், அதில் வளர்ந்துவரும் மலேசிய இளம் தமிழ் தொழிலதிபரை கண்டதில் மிக்க மகிழ்ச்சி
சொல்லமுடியாது அவர் மிக விரைவில் சொந்தபடம் எடுத்தாலும் எடுக்கலாம், அதில் தலைவி குஷ்புவிற்கு ஒரு வேடம் வேண்டும் என இப்பொழுதே சொல்லி வைக்க வேண்டும்