ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது….

Image may contain: 1 person, outdoor

இந்த ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது, எதிலிருந்து ஆகின்றது என்றால் மோடியினை புகழ்ந்து வைரமுத்து ஏதோ சொல்லபோக, அதிலிருந்து அய்யோ இவன் ஞானபீட விருதுக்கு அடிபோடுகின்றான் என கிளம்பிவிட்டார்கள்

இவர்களை நன்றாக கவனித்துபார்த்தால் ஒப்பாரி எப்படி வருகின்றது தெரியுமா?

அசோக மித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராசமாசி, லாசரா போன்றோருக்கு கொடுக்காத ஞானபீடம் எப்படி வைரமுத்துவிற்கு செல்லலாம் என கிளம்புவார்கள்

தமிழில் இதுவரை இருவர்தான் ஞானபீட விருது பெற்றிருக்கின்றார்கள் ஒருவர் அகிலாண்டம் எனும் அகிலன், இன்னொருவர் ஜெயகாந்தன்

இந்த இருவரை தவிர இன்னொரு தமிழன் இன்னும் பெறவில்லை, வைரமுத்துவின் எழுத்துக்கள் ஒன்றும் தரம் தாழ்ந்தவை அல்ல‌

ஜெயகாந்தனின் எழுத்து, இளையராஜாவின் இசை போல வைரமுத்துவின் எழுத்துக்கள் எளியமக்களின், அடித்தட்டு மக்களின் வாழ்வில் கலந்து வருவது.

அவரின் கிராமத்து காவியமான கள்ளிகாட்டு இதிகாசம் எல்லாம் தனித்து நிற்கும் ரகம்

பின்னர் ஏன் இவர்கள் குதிக்கின்றார்கள்? அதை சொல்ல இங்கு ஒருவருமில்லை, ஏன் வழக்கமாக குதிக்கும் அல்ட்ராசிட்டிகளும் இதில் இல்லை

கலைஞர் இருந்திருந்தால் ஒரே போடாக தன் வழக்கமான ஸ்டைலில் போட்டு அடித்திருப்பார், இதெல்லாம் அவருக்கான ஏரியா

எப்படி சொல்லியிருப்பார்?

“அன்புதம்பி வைரமுத்து மீது பெரும் சர்ச்சைகள் வருவதை கேள்விபட்டேன், இது இன்றல்ல நேற்றல்ல என்றுமே எழுத்தும் இலக்கியமும் பாடலும் ஒரு சாதிக்கு மட்டும் உரித்தான சொத்து என சொல்லும் வர்க்கம் அது

அதனை உடைத்து எழும்பிய அண்ணா போன்றவர்கள், என்போன்றவர்களை இங்கு ஒரு மாதிரித்தான் ஒதுக்குவார்கள்,

என்னைபோலவே சிவாஜிகணேசனை நீங்களும் நேசிப்பீர்கள், ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவிலை? ஏன் என்றால் அவர் பராசக்தியில் பகுத்தறிவு பேசியவர் என்பதற்காக‌

அதில் வைத்த வஞ்சமே அவரை எகிப்தியன், பிரான்ஸ்காரன் எல்லாம் கொண்டாட வைத்தபின் இங்கு அதிர்வு ஆயிற்று

எளிய மக்களின் இசையினை உலகறிய வைத்த இளையராஜாவிற்கு ஒரு அங்கீகாரம் உண்டா? தமிழன் தம்பி ரகுமானுக்கு அங்கீகாரம் உண்டா?

ஆனால் வடநாட்டவருக்கு கிடைக்கும் அங்கீகாரமே வேறு, இங்கு தமிழ் உயர்சாதி கலைஞர்களை அவர்கள் அங்கீகரிப்பதே வேறு

என்றோ செத்த தியாகராஜருக்கு திருவாரூரில் விழுந்து விழுந்து விழா எடுப்பவர்கள், தம்பி இளையராஜாவினை கண்டுகொள்வார்களா என்றால் இல்லை

எதிர்முகாம் என்றாலும், என்னை வயிறெறிய திட்டியவர் என்றாலும் , சாபம் பல இட்டவர் என்றாலும் ,சேறு பூசினாலும், அந்த சேற்றிலே மலர்ந்த செந்தாமரையின் தமிழை ரசிப்பவன் நான்,

அந்த பெண் கவிஞரின் பாடல்களை நிரம்ப பாராட்டுபவன் நான், ஆம் அந்த கவியரசி தாமரை என்பவருக்கு ஏதாவது தேசிய விருது கொடுத்தார்களா? மாட்டார்கள்

அருமை அண்ணாவினை விட ஒரு எழுத்தாளன் உண்டா? அவருக்கு விருது என ஒரு குப்பி கொடுத்திருப்பார்களா?

அதேதான் இங்கு தம்பி வைரமுத்துவிற்கும் நடக்கின்றது, அவன் எழுதிய காவியங்களில் என்ன குறை கண்டார்கள்? எளிய மக்களின் கிராம வாழ்வினை அவனை விட தெளிவாக பதித்தது யார்?

ஆனால் விருது என்றவுடன் அசோகமித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராமசாமி என கிளம்புவது ஏன்?

ஏன் என்றால் அவர்கள் எல்லாம் பிராமணர்கள், உயர் சாதியினர், அவர்கள் படைத்ததுதான் இலக்கியமாம், தாழ்த்தபட்டவன் படைத்தது இலக்கியமே இல்லையாம்

இளையராஜா இசையினையே இன்னும் ஒப்புகொள்ளா வர்க்கம், இந்த வைரமுத்துவின் எழுத்தை மட்டும் அங்கீகரிக்குமா?

சூத்திரன் ஒருவன் பிராமணனுக்கு மேல் கலைவடிவங்களை படைப்பாதா? எனும் ஆற்றாமையும், வேதனையும், எரிச்சலுமே இந்த சர்ச்சைகளுக்கு காரணம்

தம்பி வைரமுத்து சூத்திரன் என்பதாலும், பெரியார் வழியில் என் கைபிடித்து நடந்ததாலும், பெரியார் படத்திற்கு பகுத்தறிவு பாடல் எழுதியதாலும் இந்த ஆரியர்களால் குதறபடுகின்றானே அன்றி வேறல்ல தமிழகமே

தாழ்த்தபட்ட மாணவி மருத்துவ கல்விபடிக்கவே விடாதவர்கள், தாழ்த்தபட்டவனுக்கு விருது அதுவும் உயர்விருது தர எப்படி ஒப்புகொள்வார்கள்?, செய்யவே மாட்டார்கள்

அவர்களிடம் நியாயம் கேட்பது, கடலுக்குள் நன்னீர் தேடுவதற்கு சமம்

இவர்கள் ஒப்புகொள்ளாவிட்டால் வைரமுத்து படைப்பாளி ஆகமாட்டாரா?, “மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..” என்ற அவரின் வரிகள் போல, எங்கிருந்தாலும் தனி கம்பீரமும் தமிழ் அழகு கொண்ட தனித்துவமாக வைரமுத்து மிளிர்வார் என்பதில் சந்தேகமில்லை”