சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன்(சுஜாதா) எழுதவே அவதரித்த நாள் இன்று
பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது,
அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன
அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை
நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது
சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம், மருத்துவம்,கணிணி முதல் விண்வெளி வரை எல்லா துறையிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது மகா ஆச்சரியம்.
அவரின் தேடல் அப்படி இருந்திருக்கின்றது..
பணத்திற்கு எழுதுவதை விட , மனதில் ஊறும் விஷயங்களை ஆத்ம திருப்திக்கு எழுதுவதே எழுத்தாளன் வாழ்வின் சுதர்மம் என சொல்லி சென்ற அந்த சுஜாதாவின் பிறந்த நாள் இன்று
ஜனரஞ்சகமான, யாரையும் நோகடிக்காத, பூக்களை தூவி மயிலராகால் வருடிவிட்ட சுகத்தை அந்த எழுத்துக்கள் கொடுத்தன
செய்யுளோ இலக்கியமோ விஞ்ஞானமோ வரலாறோ அவர் விளக்கியது போல் இன்னொருவர் விளக்க முடியாது
ஒரு தமிழறிஞன் பெரும் விஞ்ஞானி ஆன விந்தை அவர் ஒருவரில்தான் நடந்தது.
மனதிருப்தி கொடுக்கும் எழுத்துக்களின் விலையினை எந்த தொகையும் நிர்ணயிக்காது என்பதே அவரின் வாழ்வு தத்துவம்
மாபெரும் ஆற்றல் இருந்தும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், எந்த அரசியல்வாதியிடமும் எலும்புக்கு கையேந்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக பச்சை பொய்களை எழுதாமல் வாழ்ந்தவர் அவர்
தன்மானமிக்க பிரபல எழுத்தாளன் தமிழகத்தில் காட்டகூடிய மிக சிலரில் அவரும் ஒருவர்.
புரட்சி, முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு, முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், பொறம்போக்கு தத்துவம் என அவர் முகமூடி போட்டு எழுதவில்லை
எது யதார்த்தமோ, எது அறிவுடமையோ அதை எழுதினார்
பத்து தலை ராவணன் எழுத வந்தால் எப்படி இருக்கு? தசாவாதரம் எடுத்து பரம்பொருள் தமிழில் எழுத வந்தால் எப்படி இருக்கும் என காட்டிவிட்டவர் சுஜாதா
எப்பொழுதாவது அபூர்வமாக தமிழகத்தில் பிறக்கும் அறிவாளிகளில் ஒருவரான அவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறலாம்
சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன், எழுதவே அவதரித்த நாள் இன்று