பாலகுமாரன் : தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 1 person, beard

தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது

எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் சமாதனத்தையும் அன்பையும் சமத்துவத்தையும் தாங்கியே வந்தன‌

நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார்

சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை

‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான வசனங்கள்

இது நம்ம ஆளு படத்தின் அற்புதமான இயக்குநரும் அவரே

சோழநாட்டு அபிமானம் அவரில் கலந்திருந்தது அதனால்தான் “உடையார்” என ராஜராஜ சோழனின் கதையினை அவரால் எழுதமுடிந்தது

இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல்

காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே

முன்னோர்களின் ஏதோ நினைவு அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளன் மறைந்திருப்பதில் மனம் கனக்கின்றது, அவருக்கு 72 வயதுதான் ஆகியிருந்தது. இருதய அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாய்தான் இருந்தார்

திடீரென அவர் பிரிந்துவிட்டார்,

அந்த அதிர்ச்சி செய்தியினை கேட்டவுடன் மனமும் கண்களும் அப்படியே கலங்கி நிற்கின்றன‌

எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது

எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டிருக்க அவர் விடைபெற்றுவிட்டார்

ஆனந்த விகடனும், குமுதமும் அவருக்காகவே விற்பனையான காலங்களும் உண்டு

எழுத்து சித்தர் இனி இல்லை, ஆனால் அவரின் எழுத்துக்களில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்

ஜீன்ஸ் படத்தில் அற்புதமான வசனம் ஒன்று எழுதியிருப்பார்

உதவாக்கரை நாசர் அழும்பொழுது அவர் அண்ணன் சொல்வார்

“நாச்சியப்பா நீ என் தம்பிடா, நீ எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்ல, ஆனா நீ கண்கலங்கினால் மட்டும் அண்ணனால் தாங்க முடியாது”

பாசம் என்பது பணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அட்டகாசமாய் சொன்ன வசனம் அது

இனி இப்படி எல்லாம் எழுத யார் இருக்கின்றார்கள்? அவரின் வசனங்கள் எல்லாம் காதில் ஒலிக்க தொடங்கிவிட்டது

தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி


பாலகுமாரன் என் நண்பர், பாஷா போல இன்னும் ஒரு படத்திற்கு எழுத சொன்னேன் அவர் மறுத்துவிட்டார் : ரஜினிகாந்த்

இந்த ரஞ்சித் படத்திற்கு எழுத சொல்லியிருப்பாரோ? அதுதான் பாலகுமாரனின் மனதை பெரிதாக பாதித்ததோ என்னமோ.