பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யதுல்லா கோமேனி

Image may contain: 1 person

வரலாற்றில் பாரசீகம் என்று பெர்சியா என்றும் தனி இனமாக இருந்த நாடு அது, இஸ்லாமை பின்பற்றுவார்களே தவிர‌ அரபு வகையறாவில் அவர்கள் வரமாட்டார்கள். பாபிலோனின் நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் போன்றோரிடம் அடிமையாக இருந்தாலும் மீண்டு எழுந்தார்கள்

பாரசீக பேரரசு ஆசியாவினை மிரட்டிய காலமும் உண்டு, இந்தியாவின் மேல் படையெடுத்து ஷாஜகானின் மயிலாசனம், கோஹினூர் வைரம் எல்லாம் எடுத்து சென்றார்கள்

கலை, அறிவியியல், கல்வி, ,உணவு, வர்த்தகம், ராணுவம் என பல விஷயங்களில் தனித்துவம் கொண்ட இனம் அது, தாஜ்மகாலை வடிவமைத்தவன் ஒரு பாரசீக கலைஞன்

ஓட்டோமானின் வீழ்ச்சிக்கு பின் பெர்சியா ஹிட்லரோடு தொடர்பு கொண்டது, நாமும் ஆரியர்கள் என பெர்சியா ஈரான் எனும் ஆரிய பூமியானது (அதே ஹிட்லரை பார்த்து நாமும் ஆரியர்கள் என தொடங்கபட்டதுதான் ஆர்.எஸ்.எஸ்)

இஸ்லாமிய நாடு ஆயினும், நாம் இனத்தால் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இஸ்லாமிய உலகம் அவர்களை புறம் தள்ளி வைத்தது, காரணம் அவர்கள் ஷியாக்கள்

யாழ்பாண தமிழருக்கு தமிழக தமிழர் போலவும், யூதர்களுக்கு இஸ்லாமியர் போலவும், பிராமணருக்கு மற்ற இந்துக்கள் போலவும் இருந்த இடைவெளி சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இருந்தது, ஈரானை ஒருவிதமாக தாழ்த்தியே அரபு உலகம் வைத்திருந்தது

அழுத்தி சொல்ல வேண்டுமானால் எந்த முக்கிய முடிவிற்கும் அவர்களை தேடமாட்டார்கள். அது எகிப்து சூயஸ் விவகாரம், இஸ்ரேல் மீதான அரபு நாட்டு படையெடுப்பு போன்றவற்றில் ஈரானை சேர்க்கமாட்டார்கள்

“நீ எல்லாம் ஒரு நாடா? உன்னை எப்படி சேர்க்க முடியும்? என்ன பலம் உண்டு உன்னிடம்? நாங்கள் யார், நீ யார்?” என்ற ஒரு ஏளன பார்வை அரேபியரிடம் இருந்தது

ஒப்புக்கு கூட ஈரானை மதிக்க அவர்கள் தயாராக இல்லை

சொல்லபோனால் ஷியாக்களுக்கு ஒரு அங்கீகாரமும் பலமும் இல்லை. ஷியாக்கள் நிறைந்த ஈராக்கை சன்னி சதாமும், ஈரானை மன்னரும் ஆண்டுகொண்டிருந்தனர்

குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி போல ஈரானுக்கும் மன்னர் இருந்தார. எண்ணைவள நாடு என்றால் அமெரிக்காவிற்கு தலையாட்ட வேண்டும் அல்லவா? அப்படி ஆட்டிகொண்டு கவனமாக பணத்தை எண்ணி கொண்டிருந்தார். மக்கள் மேல் கவனமோ மத ரீதியான அபிமானமோ இல்லை

அப்பொழுதுதான் அந்த சமய குரு பிரபலமானார். தீர்க்கமான சிந்தனை. தைரியமான பேச்சு, அரசுக்கு எதிரான முழக்கம் என அவரின் புகழ் பரவியது

ஷியாக்கள் தங்களின் தேவதூதராக அவரை கருதினர். அதுவரை தாழகிடந்த அறிவற்ற இனமாக கருதபட்ட ஷியா சமூகத்தில் அவர் அதிசயமாக பார்க்கபட்டார். தாழகிடக்கும் இனம் தங்கள் சமூகத்தில் ஒரு சிந்தனையாளன் தைரியமாக எழும்பினால் விடுமா? அவனை கொண்டாடியது

சைய்யது ரூகோல்லா மூஸாவி கோமேனி

அந்த கோமேனி புகழ் இன்னும் பரவ, அவர் கடவுளின் தூதர்
என்றே நம்பினார்கள். இஸ்லாமில் நபிக்கு பின் வல்லமையுள்ள ஒருவர் வருவார் என்ற நம்பிக்கை உண்டு. அது இவர்தான் என்றார்கள். சில நேரம் அவரின் முகம் நிலவு போல மாறும் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன‌

இதனால் கடவுளின் அடையாளம் எனப்படும் அய்யதுல்லா என்ற அடைமொழி அவருக்கு கொடுக்கபட்டது அவர் அய்யதுல்லா கோமேனி ஆனார்

நாடு முழுக்க அவருக்கு பெரும் கூட்டம் பெருகிற்று, அயதுல்லா ஷியாக்களுக்கு தலைவர் ஆனார், அவர் சொன்னால் சாக கூட தயார் எனும் அளவிற்கு மக்கள் மாறினர்

கோமேனியின் கோபம் அமெரிக்க ஆதரவு மன்னர் மேல் திரும்பியது, மன்னர் கொமேனியினை ஈரானில் இருக்க கூடாது என உத்தரவிட்டார். ஈராக், ஏமன் என சுற்றி இறுதியில் பிரான்ஸ்லில் அடைக்கலமானார் கோமேனி

ஆனால் ஈரான் கொந்தளித்தது, அரசருக்கு நெருக்கடிகள் முற்றின. மருத்துவ விவகாரங்களுக்காக அமெரிக்கா செல்கின்றேன் என மன்னர் கிளம்பிய சில நாட்களில் பிரான்ஸ்லில் இருந்து ஈரான் வந்தார் கோமேனி, ஆட்சியினை 1979ல் கைபற்றுவதாக அறிவித்தார்

எங்கோ இருந்துகொண்டு ஈரானில் புரட்சி நடத்தி ஆட்சியினை கைபற்றினார் கொமேனி, மாபெரும் ஆச்சரியம் இது.

ஈரான் ஷியக்களின் நாடாக அறிவிக்கபட்டது, ஒரு மதகுரு தலமையில் ஈரானில் புரட்சி நடந்து அது இஸ்லாமிய குடியரசு ஆனது

கிட்டதட்ட 3000 ஆண்டுகள் பழமையான ஈரானிய அரசர் வகையறாவினை மக்களை திரட்டி ஒரு மதகுரு விரட்டி ஆட்சியினை பிடித்த அதிசயம் அங்கு நடந்தது

ஆட்சிக்கு அமர்ந்ததும் அதிரடி காட்டினார் கோமேனி , அமெரிக்காவிற்கு நேரடி சவால் விட்டார். ஈரானிய அரசரை அவர் சொத்துக்களோடு ஒப்படைக்க போகின்றாயா இல்லையா?

அமெரிக்கா மறுத்தது, மிக தைரியமாக கோமேனி செய்த காரியம் உலகை அதிர செய்தது, ஆம் 1979 நவம்பரில் ஈரானின் அமெரிக்க தூதரகத்தை அவரின் புரட்சிபடை முற்றுகையிட்டது, அவர்கள் உயிருக்கு ஆபத்து எனும் அளவில் கடும் நெருக்கடிகள்.

உலகம் பதைபதைப்பாக பார்க்க மிக நிதானமாக கேட்டார் அய்யதுல்லா

“அரசனை அவன் சொததுக்களை கொடு, அமெரிக்க அதிகாரிகளை நாங்கள் தருகின்றோம்..”

அமெரிக்க தன்மானத்தில் விழுந்த அடி அது, உலகம் மகா ஆச்சரியமாக அதை நோக்கியது, விவகாரம் 444 நாட்கள் நீடித்தது

இடையில் அமெரிக்க அரசு அவர்களை மீட்க பின்லேடன் பாணியில் 3 ஹெலிகாப்டர்களை அனுப்பியது, 3ம் ஈரானிய புரட்சிபடையால் வீழ்த்தபட்டது, அமெரிக்கா அது மணல் புயலில் சிக்கியதாக சொல்லி மண்ணை தட்டிகொண்டது

இறுதியில் மன்னர் இறந்து போக அமெரிக்கர்களை அனுப்பிவைத்தார் கோமேனி. அமெரிக்க வரலாற்றில் மாபெரும் அவமானம் இது, இன்றுவரை ஈரான் மேல் அமெரிக்கா கொலைவெறியோடு அலைய இதுதான் காரணம்

அப்பகுதிக்கு கோமேனி பெரும் தலைவர் ஆனார், ஷியாக்களின் எழுச்சி சன்னி தலைவர்களிடமே அச்சத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா நரி தந்திரமாக சதாமினை வளைத்தது

(ஈரானின் புரட்சி தங்கள் மண்ணில் நடந்தால் தங்கள் உல்லாச வாழ்வு அதோகதி என உணர்ந்த பக்கத்து நாட்டு அரசர்களும் சதாமிற்கு ரகசியமாக துணை சென்றனர், குவைத் அரசு அதில் முக்கியமானது

பின் அது சதாமிற்கு துரோகம் இழைக்க , அந்த கோபத்தில்தான் குவைத் மீது பாய்ந்து வாழ்வினை தொலைத்தார் சதாம்)

அன்று கோமேனி அரேபியாவினை பூரண இஸ்லாம் பகுதியாக அறிவிக்க முயன்றபொழுது சதாம் வித்தியாசமாயிருந்தார், அன்றைய சதாமுக்கு மதம் முக்கியம் அல்ல மாறாக தொழில் இன்னபிற விஷயங்களில் ஆர்வமாயிருந்தார்

அந்த நவீனமுகம் கொண்டிருந்த சதாமினை ஈரானுக்கு எதிராக தூண்டிவிட்டார்கள், ஷியாக்கள் மிகுந்த ஈராக்கில் அது சதாமிற்கு அவசியமாகவும் இருந்தது. பழைய எல்லை தகறாறுகளில் அது வெடித்தது

சதாமின் படைகளை கோமேனியின் புரட்சிபடை முதலில் திணறினாலும் பின்னால் எதிர்கொண்டது, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கிய ஈரான் தாக்குபிடித்தது, வடகொரிய ஈரான் உறவுகள் அன்று தொடங்கின‌

சதாமின் பெயர் கெட்டது, சன்னி இஸ்லாமியரான சதாம் மக்களின் அதிருப்தியினை போக்க தான் ஷியாவிற்கு மாறியதாக எல்லாம் சொல்லி பார்த்தார் ஆனால் யாரும் நம்பவில்லை

இறுதியில் 7 ஆண்டுகள் நீடித்த போர் நின்றது

கோமேனியின் ஈரான் அதன் எல்லையினை தாண்டி ஷியாக்கள் இருக்குமிடமெல்லாம் அதிகாரம் செய்தது, சிரியா, லெபனான், ஏமன் என எல்லா நாடுகளுக்கும் காவலானது

லெபனானில் நின்றிருந்த அமெரிக்க பிரென்ஞ் படைகளை ஓட விரட்டியதிலும் சில பிணைகைதிகளை பிடித்து ஈரானிய அரசின் சொத்துக்களை மீட்டதிலும் கோமேனியின் சாதனை பெரிது

அவரை கொல்லவும், ஈரானிய அரசை கைபற்றவும் 10 ஆண்டுகள் கடும் முயற்சி செய்தது அமெரிக்கா, கோமேனியினை நெருங்க கூட முடியவில்லை.

காரணம் அமெரிக்க தூதரகம் ஈரானில் இருக்க கூடாது என மிரட்டி அனுப்பினார் கோமேனி, ஏனென்றால் தூதரகங்கள் என்னென்ன சித்துவிளையாட்டை எல்லாம் ஆடும் என அவருக்கு தெரியும்

அவர் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் மட்டுமல்ல, அவர் இறந்த அடுத்த 30 ஆண்டுகளிலும் கோமேனியின் ஈரானை அமெரிக்கா தொட முடியாததற்கு இதுதான் காரணம்

சில தூதரகங்கள் அவ்வளவு ஆபத்தானவை, மிக நுட்பமாக கலவரங்களை குழப்பங்களை தூண்டிவிடுவார்கள். அடிக்கடி சில நாடுகள் சில நாட்டு தூதர்களை வெளியேற சொல்வது இதற்குத்தான்

மனரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மிக பின் தங்கிய ஷியாக்களுக்கு பெரும் கவுரவம் பெற்று கொடுத்தவர் கோமேனி, அதனால்தான் இன்று உலகெல்லாம் உள்ள ஷியா இஸ்லாமியர் வீடுகளில் எல்லாம் அவர் படம் இருக்கும்

இந்தியாவில் காஷ்மீரில் அதனை காணலாம்

கோமேனி ஆட்சியின கைபற்றியதே பெரும் ஆச்சரியம் என்றால், இன்றுவரை அதே பாதையில் அதாவது ஷியாக்களுக்கு பாதுகாப்பான தேசம் என்ற வகையிலே ஈரானின் செயல்பாடுகள் உள்ளது ஆச்சரியமானது

இன்று மத்திய கிழக்கின் ஸ்திரதன்மையுள்ள குடியரசு ஈரான். இன்று ஷியாக்கள் வாழும் ஈராக்கிலும் அவர்களின் பிடி உள்ளது, இடையில் ஐஎஸ் எனும் இயக்கம் இதை எதிர்த்துத்தான் போராடி பார்த்தது ஆனால் ஈரான் அதையும் முறியடித்தது

சன்னி நாடுகள் அமெரிக்க அடிமையான அரேபியாவில் ஷியா தேசங்கள் மிக கடுமையாக அமெரிக்காவினை எதிர்க்கின்றன என்றால் காரணம் கோமேனியின் ஈரான்

கவனியுங்கள், எங்கெல்லாம் ஈரானின் ஆதரவு கரங்கள் உண்டோ அங்கெல்லாம் மன்னர்கள் அட்டகாசம் இருக்காது, அவை மக்கள் குடியரசாகவே இருக்கும், கோமேனியின் ஈரான் செய்யும் மகத்தான பணி அது

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள பகை இப்பொழுது டிரம்ப் காலத்தில் முற்றுகின்றது, எனினும் ஈரான் அசைந்து கொடுக்கவில்லை. இன்று ஈரான் மேல் அமெரிக்கா கை வைத்தால் அது அரபு தேசத்தில் பலத்த விளைவுகளை கொடுக்கும் அளவிற்கு நிலமை தீவிரம்

ஈரானிய புரட்சியும் அது ஏற்படுத்தபோகும் விளைவுகளும் நாஸ்டர்டாமஸால் கூட சொல்லபட்டிருந்தன‌

நிச்சயம் ஈரானிய புரட்சி மகா ஆச்சரியமான விஷயம், ஒரு சாதரண அப்பாவி மதகுரு மாபெரும் அரசனை விரட்டிவிட்டு, உலகமகா வல்லரசை மண்ண கவ்வ வைத்த விஷயங்கள் எல்லாம் சாதாரணம் அல்ல‌

கோமேனியினை ஆங்காங்கே தொட்டு காட்டுவார்களே தவிர அவரின் உண்மையான தீரத்தை ஒருவரும் சொல்லமாட்டார்கள்

அவர் ஷியா என்பதால் அது சன்னி பிரிவுக்கு அவமானம், ஏராளமான இடங்களில் அமெரிக்காவின் கழுத்தை பிடித்து தள்ளியவர் என்பதால் அவர்களுக்கும் அவமானம்

இதனால் அந்த தன்மான சிங்கத்தின் மாபெரும் புகழ் பல இடங்களில் மறைக்கபடுகின்றது, ஆனால் முற்றிலும் முடியவில்லை

அமெரிக்கா என்பது சாத்தான், அது கால்பதித்த இடத்தில் நிம்மதி இருக்காது. அதன் நிழல் கூட இங்கு இருக்க கூடாது என்ற கோமேனி வழியில் அரபு உலகம் கிளம்பி இருக்குமானால் அன்றைய கலீபாக்கள் கண்ட சொர்க்கத்திற்கு நிகரான ஆட்சி அரேபியாவில் இன்று நடந்துகொண்டிருக்கும்

ஒரு குழப்பமும் இருந்திருக்காது

தாழ கிடந்த ஷியா இனத்தை எழ வைத்து ஆளவைத்து , ஈரான் எனும் தேசத்தை அவர்களுக்கு கொடுத்து அது அரபுலகில் பெரும் எழுச்சிக்கு வழிவகுத்த அந்த கோமேனியின் நினைவு நாள் இன்று

நாசர், சதாம் வரிசையில் மகா தீவிரமாக அமெரிக்காவினை எதிர்த்து அதில் முழு வெற்றியும் பெற்றவர் அந்த கோமேனி

வரலாற்றில் அமெரிக்கா வியட்னாமில் மட்டும் தோற்கவில்லை, அவர்கள் அரசியல் ரீதியாக மண்டியிட்ட இடம் ஈரான்

அமெரிக்கா என்றல்ல, ஆனானபட்ட இஸ்ரேலும் அதன் மொசாத்தும் கூட ஈரானிடம் வாலை சுருட்டிகொண்டு அமைதியாகத்தான் இருந்தது

இப்பொழுதுதான் அணுஆயுதம் அது இது என ஈரானை வம்புக்கு இழுக்கின்றார்களே அன்றி, அப்பொழுதெல்லாம் ஈரான் என்றாலே அவைகளுக்கு ஒரு அச்சம், ஈரான் விவகாரங்களில் தலையிடுவதில்லை

வரலாற்றை புரட்டுங்கள் தெரியும், நேரடியாக அவர்களை தொட முடியாத அமெரிக்கா பொருளாதர தடை என அடித்தும் அசராதவர்கள் ஈரானியர்கள்

அதற்கு பதிலடியாக சிரியாவிலும் ஈராக்கிலும் ஏமனிலும் அடித்து வைக்க வேண்டிய வகையில் அமெரிக்காவிற்கு செக் வைப்பதில் அவர்கள் கில்லாடிகள்

ஈரானின் பலம் இன்று குறிப்பிடதக்கது, அந்த பலம் வாய்ந்த‌ ஈரானை உருவாக்கியது நிச்சயம் அய்யதுல்லா கோமேனி என்பதில் சந்தேகமில்லை

நிச்சயம் வரலாற்று நாயகன் கோமேனி என்பதில் சந்தேகமில்லை

அய்யதுல்லா கோமேனி எனும் பெயர் வரலாற்றை புரட்டி போட்டவர்கள் வரிசையில் இடம்பெற்று நிலைத்தாயிற்று

அரபுலகில் அமெரிக்க அரசியல் இருக்கும்வரை அவரின் தீரமிகு போராட்டமும், மதிநுட்பமும் வரலாற்றில் இருக்கும்

மதம், வரலாறு, அரசியல், உலக அரசியல், போர், நிர்வாகம், ஆட்சி என பலதுறைகளில் மகா வித்தகரான அந்த கோமேனி அசாத்திய மனிதர்

எந்த ஈரான் அப்பகுதியில் புறக்கணிக்கபட்டதோ, அந்த ஈரானை மகா சக்திவாய்ந்த நாடாக மாற்றி காட்டியவர் கோமேனி

அந்த மகா தைரியமான, அரபுலக வரலாற்றினை புரட்டி போட்ட பாரசீக சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 
 
 
 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications