முருகபெருமானோடு கலந்துவிட்ட கிருபானந்த வாரியாருக்கு அஞ்சலிகள்
தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை
ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்
பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்
அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்தது
நிச்சயம் அகில இந்திய அளவு, விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திகொண்டார்
அவர் காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம், நாத்திக கூட்டம் ஒரு மதவாதி விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டையும் கொடியுமாக வலம் வந்த காலம்
ஆனால் அவர்களுக்கும் உள்ளூர கிருபானந்தவாரி மேல் மதிப்பு இருந்தது, கிருபானந்தவாரியும் கூடுமானவரை அவர்களின் மோதல் போக்கினை பெருந்தன்மையாக தவிர்த்தே வந்தார்
இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர்
எத்தனையோ இதழ்களை நடத்தினார், ஏராளமான புத்தகங்களையும் எழுதினார்
சாந்தமான முகம் , பார்த்தால் வணங்கதக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை
எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது , எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை
சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரி
அதில் சந்தேகமே இல்லை
அந்த அற்புதமான அமைதியான அர்த்தமுள்ள ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லை
முருகன் , ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி தூக்கமின்றி கேட்டுகொண்டே இருக்கலாம், அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவை
இன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும்
சாட்சாத் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர், கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது
ஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான கிருபானந்தவாரியின் அழகு தமிழ் வெளிதெரியாமல் ஆக்கபட்டது
இன்று அவரின் பிறந்த நாள், அந்த ஆன்மீக பெரியவருகு பக்தி அஞ்சலிகள்
இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர்.
முருகபெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள்
(எந்த மாபெரும் மனிதனும் சில இடங்களில் சறுக்குவார்கள், சிவனே வரம் கொடுத்துவிட்டு ஓடி ஒளிந்த உலகமிது
அப்படி ராமசந்திரனுக்கு “பொன்மன செம்மல்” என்ற பட்டம் கொடுத்தையும், நாஞ்சில் சம்பத்துக்கு “ஞான சிறுவன்” என்ற பட்டத்தை சிறுவயதில் கொடுத்ததையும் தவிர அவர்மேல் ஒரு சர்ச்சையும் சொல்ல முடியாது
அப்படி பட்டம் கொடுத்ததற்காக நிச்சயம் அவர் பின்னாளில் முருகனிடம் மன்னிப்பு கேட்டிருப்பார் )