கலைவாணரை பற்றி நிறைய எழுதலாம்

Image may contain: 1 person, smilingகலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது

அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார்

பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர்

“அது ஒண்ணுமில்லீங்க..காரை நடுரோட்டில் நிறுத்தி பழம் சாப்பிட்டால் போக்குவரத்திற்கு சிக்கல் அல்லவா?. அதனால் காரினை சரித்துபோட்டுவிட்டு யாருக்கும் இடையூறின்றி பழம் சாப்பிடுகின்றேன், நீங்களும் சாப்பிடுங்கள்”

இதுதான் கலைவாணர், எல்லா சூழ்நிலையினையும் மிக சாதரணமாக எடுத்துகொண்டு, சிரித்துகொண்டே வாழ்க்கையினை நடத்தியவர்

கோடி கோடியாக சம்பளம் வாங்கும்போது இருந்த அதே சிரிப்புதான் வீடு ஏலத்திற்கு வரும்பொழுதும் இருந்தது, திவால் அறிவிப்பு கொண்டுவந்த நீதிமன்ற ஊழியனிடம், “அட்டாட்ச்மென்ட் கொண்டு வந்திருக்க, நமக்குள்ள நல்ல அட்டாச்மென்ட் இருக்கு..” என சிரித்துகொண்டே கேட்டவர்

பெரும் வள்ளல், கேட்காமல் உதவியவர். அந்நாளில் பெரும் மதிப்பு அவருக்கு இருந்திருக்கின்றது, குழந்தை முதல் ஜி.டி நாயுடு வரை அவரின் ரசிகர்கள்.

எவனோ ஒரு தயாரிபாளன் மிக‌ சிரமபட்டு எடுத்தபடம் தோல்வியாக, பின் தானே சில காட்சிகளை நடித்து பின் அதே படத்தில் இணைத்து அதனை வெற்றியாக்கி தயாரிப்பாளன் கண்ணீரை துடைத்தவன்

இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளன் யாரென்றே அவருக்கு தெரியாது, அவரின் துயரம் கேள்விபட்டிருக்கின்றார், உதவி விட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார், ஒரு காசு வாங்கவில்லை

“சினிமா எடுக்க வருகிறவன், நஷ்டத்தோடு போக கூடாது” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவர்,

எல்லாவற்றிற்கும் மேல் மனிதர் மகா கைராசிக்காரர், எப்படி?

சேலம் மார்டன் தியேட்டரில் ஒரு இளைஞனை அவர் முன் நிறுத்துகின்றார்கள், நன்றாக எழுதுவான் அய்யா என்கின்றார்கள், ஆனால் அவன் ஒல்லியாக தேகம், குள்ள உருவம்

எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்க, கண்டிக்கின்றார் கலைவாணர், உருவத்தை வைத்து எடைபோடாதீர்கள், இவன் இன்னொரு அகத்தியனாக இருக்கலாம் என்கிறார்.

தம்பி உனக்கோர் வாய்ப்பு தருகின்றேன், நீருபிப்பாயா என கேட்டு ,தன் பணம் படத்தின் கதையினை சொல்ல தொடங்கினார்

பணம் என்ற வார்த்தையினை சொன்னவுடன் அந்த இளைஞரிடம் இருந்து வார்த்தைகள் சீறுகின்றன‌

“பணம்..முட்டாள்களிடம் சிக்கும், கல்மனத்தோருடன் கொஞ்சும், நல்லவர்களை கெஞ்ச வைக்கும்..” என சீறி வருகின்றது வசனம்

படம் பெரும் வெற்றி, மகிழ்ந்த கலைவாணர் அவரை வாழ்த்தி ஒரு காரும் பரிசளித்து ஆசீர்வதிக்கின்றார்.

ராம்சந்தர் என்ற பெயருடன் தெருதெருவாய் அலைந்த எம்ஜி ராமசந்திரனின் கஷ்ட காலங்களில், சிவாஜி கணேசன் எனும் மகா நடிகன் மெலிந்த தேகத்தோடு வாய்ப்பு தேடிய காலங்களிலே பெரும் தொகை சம்பளம் வாங்கி காரும் வாங்கினார் அந்த இளைஞர்.

சும்மா சொல்ல கூடாது, இளைஞர் அன்றே சம்பாதித்தியத்தில் உச்சம்.

அந்த இளைஞந்தான் நமது கலைஞர், தமிழக வரலாற்றை புரட்டி அதன் மீது அமர்ந்துவிட்ட இரண்டாம் அகத்தியர்

கலைவாணரின் வாழ்த்தும் கணிப்பும் அப்படி பலித்திருக்கின்றது

அரசியலுக்கு வந்து வீடும் காரும் வாங்கும் காலத்தில் , அன்றே வீடும் காரும் வாங்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார் கலைஞர்

கலைஞரை கைதூக்கிவிட்டதில் என்.எஸ் கிருஷ்ணனை மறக்க முடியாது, அந்த நன்றியும் கலைஞருக்கு காலமெல்லாம் இருந்தது

தமிழக சினிமா வரலாற்றில் மறக்கமுடியா மனிதர் கலைவாணர்

நாகர்கோவில் ஓழுகினசேரி தெருக்களிலும், வடசேரி சந்தையிலும் அவர் நினைவு வந்து வந்து செல்லும், அம்மனிதன் உருவாகிய இடங்கள் அவை

அங்குதான் தன் வேடிக்கை பேச்சினை அவர் தொடங்கினார் என்பார்கள்

சென்னை எத்திராஜ் கல்லூரியினை கடக்கும் பொழுதும் அவர் நினைவு வரும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்,கே சிக்கியபோது அவருக்கு வாதாட வந்தவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ், வித்தையில் ராம்ஜெத்மலானிக்கும் தாத்தா மாதிரியானவர்

அவரின் வாதத்தில்தான் என்.எஸ்.கே விடுதலையானர், ஆனால் சொத்துக்கள் கரைந்தன,

பின்னாளில் எத்திராஜ் காலேஜ் கட்டினார்

நிச்சயமாக அந்த கல்லூரி கட்டிடத்து கல்லில் என் எஸ் கிருஷணன் பணத்தின் செங்கல் நிச்சயம் ஒளிந்திருக்கும்

வாழ்ந்த காலமெல்லாம் அள்ளிகொடுத்த வள்ளலான கிருஷ்ணன், மறைமுகமாக அள்ளிகொடுத்த காரியங்களில் சில உண்டு, அதில் எத்திராஜ் கல்லூரி சுவரும் இருக்கலாம்,

விதி லட்சுமிகாந்தன் வழியில் விளையாடி இருகின்றது.

அந்த கொடும் வழக்கு தாண்டி தியாகராஜ பாகவதரால் திரையில் வெல்லமுடியாமல் போனது, ஆனால் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்,

ஆனால் விதி முந்திகொண்டது.

எல்லா சூழ்நிலையினையிலும் சிரித்து கொண்டே வாழ்வினை கழித்த நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது.