கவிஞன் கண்ணதாசன்

கண்ணதாசன்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.
முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும்.
குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.
இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.
அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.
இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.
பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.
எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.
மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.
அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”
வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்
( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார் என்பவர்கள் உண்டு, ஆனால் “நெஞ்சுக்கு நீதி” மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம்  )
தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே. பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.
தமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,
பாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.
கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.
வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.
இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.
வரிகளை பிரித்துவைத்து எழுதினால் அது கவிதையாம், உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.
கேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள், இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.
ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது, அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.
எப்படியும் விரைவில் மானமிக்க தமிழன், தமிழை நேசிக்கும் தமிழன், முதல்வராகும் பொழுது முதல் காரியம் இந்த கவிஞர்கள் இனி கவிதை எழுதமாட்டார்கள் என உறுதிமொழிவாங்குவார் என்ற ஆசை இருக்கின்றது, டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான்.
தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.
இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.
“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே”
என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.
இன்று கண்ணதாசனின் நினைவுநாள்.
தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.
தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.
அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்”
எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.
“ஜோதிமணி பெட்டகமே, சுடரொழியே கண்மணியே ஆதிமகனாய் பிறந்த அருதவமே” என இயேசுவிற்கு பாடல் பாடவும் அவர் தவறவில்லை
இன்றும் இயேசுவின் திருவுருவத்தை பார்க்கும்பொழுதெல்லாம் “வானளந்த திருக்குமரா, மனிதகுல மருத்துவனே” எனும் கண்ணதாசனின் வரிகள் வந்து போகும்
தேவமாதாவினை பார்க்கும்பொழுதெல்லாம் “தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ” எனும் வரிகளே நினைவுக்கு வரும்
எப்படிபட்ட கவிஞன் அவர்.
எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.
ஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால்
“நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” , அவருக்கு அழிவே இல்லை.
அவரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதில் தமிழ் அறிந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பு ஏதுமில்லை.
தந்தை இறந்தபொழுது கவிஞரின் பாடல்களே ஆறுதலாயின, மகனுக்கு அவரின் பாடல்களே தாலாட்டும் ஆகியிருக்கின்றன‌
தமிழின் அழகை வாழ்வியல் தத்துவத்தோடு அவர் போல் திரையுலகில் இன்னொருவன் சொல்ல பிறந்துதான் வரவேண்டும்
அந்த இரண்டாம் கம்பனுக்கு, 64ம் நாயன்மாருக்கு, மாபெரும் சித்தனுக்கு, கண்ணனின் ஆழ்வாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
(குஷ்பூவிற்கு அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், அன்றே குஷ்பூவிற்கு பொருந்தும் மிக அழகான பாடலை சாவித்திரிக்காய் எழுதினார் கவிஞர்
“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ , உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ” எனும் பாடலது
அப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் குஷ்பூவிற்கு எக்காலமும் பொருந்தும், அதனால் சங்கத்தின் சார்பாக கவிஞனுக்கு பெரும் அஞ்சலி)
[ October 18, 2018 ]
Image may contain: 1 person