’96’ – திரைப்படம்
96 படம் இன்னும் பார்க்கவில்லை
ஆனால் 96 என்றவுடன் அந்த 11ம் வகுப்பு கணக்கு வாத்தியாரும் அவர் நிகழ்த்திய கலவரமும்தான் கண்ணுக்கு வருகின்றது
எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும்,
பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது.
அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் காட்டியே பயமுறுத்துவார்கள்.
இக்காலத்தில் 10ம் பொதுதேர்வில் 495 எல்லாம் அனாசியமாக அள்ளுகின்றார்கள், அக்காலத்தில் 440 கூட இமாலய சாதனை. அதுவும் திக்கி திணறி 400ஐ நெருங்கிவிடால் அவனது காதில் பல குரல்கள் கேட்கும்
“11ம் வகுப்பில் முதல் வகுப்பு எடுக்காவிட்டால் உன்னை மதிக்க மாட்டார்கள்”, என்ன மதிப்பு என்று மட்டும் யாரும் சொல்லவே மட்டார்கள், யார் மதிக்கமாட்டார்? இந்திய பிரதமரா அல்லது உள்ளூர் கவுன்சிலரா என்றேல்லாம் சொல்லமாட்டார்கள், மதிப்பில்லை அவ்வளவுதான்.
இதை போல நிறைய அனுமானங்கள், இந்தியாவில் ஒரு மாணவன் படிப்பதே பெற்றோருக்கும் மற்றவருக்கும் தான், அவனுக்காக அல்லவே அல்ல, வேறு வழியின்றி மாணவனும் முதல் வகுப்பு பற்றி விசாரிப்பான்.
1980களில் வள்ளியூர் பகுதி பள்ளிகளில் கள்ளிகுளம் பள்ளியும் குறிப்பிடத்தக்க ஒன்று, வள்ளியூர் முதல் பலபகுதி மாணவர்களும் அங்கு படிப்பார்கள், ஒரு மாணவன் அப்படி அப்பாவியாய் அப்பள்ளியின் முதல்வகுப்பினை பற்றி விசாரித்தால், அவனுக்கு வியர்த்து வழியும்,
வியர்வை தவிர வேறு வகையிலும் உடல் நனையும். அப்படித்தான் அந்த ஆசிரியரை சொல்லி பயமுறுத்துவார்கள், அம்புலிமாமா கதையில் வரும் பிரம்மராட்சரை போல மனம் கற்பனை எல்லாம் செய்யும், அப்பெயருக்கு சொந்தகாரர் கணித ஆசிரியர் திரு.அந்தோணி செல்வன்.
படிக்கும் பொழுது அவரது பெயரை கேட்டாலே அலறும், இப்போது படித்து முடித்து இப்பொழுது பணியிலிருப்போரிடம் பெயரை சொல்லுங்கள், கேட்ட உடனே புன்ன்கை பூக்க சிரிப்பார்கள்.
அவரது சுவராஸ்யம் அப்படி, அதிரடிகள் அப்படி, மிக இயல்பாக சொல்லி செல்லும் வார்த்தைகள் அப்படி.
ஒருவழியாக வகுப்பும் தொடங்கிற்று, பாடம் நடத்துவார், கணிதமல்லவா புரியும் ஆனால் புரியாது, அவரோ மிக சுருக்கமாக ஆனால் கருத்தாக விளக்குவார், அவ்வளவுதான் பாடம் இனி நீங்கள் மீதியினை செய்யுங்கள் என சொல்லிவிட்டு அமர்ந்து கொள்வார்.
சோறினை பிசைந்து ஊட்டிவிட்டு, அம்மாவே வாயையும் துடைத்து விட்டு பழக்கபட்டவன் தமிழக மாணவன், ஆசிரியரே சகலமும் கற்பித்து முடிக்கவேண்டும், நாம் கொஞ்சம் புரிந்தோ அல்லது + குறிவரை மனப்பாடம் செய்தோ தேர்வில் தேறவேண்டும் என்பதே அவனுக்கு தெரிந்த “படிப்பு”, அவரோ நீ சுயமாக முடித்துகாட்டு என்கிறார், எப்படி நடக்கும்?
பின்னர் அதுதான் நடக்கும், அங்கும் ஆரம்பித்தது “இதால ஆன்சர் சாவு கிராக்கி, ஒழுங்கா போடுல, கேட்டா 10ம் கிளாஸ் கணக்குல 95 மார்க்..” என்று முதல் அதிர்ச்சி கொடுத்தார். “சாவு கிராக்கி” எனும் வார்த்தை அப்பபகுதி வார்த்தை அல்ல, டிக்சினரியில் தேடும் முன் சென்னைதமிழ படங்களை பார்க்கமுடிந்ததால் அர்த்தம் விளங்கிற்று.
அடுத்த அடுத்த வகுப்புகளில் இன்னமும் முன்னேற்றம், கணக்கினை முடிக்க சொல்லி ஒவ்வொருவராக பார்த்துகொண்டே வருவார், ஒரு மாணவன் ஏதோ ஒரு கணித குறியினை மறந்திருப்பான், அவர் கவனித்து மெதுவாக கேட்பார் “படித்து என்ன ஆக போறா..”, மாணவன் மகிழ்ந்து சொல்லுவான் “டாக்டர் சார்”, அப்பொழுதுதான் கருத்தை பிடிப்பார் “அது இருக்கட்டும்ல இதுல ஒரு ஸ்குவர் வரணும எங்க?”, மாணவன் “மறந்துட்டேன் சார்” என்பான்
அப்பொழுதுதான் உரக்க சொல்லுவார் “இப்படித்தாம்ல நாளைக்கு ஆப்பரஷன் பண்ணிட்டு கத்திரிகோல உள்ளவச்சி தச்சிட்டு மறந்துட்டும்பா..உனக்கெல்லாம் டாக்டர் ஆச..” சொல்லிவிட்டு முதுகில் டிரம்ஸ் சிவமணி வேலையை தொடங்குவார்.
இன்னொரு மாணவன் கணக்கிற்கும், விடைக்கும் சம்பந்தமில்லாமல் ஏதோ செய்திருப்பான், அவனிடம் கேட்பார் உனக்கென்ன ஆசை அவன் இன்சீனியர் என்பான், திடீரென அவனை குனியவைத்து கும்முவார், கும்மிகொண்டே சொல்லுவார் “உன்ன இன்சினீயர் ஆக்குறதுக்கு பதிலா ஒரு குரங்க ஆக்கலாம், 2ம் ஒரே வேலைதான் செய்யும்”, பாம்பின் வாய் தவளையாக அவனும் கத்துவான், “சார் மறுபடி செய்றேன்” சார், அவர் விடமாட்டார்
“ஓ.. ஒரு பாலம் கட்ட சொன்னா இடிச்சி இடிச்சி 10 பாலம் கட்டுவியோல உன்ன விடகூடாதுல…”
அன்றிலிருந்து எல்லா மாணவனும் டாக்டர்,பொறியியல் கனவுகளை மனதோடு மட்டும் வைத்துகொண்டனர்.
ஒரு நாள் மேட்ரிக்ஸ் நடத்திகொண்டிருந்தார், வழக்கமான சோதனை, ஒரு மாணவனிடம் விடை கேட்டார் அவன் சீரோ என்றான், “உன் மார்க்க கேக்கல, ஆன்சர் சொல்லு என்றார், அவன் மறுபடியும் சீரோ என்றான், அவனது நோட்டையே பார்த்துகொண்டு அமைதியாக சொன்னார் “நீ கவனிக்கப்டவேண்டியவன் கணித உலகிற்கே இது புதுசு”,
அவனோ ராமனுஜத்தை கற்பனையில் நெருங்கிகொண்டிருந்தான், சத்தமாக சொன்னார்,”இதுண்ணு இல்ல உன்கிட்ட எந்த கணக்கை கொடுத்தாலும் நீ சீரோ தான் ஆன்சரா கொண்டு வருவா..” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே நோட்டிற்கு சிறகு முளைத்து பறந்தது, காதில் மத்தள இசை கேட்டது.
மாணவர்களுக்கு கவலை அதிகம், அதில் முதலிடத்தினை கணித வகுப்பு பிடித்துகொண்டது, ஆனால் அவர் திட்டும் விதத்தினை ரசிக்கலாம்.அடி மட்டும் தான் வில்லங்கம்.
அவரை புரிந்துகொள்ளவில்லை அதுதான் பிரச்சினை.
அவரின் ஆசிரிய மனநிலை இதுதான், இவர்கள் எல்லாம் நன்கு படிப்பவர்கள், வடிகட்டி எடுக்கபட்ட மாணவர்கள், கணிதம் சிக்கல்தான் ஆனால் இவர்களால் முடியும், நாளை மருத்துவம்,பொறியியல் என எவ்வளவு சிக்கலான படிப்புக்களை தாங்களாக படிக்கவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் மாணவன் தானாக படிக்கவேண்டும்,
ஆசிரியர் வழிகாட்டுவார் அல்லது தெளிவு கொடுப்பார். அப்படியும் தெளியமாட்டேன், முழுகணக்கையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும் என்றால் எப்படி? சொல்லியாகிவிட்டது கேட்கவில்லை, திட்டினாலும் சிரிக்கிறான்,
வேறு என்ன செய்வது டிரம்ஸ் இசைதான்.
ஆனால் அட்டகாசமாய் வகுப்பினை கொண்டு செல்வார், பெரும் அறிவாளிகள் வரை அறிமுகபடுத்துவார், தனிபட்ட முறையில் ஆலோசனைகளை வழங்குவார், ஒரு கணக்கினை நடத்திவிட்டு அதற்கும் கணிப்பொறி மொழிக்கும் இருக்கும் தொடர்பினை சொல்லுவார், ஆர்வகோளாறிலோ அல்லது பயந்தோ உயிரியல் மாணவன் “ஆமாம் சார் அப்படித்தான் என்றால் அதிரடியாக சொல்லுவார் ” நா சொல்றது கம்பியூட்டர் சயின்ஸ்க்கு.. நீ தவளை ஓணான வெட்டிக்கிட்டு கிடப்பா..போல”
சரியாக மணி ஒலித்ததும் வகுப்பிற்குள் வருவார், மணி மறுபடி ஒலிக்கும் பொழுது அப்படியே நிறுத்துவார். மறுநாள் வந்து அட்டகாசமாக விட்ட இடத்திலிருந்து தொடங்குவார், நாளொரு கணக்கும் பொழுதொரு வார்த்தையும் நொடிக்கொரு முதுகு சாத்தலுமாய் வகுப்பு சென்றது.
பள்ளிக்கு வெளியே எந்த மாணவனையும் கண்டுகொள்ள மாட்டார், வகுப்பில் அடிக்கும் பொழுது கூட அவன் கிரிக்கெட் ஆடியதை கண்டிக்கமாட்டார், கணித முயற்சி செய்யவில்லை அதற்குதான் அடி,
காலை பள்ளிக்கு நமக்கு எதிரில்தான் வருவார், ஒன்றாக நுழைவார், நுழைந்ததும் முன்னால் வந்து நின்று கேட்பார் “ஏம்ல லேட்.உங்க ஊர் என்னல 7 கடலுக்கு அங்கயாயல இருக்கு..ஆளும் மண்டையும்…”
தனிபட்ட முறையில் மாணவர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் அதிகம், கணித ஆசிரியர்தான் ஆனால் பங்குவர்த்தகம் மற்றும் வருமானவரி பற்றி துல்லியமாக பேசுவார், அவரிடம் பங்குவர்த்தக கதைகளை கேட்ட மாணவர் இன்று திறமையான பங்குசந்தை வித்தகர், இவ்வளவிற்கும் அவர் கணிதபாடத்தில் பெயில். ஒருமுறை சொன்னார்
“என்னல டாக்டர், இன்சீனியரு, அவனவன் ஓணான் கூட இல்லாத காட்டுக்குள்ள இஞ்சினியரிங்காலேஜ் கட்டிட்டு இருக்கான், இன்னும் கொஞ்சகாலத்துல ஆடுமேய்க்கவும் கூட இஞ்சினியர் வருவான்..வருமான வரி ஆபீசர் ஆனா அள்ளலாம்ல, அங்க குமாஸ்தாவா இருந்தாலும் போதும் டாக்டரவிட அதிகமா வரும்ல அதான் இப்போ இந்தியா”
இன்று அதெல்லாம் உண்மையாகிவிட்ட காலங்கள்.
ஒருவழியாக 12ம் வகுப்பும் வந்தது, மாணவர்கள் கணிப்பொறி வேகத்தில் படித்து, ரோலர் கோஸ்டர் வேகத்தில் தேர்வெழுதவேண்டும், மாணவனுக்கு சினிமா,கிரிக்கெட்,திருவிழா,கல்யாணம்,ஊர்சுற்றல் என எல்லாம் தடை, பார்ப்பவர்கள் கூட கவனமா படிப்பா என்று சொல்லியே பயம்காட்டுவார்கள், ஆப்பரேஷனுக்கு காத்திருக்கும் நோயாளி போலவே சமூகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும்.
ஆனால் அந்த ஆசிரியரோ ராணுவ அதிகாரி போல +2 யுத்தத்திற்கு தயார் படுத்த ஆரம்பித்தார், முதல்நாளிலே கட்டளை பிறந்தது “எலேய் நீ டாக்டராவு, இஞ்சீனியராவு இல்ல ஏதும் ஆவு அது பிரச்சினை இல்ல..என்ன பொருத்தவரைக்கும் நீ பாஸ் ஆகி போ..அவ்வளவு போதும் 4 மாசம்தான் பாடம், அப்புறம் நீ பாடம் நடத்தணும் அதான் ரிவிசன்”
அவ்வளவுதான் மாணவர்கள் மாற்றுவழி தேடினர், எல்லா டியூசன் வீடுகளும் நிரம்பி வழிந்தன, சில தைரியமான மாணவர்கள் அவரிடமே டியூசன் சேர்ந்தனர், அங்கும் அவர் அதே இயல்புடனே தான் இருந்தார்,
அதுதான் “முயற்சி செய், உன்னால் முடியும், ஆசிரியன் ஒரு வழிகாட்டி, தவறானால் திருத்துவான் அவ்வளவுதான், நீ ஒருவனே உன் அறிவினை வளர்த்துகொள்ள முடியும், காப்பாற்றிகொள்ளவும் முடியும்”
அவரது ஆசிரிய பணியின் தத்துவம் இதுதான் ஆனால் இயற்பியல், வேதியல்,உயிரியல்,கணிதம் ஒவ்வொன்றிற்கும் இரு புத்தகம் வேறு இதற்கிடையில் ஆங்கில இலக்கணமும், தமிழ் செய்யுள்களும் வேறு தாங்குமா?
மாணவர்கள் தங்கள் பெயரைகூட மறந்து படித்துகொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவர் சொன்ன கணிதத்தினை மறந்தும் விட்டார்கள், அது என்னமோ சம்பந்தபட்டது
மாணவிகளை பார்த்துகொண்டே இருந்ததில் எமக்கும் அது மறந்துவிட்டது, அவர்களை நாம் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் தாவணி கோஷ்டியும் மறந்தது
அவரோ மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் கேட்டார், யாரும் கண்டுகொள்ளவில்லை , அன்றுதான் அவர் தனது யுத்த திட்டத்தில் ஒரு பெரிய முடிவுக்கு வந்தார்
அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம்.
முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து.
பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் முதலில் வெளியே விழுவான், பின்னர் நோட்டு, கடைசியாக பாடபுத்தக பை.
அடிவாங்குபவனை மற்ற மாணவர்கள் கவனமாக குறித்துகொண்டார்கள், ஓ முதுகில் 2 குத்து, காலில் மிதி,நோட்டால் மண்டையில் 2 அடி அவ்வளவுதான், முகத்தை மட்டும் காட்ட கூடாது,
ஒகே.சார் நான் ரெடி மனதிற்குள் சொல்லிகொண்டார்கள்.
வெளியே செல்லும் மாணவன் முணுமுணுத்தால் இன்னொரு பொருள் பறந்து வந்து தலையில் விழும், ஒரு குரலும் அசிரீரியாய் ஒலிக்கும் “மார்க்க கேளு 10ம்கிளாஸ்ல 100, ஒரு சாதாரண சுருக்கல் தெரில, குற்றாலத்தில இருக்கவேண்டியதெல்லம் இங்க..ஹெட்மாஸ்டர் வேற அவனுக எல்லாம் அறிவாளி சார் கவனிசுக்கோங்கணு சொல்றார்..கவனிக்கேம்ல உங்கள நல்லா கவனிக்கேன்”
ஒரு வழியாக மாணவர் நொறுக்கல் முடிந்து மாணவியர் வரிசை, பெண்கள் விவரமானவர்கள், அடிக்கும் முன்னமே அழுது ஓடி வந்தார்கள்,
அவரா விடுவார்? கூப்பிட்டு தலையில் கொட்டி,நோட்டுகளை கிழித்து வீசி தலையை பிடித்து தள்ளுவார், அவர்களும் கொடையில் ஆடும் பெண்களை போல குலவையிட்டபடியே வந்து விழுவர்.
ஒரு வழியாக எல்லோரும் தட்டு தடுமாறி எழுந்தனர், சிலர் அன்றே தீவிரவாதியாகும் முடிவு, சிலருக்கோ தற்கொலை போராளி ஆகும் அளவு கண்களில் வெறி,சிலரோ சந்திரமுகி வடிவேலு போல சிலையாக நின்றனர். நல்லவேளையாக மணி ஒலித்தது, அவர் உடனே சென்றுவிட்டார்,
ஆனால் குறைந்தது 2 வருடத்திற்காவது அவருக்கு கொலஸ்ட்ரால்,சுகர் பிரச்சினை வராது, அவ்வளவு உடல்பயிற்சி அல்லது உழைப்பு அன்று அப்படி.
வகுப்பு கலவரம் நடந்த தெருபோல சிதறிகிடந்தது, பென்ஞ், டெஸ்க்,பென்சில்பாக்ஸ் செருப்பு, தலையில் இருந்த மல்லிகை என சகலமும் சிதறிகிடந்தது, சிலர் முகமும் வீங்கி கிடந்தது.
அங்கு என்ன கைரேகை நிபுணரா வருவார் அப்படியே வைக்க?, அடுத்த இயற்பியல் வகுப்பிற்காய் ஆசிரியர்தான் வருவார், அழுதழுது ஒழுங்கு செய்தார்கள்.
மறுநாள் கணிதவகுப்பிற்கு வந்தார், ஒன்றுமே நடக்காதவர் போல பாடம் நடத்தினார், மாணவ சமூகம் மனதிற்குள் பொங்கியது, அவர் அலட்டிக்காமல் சொன்னார், “நேற்று நடந்தது சும்மா டிரைலர், மெயின் பிக்சர் ரிவிசன்ல தொடங்கும், அது டிசம்பரில், அன்று நேற்றுமாதிரி அமைதியான ஆசிரியராக என்னை பார்க்கமுடியாது”
அது அமைதியா? ஆளாளுக்கு அலற தொடங்கினார்கள், சமய வேறுபாடில்லாமல் எல்லா ஆலயத்திலும் வணங்கி முறையிட தொடங்கினார்கள், இந்து மாணவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கடாவும் , கிறிஸ்தவ மாணவர்கள் இந்து ஆலயங்களுக்கு பொங்கலும் நேர்ந்துகொண்டனர், இஸ்லாமிய மாணவர்கள் இடைவிடாமல் பிரார்த்தினர், இன்னும் என்னவெல்லாமோ நடந்தது.
அவரோ அப்பொழுதெல்லாம் அடிக்கவுமில்லை,மிரட்டவுமில்லை, ஆனால் செமினார் நடத்த சொல்ல ஆரம்பித்தார், (பின்னாளி கல்லூரியில் எடுத்த செமினாருக்கு எல்லாம் அதுதான் தொடக்கபுள்ளி) தவறு செய்தால் சொல்லுவார், எல்லாம் டிசம்பரில் தெரியும் அதுவரை சிரித்துகொள் என சொல்லிவிட்டு செல்வார், ஒவ்வொரு நாளும் தேதி கிழிக்கும் பொழுது மனம் சொல்லும் பாவி டிசம்பர் ஒரு 10 வருஷம் கழிச்சி வரக்கூடாதா?
டிசம்பரும் வந்தது, கூட்டுபிரார்த்தனைக்கு எவ்வளவு வலிமை என அன்றுதான் உணர்ந்த நாள், நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவருக்கு மிக சரியாக ரிவிசன் தொடங்கும் நாளைக்கு முன்னால் மஞ்சள்காமலை கண்டு பாதிக்கபட்டார், மாணவர்களுக்கு +2 தேர்வு முடிந்தது போல மகிழ்ச்சி, கோஷங்கள் மட்டும் போடவில்லை
தற்காலிகமாக ஒரு ஆசிரியையை நியமித்தார்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னால் அன்னா ஹாசரே போல செய்வதறியாது புதியவர் திகைத்தார், எப்படியோ சமாளித்தார், பொதுதேர்வுக்கு 1 வாரத்திற்கு முன்புதான் திரு.செல்வன் மறுபடி வந்தார். மெலிந்திருந்தார், கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது, தனது கடமை செய்யமுடியாமல் போன ஒரு வருத்தம் முகத்தில் தெரிந்தது, தப்பித்த பெருமை மாணவர்களிடம் தெரிந்தது.
இதெல்லாம்தான் 96 என்றால் நினைவுக்கு வருகின்றது
ஒரு சில காட்சிகளை பார்க்க முடிந்தது, பல வருடங்களுக்கு பின் சந்திக்கும் திரிஷா விஜய் சேதுபதி நெஞ்சில் கை வைக்கின்றார்
நமது 96 மாணவிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் நம் முதுகில் கை வைத்து கேட்பார்கள் , “அவர் அடித்த அடி இன்னும் வலிக்கின்றதா?..”
நமது 96 கதைகள் இப்படித்தான் [ October 18, 2018 ]
============================================================================
ஒரு வழியாக 96 படத்தை பார்த்து நம் சினிமா கடமையினை செலுத்தியாயிற்று, சும்மா சொல்ல கூடாது அட்டகாசமான படம்
பசுமையான வயல் வழியே குளிர்ந்த சாரல் அடிக்கும்பொழுது நடந்த ஒரு வித ஏகாந்த சுகம் அந்த படம். அற்புதமான கவிதையினோ நாவலையோ படித்த திருப்தியினை படம் கொடுக்கின்றது
படத்திற்கு செலவோ இல்லை வேறு விளம்பரமோ ஏதுமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், சில பாக்யராஜ் படங்களின் சாயல் தெரிகின்றது, கதை படத்தை தாங்குகின்றது
எல்லோர் மனதிலும் இருக்கும் சொல்லபடாத வலியினை படம் சொல்கின்றது, முதல்காதல் கொடுக்கும் வடு அப்படியானது
படம் பள்ளி காலங்களுக்கு இப்போதைய வாழ்விற்கும் இடையே அப்படியே ஊசலாட வைக்கின்றது அல்லவா அதுதான் வெற்றி
பள்ளி காலங்களுக்கு அழைத்து செல்கின்றது, அந்த சுகமான காலங்களின் நினைவுகளை கீறிவிடுகின்றது
நல்ல படம் என்பது பார்த்து சில நாட்களுக்கு மனதில் நின்று வலிக்க வேண்டும், ஒரு விதமான உற்சாகமும் குழப்பமும் நிறைந்த மன நிலைக்கு தள்ள வேண்டும், இப்படம் அதனை செய்கின்றது
படத்தை பார்த்தவுடன் நாமும் இதே போல பள்ளி நண்பர்களை அழைத்து கெட் டுகதெர் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டுமென திட்டம் உதயமாயிற்று
இடம், காலம் எல்லாம் மட மடவென வந்தாயிற்று, அழைக்க வேண்டியதுதான் பாக்கி
ஆனால் ஆழ்மனது எச்சரித்தது
இந்த திரிஷா என்பவருக்கு வயதே ஆகாது, கிட்டதட்ட 20 வருடமாக இப்படியே இருக்கின்றார், ஆனால் நம் வகுப்பு தோழிகள் அப்படியா?
அதனால் உள்மனம் சொல்லிற்று, “வேண்டாம் இந்த விபரீத முயற்சி வேண்டாம், அவர்களை அழைக்காதே, நீ கடைசியாக பார்த்த உருவம் வேறு இனி பார்க்க போகும் உருவம் வேறு
அதை பார்த்தால் தாங்க மாட்டாய், அவளை என்று நீ கடைசியாக 96களில் தேவதை கோலத்தில் கண்டாயோ அப்படியே நினைவில் வாழட்டும், கடைசி வரை அப்படியே நினைவில் நிற்கட்டும், சந்திக்க முயற்சியே செய்யாதே அதுதான் எல்லோருக்கும் நல்லது
சில விஷயங்கள் மனதோடு இருப்பதுதான் சுகம், சில விஷயங்கள் வெளியே சொல்லாமல் இருப்பதுதான் ஏகாந்தம். வாழ்நாள் எல்லாம் மனதோடு மட்டும் பேச வேண்டிய விஷயங்கள் சில உண்டு
பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய அற்புத நினைவுகளை நேரில் பார்த்து கெடுத்துவிடாதே…”
ஆம் யாரையும் பார்க்க போவதில்லை, அவர்கள் எல்லாம் அந்த அழகிய காலத்து பசுமையான நினைவிலே மட்டும் இருக்க வேண்டியவர்கள்
[ October 27, 2018 ]
============================================================================