சென்னை 600028 : 2 வது இன்னிங்ஸ் : திரை விமர்சனம்
சென்னை 600028 என்றொரு படம் வந்திருக்கின்றது, வழக்கமான வெங்கட் பிரபு படம்தான், ஆனால் இந்த இரண்டாம் பாகம் படம் பல நினைவுகளை மனதில் கிளறிவிட்டு சென்றது
பம்பரம், கோலி, இன்னும் ஏராளமான கிராம விளையாட்டுக்களை விழுங்கி கிரிக்கெட் கிராமங்களில் வளர ஆரம்பித்த 1980களில் வளர்ந்தவர்களுக்கு அப்படம் ரசிக்கும்
சாதாரண ரப்பர் பந்தையும், தென்னை மட்டையினையும் கொண்டு விளையாடி, பக்கத்து ஊர்களுடன் பகையாட்டாம் ஆடாத அக்காலத்தவர்கள் மிக குறைவு, கபடியின் ஆக்ரோஷத்தினை கிரிக்கெட் அப்படியே உள்வாங்கியிருந்தது
கபில்தேவ் கோப்பையினை வென்று தொடங்கிவைத்த எழுச்சி அது, சச்சின் அன்று அப்பொழுதுதான் வந்திருந்தார். ஸிரிகாந்த், கபில், இம்ரான்கான், வால்ஷ், ரிச்சர்ட்சன் என ஜாம்பவான்கள் கலக்கிய காலத்தில் கிராமங்கள் இப்படித்தான் மாறிகொண்டிருந்தன.
ஆயிரம் சச்சின், டோனி, கோலி வந்தாலும் இன்றும் பலர் மனதில் கபிலுக்கு இருக்கும் இடமே தனி
கைலியும், சட்டையுமாய் சில நேரங்களில் மேல் சட்டை கூட இல்லாமல் ஆட்டங்கள் தூள்பறத்தின, அவை கிராமங்களுக்கு இடையே ஒரு இமேஜ் பிரச்சினையாக கூட மாறின .
அதனை நகர்ப்புற பீச் கிரிக்கெட் என எடுத்து முதல் பாகத்தை வெற்றிபடமாக ஆக்கினார்கள், அதாவது கிராம தெருமுனை வரை இருந்த கிரிக்கெட்டின் வீச்சு படத்தினை வெற்றிபடமாக ஆக்கி இருந்தது
முதல்பாகம் பிடித்திருந்தால் நிச்சயம் இந்த இரண்டாம் பாகமும் பிடிக்கும்
மீள கஷ்டமான நினைவுகளை அப்படம் கொடுத்துவிட்டது
அன்று ஒன்றுமே இல்லை, கையில் காசு என்று காலணா இல்லை, ஆனால் மனம் முழுக்க மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்தது, சுற்றிலும் நண்பர்கள் இருந்தார்கள்
இன்று எல்லாம் இருக்கின்றது, ஆனால் மனதில் அந்த பழைய மகிழ்ச்சி இல்லை, நண்பர்கள் என்று அருகில் யாருமில்லை
அன்று ஓட்டை சைக்கிளில் அவர்களோடு சென்றபொழுது இருந்த அந்த மகிழ்ச்சி, இன்று ஏசிகாரில் தனியே செல்லும்பொழுது அறவே இல்லை.
இது மாறிவிட்ட வாழ்க்கை குடும்பம், மனைவி, குழந்தை , வேலை என முழுக்க மாறிவிட்ட வாழ்க்கை, முழுக்க நமக்கான வாழ்க்கை அல்ல
ஆனால் நமக்கான வாழ்க்கையினை கொஞ்சகாலம் அப்படி மகிழ்வாக வாழ்ந்திருக்கின்றோம் என்ற நிம்மதியினை தவிர வேறுவகையில் அந்த வேதனையினை கடந்து செல்லமுடியாது..
பெற்றோருக்கும், உடன்பிறந்தோருக்கும் செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு திரும்பினால் காலடியில் நம் குழந்தை நம் முகத்தை பரிதாபமாக பார்க்கின்றது, பின் அதற்காக ஓட வேண்டி இருக்கின்றது
ஆக நமக்காக வாழ்ந்த காலங்கள் அந்த கொஞ்ச நாட்களே
வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு, நினைவுகளை தவிர அதில் மிஞ்சி நிற்பது ஏதுமில்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக புரிகின்றது
அந்த வசந்த கால நினைவுகளை இப்படம் கிளறிவிட்டது,
பல நினைவுகள் வந்தன, நண்பனின் நினைவும் வந்தது.
மட்டை எடுத்துகொண்டு முதல் ஆளாக செல்வான், இரண்டாவது பந்திலே வந்திவிடுவான், முறைத்தால் சொல்வான் ” நான் என்ன பேட்ஸ்மேனா?, பவுலர்”
பந்தை கொடுத்து போடச்சொன்னால் சிக்சும், போறும் பறக்கும், சில வைடுகளும் விழும், அப்பொழுது முறைத்தால் சொல்வான்” நான் என் பவுலரா? பேட்ஸ்மேன்”
மறைந்துவிட்ட அவன் முகமும் நினைவுக்கு வந்தது.
கொள்கை இல்லாத கட்சிகள் இருக்கும் தமிழகத்தில், பெரும் கதை என இல்லாத இம்மாதிரி படங்கள் வருவதை ஆட்சேபிக்கலாமா? மாறாக ரசிக்கலாம், கொண்டாடலாம்.
என்னதான் சென்னையில் செட்டில் ஆகிவிட்டாலும் வெங்கட்பிரபு அடிக்கடி காட்டும் தேனி பாசம் உண்மையில் பாராட்டப்டவேண்டியது
அந்த வேர்களை அவர் மறக்கவில்லை என்பது புரிகின்றது, வாழ்த்துக்கள்
படம் எப்படி இருக்கின்றது?
அன்று இளம் பருவத்தில் தெருமுனை கிரிக்கெட் விளையாடிவிட்டு, இன்று சிறுவயது குழந்தைகளை கொண்டிருக்கும் குடும்பத்தாரான இளம்வயது அங்கிள்கள் நிச்சயம் படத்தினை கொண்டாடுவார்கள்.
படம் பார்த்து முடித்ததும், மகள் கேட்டாள்,
“ரொம்ப சந்தோஷமா படம் பாத்தீங்களே, கிரிக்கெட் பிடிக்குமாப்பா?
ஆமாம்மா…
நீங்கள் இப்படி கிடிக்கெட் விளையாடுவீர்களா?
ஊரில் விளையாடியிருக்கின்றேன், இங்கெல்லாம் யாரும் விளையாடுவதில்லை
யாரெல்லாம் விளையாடுவீங்க?
நானும் சில அங்கிள்களும்
நான் பார்த்திதில்லைப்பா, இனி ஊருக்கு போகும்போது விளையாடுங்கப்பா நான் பார்க்கணும்
இல்லமா இனி விளையாட முடியாது?
ஏம்பா? அவங்கல்லாம் வரமாட்டாங்களா?
எல்லோரும் எங்கோ என்னமோ செய்கின்றார்கள், இனி அப்படி ஒன்றாக வரமுடியாதம்மா, எல்லோருக்கும் வேலை இருக்கின்றது
ஏம்பா? விளையாட வாங்கண்ணு சொல்லுங்க வருவாங்க
இல்லம்மா இனி வரமாட்டாங்க,
ஏம்பா?
அப்படித்தான்மா, இனி நீங்கதான் விளையாடனும் நாங்கல்லாம் விளையாடி முடிச்சாச்சி”
என சொல்லிமுடிக்கும் முன்னே ஒரு ஏக்க பெருமூச்சு வந்ததை தடுக்க முடியவில்லை.