Abirami anthathi 36

“பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே”

முதல் வரியிலே அன்னையினை “பொருளே” என்கின்றார் பட்டர், பொருள் என்றால் இங்கு செல்வம் என்றாகின்றது

அன்னை செல்வம் அளிக்கும் திருமகள் அல்லவா? அன்னை எல்லா செல்வங்களுக்கும் அதிபதி அல்லவா? அதனால் அன்னையே செல்வத்தின் அதிபதியே செல்வமே என பாடி தொடங்குகின்றார்

(பொருள் என்றால் உண்மை என்றொரு பொருளும் உண்டு)

அடுத்து “பொருள் முடிக்கும் போகமே” என்கின்றார், போகம் என்றால் இன்பம் அல்லது சுகம். பொருள் வெறுமனே பொத்தி வைக்கபட்டால் பலன் இல்லை

காசோ, பணமோ, பொக்கிஷமோ, தங்கமோ அதை பயன்படுத்தினால்தான் மகிழ்ச்சியும் இன்பமும் வரும், செல்வத்தின் பலன் அதை செலவழித்து இன்பம் அடைவது. அந்த இன்பம் அதாவது பொருளால் வரும் இன்பமும் அன்னையின் ஆசீர்வாதம் என்கின்றார் பட்டர்

“பொருள் கொடுக்கும் போகமே” என்பதில் பட்டர் சொல்லவரும் இன்னொரு விஷயமும் உண்டு, உலகில் செல்வம் என கருதபடும் சில விஷயம் நாடு, இடம், சூழல் பொறுத்து சட்டென சரியும்

அக்காலத்தில் மாடுகள் பெரும் செல்வம் இன்று அவை பெரிதாக மதிக்கபடுவதில்லை, ஒரு காலத்தில் நல்ல மிளகு பெரும் செல்வம் இன்று அது அந்த அளவு அல்ல‌

அலுமினியம் கூட தொடக்கத்தில் செல்வம் என கருதபட்டது என்பார்கள்

சில நாடுகளின் கரன்ஸிகள் கூட செல்வமிக்கதாய் கருதபடும் ஆனால் நாளாவட்டத்தில் அவையும் பலனற்று போகும்

பட்டர் சொல்வது நிரந்தரமான செல்வம், எக்காலமும் விலை மாறாத பெரும் செல்வம்

அன்னை பெரும் போகத்தை தன் செல்வம் மூலம் கொடுப்பதால் அவளுக்கு “மஹா போகா” எனும் பெயரும் உண்டு

அடுத்து “அரும் போகம் செய்யும் மருளே” என்கின்றார்

மருள் என்றால் மயக்கம், “அறிவின்றி மயங்கி இருத்தல் மருள்” என்கின்றது புற நானூறு.

செல்வம் என்பது உலக மாயை, அந்த மாயையில் சிக்கும்பொழுது ஒரு மயக்கம் உண்டாகும் அந்த மயக்கம் கூட அன்னை தருவது என்கின்றார் பட்டர்

ஒரு குழந்தை ஆசைபட்டு கேட்பதை கொடுக்கும் தாய் அக்குழந்தை தான் கேட்ட விஷயத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்து கைவிடுதல் போல அன்னை மானிடருக்கு அவர்கள் விருப்பபடி மயக்கம் கொடுத்து தெளிய வைக்கின்றாள்

குழந்தை பனிகூழ் (ஐஸ்கிரீம்) கேட்கின்றது, தாய் அதனை மறுக்க்கின்றாள் ஆனாலும் குழந்தை பிடிவாதத்தால் கேட்கின்றது அதனை கொடுக்கும் தாய், ஐஸ்கிரீமால் சளி பிடித்தால் மருந்தும் கொடுப்பாள் அல்லவா?

அந்த நிலையினைத்தான் குழந்தை அடம்பிடித்து கேட்பதை தாய் கொடுப்பதைத்தான் “அரும் போகம் செய்யும் மருளே” என்கின்றார் பட்டர்

அன்னைக்கு “மஹா மாயா”, “மாயா” “சர்வ மோகினி” என்ற பெயர்கள் இருப்பதும் குறிப்பிடதக்கது

அப்படியே அடுத்த வரியில் “மருளில் வரும் தெருளே” என்கின்றார்

தெருள் என்றால் தெளிவு

தாய் குழந்தைக்கு மருத்து கொடுத்து அது தேடிய நோயினை தெளிய வைப்பாள் அல்லவா?, அப்படி மானிடரினை மாயையில் சிக்க வைப்பதும் அன்னை, அவர்களை தெளிய வைப்பதும் அன்னை என மருகுகின்றார்

அன்னைக்கு “விஞ்ஞானகலனா” என்றொரு பெயர் இருப்பதும் குறிப்பிடதக்கது.

அடுத்த வரியில் இன்னும் பாடுகின்றார் பட்டர்

“என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்” என்கின்றார் பட்டர்.

செல்வம் பூலோக வாழ்வுக்கு அவசியம், ஆனால் அதில் மட்டும் மூழ்கிவிட்டால் மனமானது ஆசை இருள் அடைந்துவிடுகின்றது, முப்பொழுதும் எல்லா நொடியும் அந்த ஆசை இருள் ஆன்மாவினை சூழ்ந்திருந்து ஆத்மாவினை இருளில் தள்ளி வைக்கின்றது

அந்த இருளை அகற்றி அன்னை பெரும் ஒளிதருகின்றாள், செல்வ மாயையிலும் அது கொடுக்கும் இன்பத்திலும் சிக்கி மனம் இருளடைந்து வழி தெரியாமல் தவிக்கும் ஆத்மாவுக்கு அன்னை ஒளியாக வருகின்றாள்

அன்னையின் மிகபெரிய கருணை இது, மானிட மனம் ஆசை இருளில் சிக்கி தவிக்கும் பொழுது ஒளியாக வந்து வழிகாட்டுவதெல்லாம் எவ்வளவு பெரும் கருணை? அந்த கருணையினை வார்த்தையால் சொல்லமுடியுமா? என உருகி தவிக்கின்றார் பட்டர்.

அன்னையின் அருளில் மூழ்கி அப்படியே கரைந்துவிடும் பட்டர், அவள் அன்பில் கடலில் உப்பாக கரையும் பட்டர் வார்த்தையின்றி தவிக்கின்றார்

இறுதியாக “அம்புதாயனத்து அம்பிகையே” என்கின்றார்

இதற்கு சந்திரன் மேல் இருக்கும் அன்னையே என பொருள்

இது சூசகமாக இன்னொரு தத்துவத்தையும் சொல்கின்றது, சந்திரன் தேய்ந்து வளர்ந்து மாறி மாறி வருவது போல் செல்வமும் தேயும் வளரும். செல்வத்தை கொடுப்பவளும் அவளே செல்வத்தை எடுப்பவளும் அவளே என்பது பட்டர் சொல்லவரும் தத்துவம்

இப்பாடல் செல்வத்தின் நிலையாமையினை குறித்து பாடபட்டது என்பது இன்னொரு கோணம், செல்வம் என்பது மாயை, செல்வத்தில் சிக்கி கிடப்பதும் மாயை

அன்னை செல்வம் கொடுப்பதும் அதன் பலனை கொடுப்பதும் ஞானம் பெறுவதற்கான ஒரு வழியே. திருமகளாக அன்னை செல்வத்தை அள்ளி கொடுப்பது பூலோக செல்வத்தின் பலன் நிலையில்லாதது அது கொடுக்கும் மகிழ்ச்சியும் நிலை இல்லாதது, நிலையான சந்தோஷமும் நிம்மதியும் இறைவனின் சன்னிதானம் என்பதை உணரவே செல்வத்தையும் அன்னை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றாள்

இதைத்தான் தத்துவரீதியாக சொல்கின்றார் பட்டர்

ஆக பாடலின் நேரடி பொருள் இதுதான்

“பொருள் எனும் செல்வமானவளே, செல்வத்தின் பயனான இன்பமும் ஆனந்தமும் தருபவளே, செல்வத்தால் மயக்கம் தருபவளும் நீ அந்த மயக்கத்தை தெளியவைத்து ஞானம் தருபவளும் நீ, மனதின் இருளை அகற்ற பெரும் ஒளியாய் வருபவளே, உன் அருளை நான் எப்படி சொல்வேன்? சொல்லும் வழியும் மொழியும் அறிகிலேனே நிலாவின் மேல் வீற்றிருக்கும் அன்னையே” என்பது

இதன் மறைமுக பொருள் என்னவென்றால் அன்னை செல்வத்தை கொடுப்பவள் செல்வத்தின் பலனையும் கொடுப்பவள். அதன் வழியாக செல்வம் நிலையற்றது நிரந்தரமானது அல்ல என்பதை தெரியவைத்து மனதில் ஞானத்தை கொடுத்து அந்த ஞானம் மூலம் ஆத்ம தெளிவினை கொடுத்து நிரந்தரமான இன்பமான பரம்பொருள் காலடியினை தேட வழி செய்பவள் அன்னை என்பது